Saturday, March 04, 2006

139. எங்கள் கல்லூரி…



படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல.

கல்லூரியின் 125-வது ஆண்டு விழா சென்ற வாரம் நடந்தது. மற்றொரு பெரிய, நகரை விட்டு 15கி.மீ. தள்ளியுள்ள புதிய வளாகம் ஒன்றில் -satellite campus - பெப்.24-ம் தேதி புதிய கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டது. அடுத்த நாள்: Commemoration Day - வரலாற்றைத் திரும்பி நன்றியோடு நினைவுபடுத்திக் கொள்ளும் நாள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியின் முதல் கட்டிடமான Main Hall கட்டி முடிக்கப்பட்ட 90-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருக்க நான் அழைக்கப்பட்டேன். ஒரு முழு நாள் விழாவின் முக்கிய இறுதிப் பகுதியாக ஓர் ‘ஒலி-ஒளி’ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அக்காட்சிக்கு அந்த மெயின் ஹாலே நிகழ்களமாக ஆக்கி, கல்லூரியின் முதல் இரு முதல்வர்களான (அமெரிக்கர்கள்) Zumbro and Wallace இருவரும் பசுமலையில் இருந்த சிறு கல்லூரியை வைகையின் வடகரைக்கு மாற்றுவது பற்றி பேசி, திட்டமிட்டு, முதல் கட்டிடத்தைக் கட்டி எழுப்பியதை ஒலி-ஒளி காட்சியின் கருத்தாகக் கொண்டு நடத்தினோம்.

இக்காட்சி பலருக்கும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிறப்பாக அமைந்ததற்குக் காரண கர்த்தாக்கள் இரு நண்பர்கள்: பேரா. பிரபாகரும், பேரா.சுந்தரும். நாற்பதே மாணவர்கள் படித்துவந்த அந்தக் காலத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொள்ளும் அளவிற்கு ஒரு கட்டிடம் கட்ட முனைந்த அந்த இரு பெரிய மனிதர்களின் ‘ஆவியே’ இறங்கி வந்ததால்தான் நிகழ்ச்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது என்று நண்பன் சுந்தர் சொல்வதுண்டு.அந்த விழாவின் வெற்றி ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் தொடர்ச்சியாகக் கொண்டாட வழிகோலியது.

சென்ற வாரத்தின் 25-ம் தேதி வழக்கம்போல் காலையிலிருந்து கொண்டாட்டாங்களின் நாளாக இருந்தது. வழக்கத்தை விட மாணவர்களின் கூட்டம் அதிகம். மதியம் ஒரு மணி முதல் மாலை 6மணி வரை நடத்தத் திட்டமிட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் 7 மணி வரை செல்ல, 7.30க்கு ஒலி-ஒளி நிகழ்ச்சி ஆரம்பித்தது. இம்முறை வாலஸ் மாணவர் விடுதி - Wallace Hostel - நிகழ்களமாக ஆனது. 7.30க்கு எல்லா விளக்குகளும் அணைந்த போது ஒரு சில விசில் சத்தங்கள். இருட்டில் 2000-க்கும் மேல் மாணவர்கள் இருக்கும்போது அதுகூட இல்லாவிட்டால் எப்படி? ஒரே ஒரு ஸ்பாட் லைட் எரிய கல்லூரி முதல்வர் அந்த ஒளி வட்டத்துக்குள் வர, மாணவர்கள் பகுதியில் இருந்து சத்தம். ஆனால், எல்லாமே ஏழெட்டு வினாடிகளுக்குத்தான். முதல்வரின் 4-5 நிமிட பேச்சுக்கு ஓர் அழகான அமைதி.



பிறகு ஒலி-ஒளி காட்சி. கல்வி என்பதே கைக்கெட்டாப் பொருளாக, உயர்சாதியினரின் உடைமையாக இருந்த ஒரு கால கட்டத்தில், சமூகத்தின் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடும், “In the service of God and people” என்ற தாரக மந்திரத்தோடும் உழைத்த பெருமக்களின் பரந்த மனத்தை, காலங்காலமாய் மெளன சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் இன்றைய மாணவர்களிடம் சாட்சி பகர்ந்தது; பெரிய ஞானிகளையும், விஞ்ஞானிகளை மட்டுமே உருவாக்குவதற்காக அல்ல இந்தக் கல்லூரி. தன் மடி மீது வரும் ஒவ்வொருவரையும் நல்ல மனிதனாய், மனித நேயனாய் மாற்ற முயலுவதே நம் முன்னோர்களின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நெருப்புப் பொறியை ஏற்றுவதே இந்தக் கல்லூரியின் நோக்கமும், ஆவலும் என்பது போன்ற வசனங்கள் பின்னால் ஒலிக்க இருண்ட பின்புலத்தில் ஒளியோடு பல காட்சிகள் நடந்தேறின.


‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

- என்ற முண்டாசுக்காரனின் வசனங்களோடும், திடீரென வெடிகள் மூலம் வானில் ஏற்படுத்தப் பட்ட வண்ணக் கோலங்களோடும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது அனைவரின் மனங்களும் உணர்வு வயப்பட்டிருக்க, அண்ணாந்து நோக்கிய முகங்களில் பெருமிதம் பூத்திருக்க விழா முடிந்தது. இந்த ஆண்டு நிகழ்ச்சி முழுமையாக பேரா. பிரபாகரின் மேற்பார்வையில், பழைய மாணவன் ஷண்முகராஜா (விருமாண்டியின் பேய்க்காமன்) -முயற்சியினால் நடந்தேறியது.

கடந்த ஒவ்வொரு வருடமும், இந்த நிகழ்ச்சிகளில் நான் பிரமிப்படைவது எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்த ஒலி-ஒளி காட்சிகளின்போது நடந்து கொள்ளும் விதமே. இந்த ஒலி-ஒளி நிகழ்ச்சிகளில் இளம் வயசுப் பசங்கள் கலாட்டா பண்ணுவதற்கேற்ற நேரமே. ஏனெனில் அவர்கள் வயது அப்படி; இருண்ட சூழல் வேறு. இருப்பினும் rising to the occasion என்பது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது; எந்த உணர்வு அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது எனக்கு இன்றுவரை பிடிபடுவதேயில்லை. அதுதான் எங்கள் கல்லூரியின் பாரம்பரியமோ…








Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 04 2006 10:34 pm Uncategorized edit this
24 Responses
sarah Says:
March 4th, 2006 at 11:44 pm e
Thank you sir for post

I am always proud to say that I studied in
“The American College”.

It was nice moments i spent in my life there, where i learnt a lot and still have connection with that in terms of my best teachers, batch mates , friends and juniors even after i left the college. We always have some close feelings when we hear that somebody is from American College.

Thank you for the photos

sarah

தருமி Says:
March 4th, 2006 at 11:55 pm e
sara,
“I am always proud to say that I studied in “The American College”.//

it is always this feeling among the alumni that gives a place of pride to this great institution.
- thank you.

கோ.இராகவன் Says:
March 5th, 2006 at 12:15 am e
அதனால்தான் தமிழ் சொல்லுது….”அன்ன யாவினும் புண்ணியம் செய்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…” அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.

அமெரிக்கன் கல்லூரியை நான் பலமுறை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். அது பற்றிப் பலர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லதொரு நினைவு கூறல்.

dharumi Says:
March 5th, 2006 at 9:14 am e
ஒரு சிறு பின் குறிப்பு:
24-ம் தேதி நடந்த புதிய வளாகத்திறப்பு விழாவிற்காக ஒரு சைக்கிள் பேரணி நடந்தது. கல்லூரியிலிருந்து மிகச் சரியாக காலை 6 மணிக்குப் புறப்பட்டு வழி நெடுக ஆசிரியர்கள் கண்காணிப்பில் இரண்டு இரண்டு பேராக யாருக்கும் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கண்ணியமாக நடைபெற்றது. விழா முடிந்த பிறகு இருபது இருபது மாணவர்களாகத் திரும்பிச் சென்றார்கள். அதிகாலை என்பதால் யாருக்குமே எந்த இடைஞ்சலும் இல்லை. வழியோ ஊருக்கு வெளியே.

ஆனால், அடுத்த நாள் தினமலரில் மாணவர்கள் ஊர்வலம் போக்குவரத்தை மிகவும் பாதித்ததாகவும், இது போன்றவை தேவையா எனவும் கேள்வி கேட்டிருந்ததாகக் கேள்விப் பட்டேன். பொறுப்பற்ற விதமாய் செய்திகள் தருவதென்பதே இவர்களின் வழக்கமோ என்று தோன்றியது.

இவர்கள் நடத்தும் கல்லூரிக்குத் தன்னாட்சிக் கொடுக்கப் பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள் தகவல். கல்லூரியையாவது நன்றாக நடத்த மாட்டார்களா என்றொரு ஆசை எனக்கு.

இளவஞ்சி Says:
March 5th, 2006 at 3:14 pm e
சும்மா போயிட்டு வந்த என்னோட காலேஜ் மேல 12 வருசம் ஆகியும் எனக்கு இத்தனை அட்டாச்மெண்டு இருக்கறப்ப 33 வருசம்னா உங்களுக்கு எவ்வளவு இருக்கும்?!!

இரண்டாவதா இருக்கற கல்லூரி போட்டோ சூப்பருங்க சார்!!

umarewa Says:
March 5th, 2006 at 5:44 pm e
chekkukkum sivalingaththirkum ,,,,,,,,,,,,

கைப்புள்ள Says:
March 5th, 2006 at 6:12 pm e
நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல? எனக்கும் அப்படி தான். அமெரிக்கன் கல்லூரி பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பேராசிரியர்.சாலமன் பாப்பையா அக்கல்லூரி பேராசிரியர் என்று கேள்விபட்டிருக்கிறேன். நடிகர் விவேக் அக்கல்லூரி மாணவர் என்றும் கேள்வி. உங்க காலேஜின் பழைய மாணவர்கள்(celebrities) பத்தி மேலும் சொல்லுங்களேன்.

செல்வன் Says:
March 6th, 2006 at 8:56 am e
பார்ட்னர்,

மதுரையில் உள்ள மிகப்பெரிய கல்லூரி என கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நேரில் பார்த்ததில்லை.அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி என ஒருவர் சொன்னார்.உண்மையா?அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?

vaheesan selva Says:
March 6th, 2006 at 1:20 pm e
வணக்கம் தருமி,

தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது.
தங்களைப்போலவே நானும் பல குழப்பங்களுக்குள்ளாகி இப்போது சற்றே தெளிவாகியுள்ளேன்.
நல்ல சிந்தனைகள். அதிலும் அதன் முடிவில் கண்ணதாசன் பாடல் வரிகளோடு இணைத்திருந்தீர்கள்.
மிக்க மகிழ்ந்தேன்.

தொடரட்டும் உங்கள் பணி….

வாழ்த்துக்களுடன்
வாகீசன்.

dharumi Says:
March 6th, 2006 at 2:32 pm e
முதல்வர் சாமுவேல் சுதானந்தா சொன்னது:

Sam, Thanks for sharing your comments with me. It was wonderful. Thanks once again. Sudanandha

தருமி Says:
March 6th, 2006 at 10:02 pm e
இராகவன்,
“அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.”//
- ஆனால், பல காலமா இருந்து வந்த விஷயமல்லவா அது. சொல்லப் போனால் அந்த எண்ணம் இன்னும் பலர் மனசில இருக்கே. “அவங்களால அவ்வளவுதான் முடியுமுங்க” அப்டின்னு சொல்லிக் கேட்டதில்லை?

தருமி Says:
March 6th, 2006 at 10:21 pm e
அதான் சொல்லவந்தேன் இளவஞ்சி.
இந்த ‘உறவுக்கு’ வெறும் 33 ஆண்டு மட்டுமே காரணம் இல்லை
…அதையும் தாண்டி…!
ஏன்னா இதவிட கூட வருஷம் இருந்திட்டு, திரும்பிப்
பாக்காதவங்களும் உண்டு.
இளவஞ்சி, கீழே ஒருத்தர் வாஹீசன் அப்டின்னு ஒருத்தர் புதுசா
வந்து பின்னூட்டம் போட்டிருக்கார்; அவர் ஃபோட்டோ போய் பாருங்க. அசத்தலா இருக்குல்ல அந்த தாடி. ஒரு information-தான். மற்றபடி ஒங்களுக்கு ஒண்ணும் suggest பண்ணலை!!!

தருமி Says:
March 6th, 2006 at 10:25 pm e
இளவஞ்சி.
அப்புறம் இன்னொரு விஷயம். அந்தக் கட்டிடம் நல்லா இருக்குன்னு சொன்னீங்களே. அது indo-saracenic architecture அப்டிங்கிறாங்க. இந்தக் கட்டிடம், சென்னை உயர் நீதிமன்றம், மைசூர் அரண்மனை இதெல்லாமே ஒரே ஆளால் வடிவமைக்கப்பட்டது என்று கேள்வி.

தருமி Says:
March 6th, 2006 at 11:03 pm e
மக்களே,
(வழக்கம்போல) தருமிக்கு ஒரு சந்தேகம்
மேலே உள்ள பின்னூட்டங்களில் இளவஞ்சி, உமாரீவா, கைப்புள்ள,செல்வன், வாகீசன் - இவர்களது பின்னூட்டங்கல் என் inbox-க்கு வராமலே, பின்னூட்ட மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தன.approve என்று கிளிக் செய்த பிறகு பின்னூட்டப் பகுதிகளில் தோன்றின.

ஆனால்..
ஷோலே பற்றிய பதிவில், பதமா அவர்களின் பின்னூட்டம் எனக்கு என் மயில் பொட்டியில் வராமல் நேராக மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தது. approve என்று கிளிக் செய்த பிறகும் இங்கு பின்னூட்டத்திற்கு வரவில்லை.
* ஏன் என் inbox-க்கு வராமல் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு நேரடியாக வந்தது?
* மட்டுறுத்தப் பட்ட பிறகும் ஏன் பின்னூட்டத்திற்கு வரவில்லை?
* முன்பு சில தடவைகள், சில பின்னூட்டங்கள் inbox-க்கும் வராமல், மட்டுறுத்தலுக்கும் வராமல் நேரடியாக பின்னூட்டத்தில் வந்து விட்டன. அது எப்படி?

என்னதாங்க நடக்குது…?

Kumaran Says:
March 7th, 2006 at 9:02 am e
நானும் பாத்திருக்கேன் சார். அமெரிக்கன் கல்லூரியில படிச்ச பசங்களுக்கெல்லாம் அவங்க காலேஜ் மேல ஒரு தனிவிதமான பெருமையான உணர்வு இருக்கிறத. என் நண்பர்கள் பல பேர் சௌராஷ்ட்ரா கல்லூரியில் தான் படித்தார்கள்; ஒரு நெருங்கிய நண்பன் உங்கள் கல்லூரியில் படித்தான். அவனுக்கு எப்போதும் தான் அமெரிக்கன் காலேஜில் படிக்கிறோம் என்று ஒரு தனிப்பெருமை. சௌராஷ்ட்ரா காலேஜெல்லாம் ஒரு காலேஜா என்று சொல்லிக்கிட்டே இருப்பான்.

dharumi Says:
March 7th, 2006 at 9:29 am e
umarewa சொல்லி இருக்கிறதுக்கு அவரோ அல்லது
வேறு யாராவது கொஞ்சம் ‘நோட்ஸ்’ போடுங்களேம்’ப்பா!

உமாரீவா, மொத மொத வரும்போதே இப்படி ‘கிளப்புறீகளே’; வாங்க அடிக்கடி. ஆனா என்னமாதிரி ஆளுக்குப் புரியறது மாதிரி சொல்லுங்க..சரியா?

கைப்புள்ள,
“நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல?”//-
- அவைகளை வெறும் கட்டிடங்களாகப் பாராமல், நம்ம வாழ்க்கையின் ஒரு பகுதியாகப்
பார்க்கும்போது நீங்க சொல்ற அந்த உறவு, பாசம் எல்லாம் வந்திருதில்ல.

dharumi Says:
March 7th, 2006 at 9:30 am e
பார்ட்னர்,

“அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?”
தெரியலை. ஏன்னா நாந்தான் அங்க படிக்கலியே!

ஆனா ஒண்ணு பார்ட்னர், பசங்க மட்டும் இருக்கிற கிளாஸ்ல பாடம் நடத்துறது மாதிரி co-ed-ல் கிளாஸ் எடுக்கிறது interesting-ஆக இருந்ததில்லை. ஜோக்குல இருந்து எல்லாம் யோசிச்சு சொல்லணும். free flow will be the first victim in combined classes for a (நம்மள மாதிரி)teacher! (ஆமா, நீங்க எப்படி? என்னமாதிரி இல்லாம நல்ல வாத்தியாரா இருப்பீங்கல்ல? இருங்க!)

dharumi Says:
March 7th, 2006 at 9:32 am e
வாகீசன்,

புதிதாக வந்திருக்கிறீகள். நன்றி.
உங்க வீட்டுக்குப் போய் பார்த்தேன். சின்ன programmer அப்டின்னுட்டு IBM test அது இதுன்னு கலக்குறீங்க…நல்லா இருங்க. வந்து போய் இருங்க..நானும் அங்க வர்ரேன்.

உங்க தாடி பத்தி மேல ஒரு comment போட்டுருக்கேன்; பாத்தீங்களா? it suits you quite well !

dharumi Says:
March 11th, 2006 at 2:12 pm e
குமரன்,
அது உண்மைதான். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வேலை செய்ற வாத்தியார்களுக்கும் அந்த ‘நினப்பு’ உண்டு.

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இன்னொரு கல்லூரிக்குச் சென்றிருந்த போது, நான் ஒருவருக்கு அறிமுகம் செய்யப் பட்டேன். அந்த ஆங்கிலத்துறை ஆசிரியர் ரொம்ப காஷுவலாக ‘hi’ என்றவர்,He is from American College’என்றதும் எழுந்து நின்று மரியாதை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து, முகமன் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் - பெண்கள் கல்லூரி உட்பட - இந்த வேறுபாடு பல்லாண்டுகளாகவே உண்டு.

srishiv Says:
March 12th, 2006 at 1:41 pm e
உண்மைதான்
கௌதம்ராஜ் சரிதம் புத்தகத்தில் படித்ததாக நினைவு???? அது திருநெல்வேலி கல்லூரி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி என்றுநினைவு, என் சித்தப்பாவும் அங்கு பயின்றவர்தான், அதன்பின்னர் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பொறியியல் பயின்று திருநெல்வேலி தலைமை பொறியாளராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்
ஸ்ரீஷிவ்….:)

Rajan Says:
March 14th, 2006 at 11:15 pm e
Dear Dharumi

Is Pera.Sundar is our Kaa.Sundar?

Regards
Rajan

தருமி Says:
March 15th, 2006 at 9:20 am e
ராஜன்,
வேற யாரு…நம்ம ஆளு,தாடிக்கார காளி சுந்தரேதான். what an effort! and what an achievement! it was simply superb and the credit goes to those two guys out and out.

ஜோ Says:
March 15th, 2006 at 9:50 am e
நன்றி தருமி உங்கள் பகிர்வுக்கு.

150 வருடங்களை கடந்துவிட்ட எங்கள் திருச்சி ஜோசப் கல்லூரி நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்.

தருமி Says:
March 15th, 2006 at 12:05 pm e
மூத்தவங்களே ஜோ,
நன்றி..
பின்னூட்டம் மட்டும் போடறது; இப்போதைக்கு (தவ முயற்சியோ?)எழுதறதில்லைன்னு முடிவா?

2 comments:

James said...

ஹலோ தருமி Sir,

//படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல //

நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை. அமெரிக்கன் கல்லூரியில் படித்த அந்த 3 ஆண்டுகள் தான் என் வாழ்வின் பொற்காலம்.

James said...

ஹலோ தருமி Sir,

//படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல //
நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை. அமெரிக்கன் கல்லூரியில் படித்த அந்த 3 ஆண்டுகள் தான் என் வாழ்வின் பொற்காலம்.

Post a Comment