Sunday, November 26, 2006

190. அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா...

*


அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா... இதில் எது சரி?


வலது பக்கம் ஓட்டுப் பொட்டி இருக்கு; ஒண்ணு போட்டுட்டு போங்க...

கல்யாணமான புதிதில் கட்டிய மனைவியை 'வாங்க..போங்க'ன்னு மரியாதையா பேசணும்னு பெரியார் சொன்னதாக வாசிச்சப்போ, 'அதெல்லாம் எதுக்கு..வயசு நம்மளவிட கம்மி, அதுக்குப் பிறகு வாங்க போங்கன்னு எதுக்குச் சொல்லணு'ம்னு நினைச்சேன். ஆனால் இப்போவெல்லாம் எல்லோருமே மனைவியைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும்போது மனைவிக்கு மரியாதை கொடுத்தே பேசுவதைப் பார்க்க முடிகிறது. நல்ல பழக்கம்; நானும் மாறிட்டேன். என்ன அவர் சொன்னதை நாம் ஏத்துக்கிறதுக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கு.ஆனா அத சொல்றதுக்காக இப்போ இந்தப் பதிவை எழுதவில்லை.

அடுத்து இன்னொரு விஷயம். அந்த என் சின்ன வயதில் பல படித்த குடும்பங்களில் (படிக்காவிட்டாலும்தான்) டாடி,மம்மி என்று அப்பா அம்மாவைக் கூப்பிடுவது ஃபாஷனாக இருந்தது. எப்படியோ அதுவும் நல்லபடியாக அப்பா, அம்மாவாக மாறிப்போச்சு.

அடுத்து பார்த்த ஒன்று; இது கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான் - பிள்ளைகளைப் பெற்றோர்களே 'வாங்க..போங்க; என்று பேசுவது. சின்னக் குழந்தைகளைக் கூட. இதற்குக் கொடுக்கும் காரணம்;நாமே மரியாதை கொடுத்துப் பிள்ளைகளிடம் பேசுவதால் அவர்களும் அதேபோல் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் எல்லோரையும் மரியாதையாக பேசிப் பழகுவார்கள் என்பது. இதுவும் நன்றாக இருக்கிறது. அதுபோன்ற குழந்தைகள் மற்றவரைப் பற்றிப் பேசும்போது நாகரீகமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக எல்லா மாணவர்களும் தங்களுக்குள் பேசும்போது ஆசிரியர்களை எப்படிப் பேசுவார்கள் என்பது தெரியுமே. இந்தக் குழந்தைகள் எல்லோரையுமே நேரில் பேசும்போதும் சரி, மற்றபடியும் சரி நல்லவிதமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படி நிஜ வாழ்வில் நல்ல விஷயங்களாக சிலவைகள் மாறி வருவதை பார்க்க முடியும் அதே நேரத்தில் நம் திரையுலகில் இது அப்படியே உல்ட்டாவாக நடந்து வருகிறது ஏனென்று தெரியவில்லை. அதிலும் பெரிய திரையையும் விட சின்னத்திரையில் இது மிக அதிகமாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் சின்னத்திரை நம் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட நிலையில் சினிமாக்களை விடவும் சின்னத்திரை சீரியல்களே நம்மை, அதுவும் நம் குழந்தைகளை மிகவும் நேரடியாகப் பாதிக்கும் சூழல் உள்ளது. ஏனென்றே தெரியவில்லை - நம் சின்னத்திரை இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் பலவற்றிலும் சின்னக் குழந்தைகளோ, வளர்ந்த பிள்ளைகளோ தங்கள் அப்பா, அம்மாவை ஒருமையில் அழைத்துப் பேசுவதாகவே காண்பிக்கிறார்கள். பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, 'நாங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கிறோம்; நடப்பதைத்தான் காட்டுகிறோம்' என்று சொல்லி தப்பிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஓரிரு சமூகங்களில் பெற்றோரை, குறிப்பாக அம்மாவை ஒருமையில் அழைப்பது பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் பெரும்பான்மையான சமூகங்களில் பெற்றோரை மரியாதையோடு அழைப்பதையே பார்க்கிறோம். பின் ஏன் நமது இயக்குனர்கள் இப்படிக் காண்பிக்கிறார்களோ தெரியவில்லை.

நம் சீரியல் இயக்குனர்களுக்குப் பெரிய சமூகக் கடமை இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் இல்லாத ஒன்றை ஏன் இப்படி பிரபலப்படுத்துகிறார்கள்? அப்படியே ஏதோ ஒரு சமூகத்தில் இருக்கிறது என்றாலும் பெரும்பான்மை சமூகங்களில் இருப்பதைப் பிரதிபலிக்கக் கூடாதா? ஏன் அந்த சிறுபான்மை மக்களின் வழக்கத்தை எல்லோரின் வழக்கமாக மாற்றும் முயற்சியா இது? இந்த சீரியல்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இதை கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? இரண்டு options இருக்கும்போது அவர்கள் ஏன் தவறான ஒன்றை இப்படி இறுகப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டுமோ தெரியவில்லை.

யாராவது அவங்ககிட்ட இதைச் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

*
ஓட்டு போட்டுட்டீங்களா?
*

Thursday, November 23, 2006

189. சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள்..

.
.

THE HINDU தேதி: 23.11.'06



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்...

* சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6% மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக
மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு
இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்?
(சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற
பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே
மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது
போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%;
அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த
மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?
மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா
ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான்.
அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை
உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால்
கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ்
கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்...



*

*

Monday, November 20, 2006

188. கொசுறுகளின் தோரணம்

.


.

கொசுறு: 1

இந்த கொசுறுவிற்கு கீழேயுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

ரோட்டுல நடக்க உடுங்க, சாமிகளா..

எங்க ஊரு நல்ல ஊரு...

விவேக்தான் உதவிக்கு வரணும்...



நித்தம் நித்தம் நான் அனுபவிக்கிறதை வேற எங்க போய் கொட்டித் தீர்த்துக்க முடியும், சொல்லுங்க... அதான் இங்கன வந்திட்டேன்.

எங்க ஊர்ல பாத்திமா பெண்கள் கல்லூரியிலிருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை இருக்கே அதுவரைக்கும் ஒரு ரோடு போகும். சென்னைக்கு கிருஷ்ணாம் பேட்டைன்னா என்னன்னு எல்லோருக்கும் தெரியும்; சென்னைக்கு  கண்ணம்மா பேட்டை மாதிரி எங்க ஊரு மதுரையில 'தத்தனேரி'ன்னா எல்லாருக்கும் தெரியும். அந்த தத்தனேரி இந்த ரோட்டின் நடு செண்டரில் இருக்கு. இந்த தத்தனேரியிலிருந்து தேவர் சிலை வரை உள்ள ஏரியா செல்லூர். topography புரிஞ்சிதா? இப்பகுதியில் ஒரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். என் தலைவிதி நித்தம் 4 - 6 தடவை அந்த தத்தனேரியைக் கிராஸ் பண்ணியாகணும். (கிராஸ் பண்ணிதான போற; நேர அங்கேயேவா போய்ட்ட? - அப்டின்னெல்லாம் கேக்கப் படாது.) அடக்கமெல்லாம் நம்மள பண்ணப்படாது; இது மாதிரி எரிக்கத்தான் வேணும் அப்டின்னெல்லாம் நினைச்சுக்கிட்டு, நம்ம இங்க வரும் போது எப்படி இருக்கும் (அப்ப உயிரோடு இருக்கிறவங்களுக்குத்தான்..) யாரு யாரு வருவாங்க; என்னென்ன பேசுவாங்க; பாவம், அவங்க, நல்லதா பேசுறதுக்கு எதுனாச்சும் அவங்களுக்கு இருக்குமா; பாய்ண்ட்ஸ் கொடுத்திருக்கமா? அப்டின்னெல்லாம் சுகமா கற்பனை பண்ணிக்கிட்டு போறதுதான் வழக்கம். ஆனா, பல நாளு இந்த மாதிரியெல்லாம் சுதந்திரமா கற்பனையெல்லாம் பண்ண முடியாதபடி சில விஷயம் நடக்கும் பாருங்க..அதுவும் தத்தனேரி - செல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் அந்த விஷயங்களைப் பத்தி சொல்லத்தான் வந்தேன்.

பழுத்த பழம் செத்தா கல்யாணச் சாவு அப்டின்னு நம்ம ஊர்ல அந்த மாதிரி சாவையே பல மக்கள் ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க..அதெல்லாம் சரிதான். கொண்டாட்டத்தை வீட்டுக்குள்ள - அட்லீஸ்ட், தெருவுல வச்சிக்கிட்டா நான் இங்க வந்து ஏன் பிலாக்கணம் பாடப் போறேன். சரி...பெருசா பாடையெல்லாம் ஜோரா கட்டுங்க...மேளதாளத்தோட தூக்கிட்டுப் போங்க...அட, அதுக்காக உங்க வீட்டு இழவ ரோட்டுல போற எல்லாரு மேலயும் எதுக்கு ஏத்தணும்னு தெரியலையே.சமீபத்தில நடந்த ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்றேன்; கேளுங்க.

இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னால..காலையில எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் போற நேரம். இவங்க குரூப் ஒண்ணு வருது. வழக்கம்போல பேயாட்டம் போட்டுக்கிட்டு மொதல்ல ஒரு 'வாட்டர்' கூட்டம். தடுக்கிறதுக்கோ,அடக்கி வைக்கவோ சில சமயங்களில் இந்த மாதிரி குரூப்புகளோடு நல்ல மனுசங்க நாலஞ்சு பேரு வர்ரது உண்டு. அன்னைக்கி அப்படி ஒரு புண்ணியாத்மா யாரும் வரலை. வழியில் உயிரைக் கைல பிடிச்சிக்கிட்டு மனுச சனம் ஒதுங்கி நிக்குது. பாடையில இருக்கிற பூவையெல்லாம் பிச்சி கூட்டத்தை  நோக்கி எறிஞ்சிக்கிட்டு வாராங்க. எனக்கு சைடுல ஒருத்தரு அவரு மகளை பைக்ல பின்னால உக்கார வச்சிக்கிட்டு நிக்கிறாரு..காலேஜுக்கு பொண்ண கொண்டு விடப் போறது மாதிரி இருக்கு. நம்ம ஆளுங்களுக்கு மூடாய் போச்சு..ஒரு மாலை.. பாதி பூ.. பாதி நாறு..எடுத்து அந்தப் பொண்ணு மேல எறியறான் ஒருத்தன்.. பாவம், பொண்ணு மேல போய் நச்சுன்னு மூஞ்சில விழுது...அந்த நாய் - sorry, அந்த boy - சிரிக்கிறான். இது பத்தாதுன்னு ரெண்டு பசங்க - அந்தக் கூட்டத்த சேந்த கேசுகள்தான்.. பைக்ல வித்த காமிக்க ஆரம்பிச்சிட்டான்...என் வண்டிக்கு நேர, அது என்ன.. கார்ட்டிங்கா இல்ல வீலிங்கா..அது மாதிரி ஏதோ கோணக்க மாணக்க பண்ண, வண்டி என் வண்டிக்கு நேர வர்ரது மாதிரி இருந்தது.. சரி..இன்னைக்கு நம்ம மாட்னோம்டான்னு நினச்சேன்.. நல்ல வேளை ..**** வண்டியிலிருந்து விழுந்ததுகள்.சந்தோஷமா இருந்திச்சி (இப்படியெல்லாம் அடுத்தவன் உழுறது பாத்து சிரிக்கப் படாதோ? மனுசத்தனம் இல்லாம பேசப்படாதோ..?) ஆனா ஒண்ணும் அடி படலை..கொஞ்சம் வருத்தம்தான்.

நாலஞ்சு மாசத்துக்கு முந்தி ஒரு தடவை... இந்த மாதிரி ஒரு இழவு ஊர்வலம்.. சிவனேன்னு ஓரத்தில நின்னுக்கிட்டு இருக்கேன். இவங்க போடற மாலைக்குப் பயந்து கண்ணாடிய ஏத்தி உட்ருந்தேன். எதிர்த்தாற் போல் வந்த ஊர்வலத் தலைவர்களில் ஒரு சுள்ளான்; இருவது வயசுகூட இருக்காது. நான் கண்ணாடிய ஏத்தி உட்டது பாத்துட்டான். அது அவனுக்குப் பிடிக்கலை. டேய்! கண்ணாடிய ஏத்திக்கிட்டுதான் வருவீகளோ அப்டின்னு கத்திக்கிட்டு பானட்ல ஓங்கி அடிக்க வந்தான். நம்ம வண்டிதான் சோப்பு டப்பாவாச்சே; வேகமா ஒரு வேப்பங்காய் விழுந்தாலும் 'டொக்' விழுகிற டப்பா. அவன் அடிக்கிற அடியில அப்படியே பள்ளம் விழுகப் போகுது; டிங்கரிங், பெயிண்டிங் அப்டின்னு அஞ்சு பத்து செலவாகப் போகுதுன்னு நினச்சிக்கிட்டேன். நல்ல வேளை ஒரு ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன்; அவர்தான் அந்தக் கூட்டத்துக்கு கண்ட்ரோலர் போலும். சடார்னு அவன இழுத்துட்டுப் போய்ட்டார். பெரிய மனசு பண்ணி, பொழச்சுப் போ அப்டின்னு அந்த ** சொல்லிட்டு போயிரிச்சி. அப்பாடான்னு எனக்கும் ஆச்சு. அந்த வழியே அடுத்த அரைமணி நேரத்தில திரும்பி நான் வந்துகிட்டு  இருக்கும்போது அதே குரூப் இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **.

இன்னொரு வகை வீர திலகங்கள் இந்தக் கூட்டத்தில உண்டு. சரவெடி போடுவாங்க.. சரி, ஒழியுது.. ஓரத்தில நின்னு பொறுத்திருந்து போயிடலாம். சில நாய்ங்க -ச்சீ..பாய்ஸுங்க - லஷ்மி வெடியா, யானை வெடியா..? அத கையில வச்சிக்கிட்டு பத்த வச்சி கூட்டத்துக்குள்ள எறிஞ்சி ஒரு தடவ பாத்தேன். என்ன கெக்கலிப்பு அப்போ!

இதில அந்த ரோட்ல இருக்கிற ரயில்வே கிராஸிங்கல எப்பவும் ஒண்ணு ரெண்டு போலீஸ்காரங்க நிப்பாங்க. அவங்க ஏதாவது சொல்லணுமே! ஹு.. ஹும்.. ம்ம் ..கண்டுக்கிறதேயில்லை. ஏதோ அவங்களும் அந்தக் கூட்டத்து சொந்தபந்தம் மாதிரி எமொஷனலா இழவு காத்திருவாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல.. நமக்கில்ல அறிவு வேணும். எல்லாத்துக்கும் போலீஸ்காரவுங்களா குச்சிய தூக்கிக் கிட்டு வருவாங்க?

நான் சொல்ற இந்த ரோட்டுல இன்னொரு விசேஷம் என்னன்னா, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்சச போஸ்டர்கள் - flex boards - இருக்கும். கல்யாணம், காது குத்து, வீடு திறப்பு, இப்படின்னு எதுக்கும் ஒரு போஸ்டர். அதிலெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. நல்லா இருக்கும்; பொம்பிளையாளெல்லாம் கழுத்து மறைய நகை நட்டு...(அதப் பார்த்ததும் கந்துவட்டின்னு மனசுல ஒரு எண்ணம் வர்ரதையும் சொல்லியாகணும். அது சரியோ தப்போ தெரியாது.) ஆம்பிளைங்க கொடுக்கிற போஸ், அந்த செல்போன் பேசிக்கிட்டே கொடுக்கிற போஸ் எல்லாம் நல்லா ரசிக்கலாம். என்ன, சில சமயம் பொண்ணு மாப்பிள்ளைய பாத்தா பெத்தவங்க மாதிரி தெரியும். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, பாத்து ரசிக்கலாம்.

ஆனால் என்ன, நடிகர் விவேக் இதெல்லாம் நல்லது இல்லை; இதுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய முடியுமான்னு தீபாவளியப்போ சன் டி.வி.யில கலைஞரிடம் விசனப்பட்டு கேட்டார்.அதனால அவர கூப்பிட்டு, இந்த போஸ்டர் சமாச்சாரம் எல்லாம் எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். இந்த இழவு சமாச்சாரத்தை நீங்கதான் கொஞ்சம் மக்கள்ட்ட சொல்லி "அவரவர் இழவு அவரவருக்கு" என்ற ஒரு நல்ல philosophy -யைச் சொல்லி இந்த மக்களை நீங்கதான் திருத்தணும்னு கேக்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.

விவேக் சொன்னா கேப்பாங்க; என்னதான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரர் சொல்றார்னு ஒரு மரியாதை இருக்காதா,என்ன?


.

.




கொசுறு: 2

இந்த ரோட்டின் ஒரு முனையில் பாத்திமா பெண்கள் கல்லூரி இருக்கிறது. இதன் பக்கத்தில் ஒரு traffic island - மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம். சிக்கலான போக்குவரத்து உள்ள பகுதி. கொஞ்ச வருஷத்துக்கு முந்தி எந்த ஒழுங்கு முறையும் சரிப்படுத்தாத நிலை இருந்தது. பாவம், ஒரு சின்ன வயது வாலிபர்; புதிதாக வாங்கிய பைக்கில் அந்த இடத்திலேயே விபத்தில் இறந்தார். அந்த விபத்திற்குப் பின் போலீசார் அந்த இடத்தில் போக்குவரத்தைச் ஒழுங்கு படுத்தினார்கள். அதிலிருந்து இதுவரை நன்றாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை கொஞ்சம் சீர் செய்தார்கள். islands-க்கு நடுவில் இடம் விரிவாக்கப் பட்டது. எல்லாம் செய்தார்கள். ஆனால் sign boards எதுவும் கிடையாது. போலீஸ் எதுவும் கிடையாது. இப்போது நம்ம ஊரு வழக்கமான free for all -தான். யார் யாருக்கு எந்த வழி பிடிக்குதோ அந்தப் பக்கம் போய்க்கொள்ளலாம்.எப்போது மற்றொரு விபத்து நடக்குமோ தெரியாது. போக்குவரத்து காவலர்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறார்களோ என்னவோ. விபத்து என்று ஒன்று நடந்தால்தான் மறுபடி ஒழுங்கான விதிமுறைகளும்,sign boards-களும் வைத்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். எங்களில் யார் தலையில் அந்த ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ; யாருக்குத் தெரியும்?



கொசுறு: 3

இந்த ரோட்டில் ஐந்தாறு இடங்களில் road divider - ஆக காலி பீப்பாய்கள் வைக்கப் பட்டுள்ளன. keep left அப்டிங்கிற அடிப்படை சாலை விதியை எல்லோரும் மதிக்கவேண்டுமென்றுதான் இந்த பீப்பாய்கள் ரோட்டின் 'நடு செண்டரில்' வைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் நம் மஹா ஜனங்களில் மிகப் பெரும்பான்மையர் அப்படி நினைப்பதில்லை போலும். யாரும் - போலீஸ் வாகனங்கள் உட்பட - இதை லட்சியம் பண்ணுவதாகத் தெரியவில்லை. இதுவரை இரு முறை போலீஸ் வாகன ஓட்டிகளிடமும், பலமுறை மற்ற வாகன ஓட்டுனர்களிடமும் சண்டை போட்டிருக்கிறேன் - எந்த வித பயனுமின்றி! அதில் என்ன அவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை. keep left என்ற விதியை மீறுகிறோம் என்பதைத் தவிரவும் அவர்களுக்கு இதிலெந்த வித பயனும் இல்லை; இருந்தும் பலரும் அதை 'தவறாது' செய்வதைப் பார்க்கும்போது, விதியை மீறும் "சுகத்துக்காகவே" நம் மக்கள் அப்படி செய்வதாகத்தான் தோன்றுகிறது. Is it a sort of adventurism? விதியை மீறுகிறோம் என்பதில் நம் மக்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்து விட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.



கொசுறு: 4

சாலையை இடது, வலது என்று பிரித்து வைக்கத் தான் இந்த பீப்பாய்கள் இருக்கின்றன என்ற நினைப்பில் இன்னும் இருக்கிறேன். ஆனால் இந்த பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் சரியாக பஸ் ஸ்டாப்புகளும் அனேகமாக உள்ளன. அரசு பேருந்துகள் சரியாக இந்த பீப்பாய்கள் இருக்கும் இடத்தில் நின்று, முழுமையாக ஒரு பக்க சாலையை அடைத்து விடுகின்றன. எனக்குள்ள பல நாள் சந்தேகங்கள் - இந்த பேருந்துகளின் ஓட்டுனர்களுக்கு சாலையை முழுவதாக மறித்து வாகனத்தை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்குமே என்ற நினைவு எப்படி வராமல் போகும்?அவர்களூம் வழிமறித்து யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் எரிச்சல் படத்தானே செய்வார்கள். பின் எப்படி அவர்களுக்கு 'தங்களின் முதுகு' தெரியாமல் போகிறது? ஆச்சரியமாகததான் இருக்கிறது. அட, பீப்பாய் இருக்கும் இடத்திலிருந்து சிறிது முன்னேயோ, பின்னேயோ இந்த பஸ் நிறுத்தங்களை வைக்க வேண்டுமென்ற எண்ணம் கூட இந்த போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதென்ன?

யாரைத்தான் நொந்து கொள்வது? - பஸ் நிறுத்தங்களை சரியான இடங்களில் வைக்காமல் இருக்கும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளா? இல்லை, இடத்திற்கு ஏற்றாற் போல் வாகனங்களை முன்னேயோ பின்னேயோ நிறுத்த மனமில்லாத அரசு போக்குவரத்து வாகன ஓட்டிகளா, இந்த பீப்பாய்கள் வைக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் இஷ்டத்திற்கு வண்டிகளை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளா - யாரைத்தான் நொந்து கொள்வது...?


.
.

Thursday, November 09, 2006

187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில்

.

.


* the Catch-22 is a no-win situation, much like the "damned if you do, damned if you don't" scenario.

.

// பொதுவாக குழந்தைகளின் மனதில் சிறுவயதில் விதைக்கப்படும் விஷயம் நெடு நாட்களுக்கு பதிந்தே இருக்கும். இதனை மனதில் கொண்டு வி.ஹெச்.பி/ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், இசுலாமிய, கிருஸ்துவ அமைப்புகள் சிலவும் காய் நகர்த்தி வருகின்றன.// - எஸ்.பா.

மதங்களைப் பற்றிய என் பதிவுகளின் முதல் பதிவின் முதல் பாராவிலேயே இதைப் பற்றியெழுதியுள்ளேன். ஆனால் அது உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றான ஒரு கருத்தாக இருக்கும்.

இந்து மத தீவிரவாத அமைப்புகள் பலப்பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ள தென்னவோ உண்மைதான். நானே சின்ன வயதில் மதுரையில் சாரணர்கள் மாதிரி காக்கி உடை அணிந்து, கையில் ஒரு குச்சியுடன் physical exercises செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த பகுதியில் ஒரே ஒரு சமூகத்தினர் மட்டுமே மதுரையில் இந்த அமைப்புகளில் இருந்தனர். it was a very very low key affair. ஆனால், அவைகளின் கொள்கைகளும், தீவிரத்தன்மையும் வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதற்கு ஆதரவு பெருகியதும் மிகவும் சமீபத்திய விளைவுகளே.

இதை 'விளைவு' என்றே கருதுகிறேன்.கிறித்துவமும், இஸ்லாமும் அவைகளின் போதனைகளுமே இதற்குரிய காரணிகளாக நான் நினைக்கிறேன். அவர்களும் இதை நினைத்துச் செய்வதில்லை. அவர்களின் மதக் கோட்பாடுகளைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருகிறார்கள். அவ்வளவே. ஆனால் அந்த மதங்கள் ஏக இறையியல் என்ற கோட்பாடு கொண்டதாகையால் இந்தப் பிரச்சனைகள்.

இந்து மதத்தினரில் இரு வகையுண்டு; ஒரு குழு தீவிரவாதக் குழு; இரண்டாவது அப்படி இல்லாத - மதங்களின் மேல் அளவுக்கதிகமான தீவிரமோ, ஈடுபாடோ இல்லாத பெரும்பான்மையோர். நீங்கள் பலர் இதில் இரண்டாவதில் வருகிறீர்கள்; இல்லையா? ஆனால், நான் சொன்ன இரு மதங்களில் இந்த இருவேறு கூட்டம் இருக்க முடியாது. அவர்கள் எல்லோருமே மதங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணம், செயல் கொண்டவர்கள்;(இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. - ஜோ.) சிறுவயது முதலே அப்படி ஆக்கப் படுகிறோம். என் சின்ன வயதில் இன்னும் இந்துக்களாக இருக்கும் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துப் படைக்கப் பட்டவைகளை நான் தொடவும் மறுத்து விடுவது மட்டுமல்லாமல், 'இது பிசாசுக்கு வச்சது; சாப்பிடக் கூடாது; நான் சாப்பிட மாட்டேன்' என்று சொன்னதும் - அப்படி எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்தது - நினைவிலிருக்கிறது. இதில் முக்கிய அம்சம் - அந்த மதக்காரர்களைப் பொறுத்தவரை அது சரி;அதுதான் சரி. அதுவே அந்த மதங்களைப் பின்பற்றுவதற்குறிய அடிப்படை முறை. For them, it is NOT fundamentalism; instead they are the basic tenets of their respective religions.

//மத நச்சு விதைகளை எல்லா மதத்தின் அடிப்படைவாதிங்ஏளும் பிள்ளைகளுக்கு விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.- ப்ரியன்.//

இதை நீங்கள் எப்படி 'நச்சு விதை' என்று கூறலாம்?
- ஒரே கடவுள் என்று சொல்லிக் கொடுப்பது தவறா?
- எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள்; எங்கள் வேதம்தான் உண்மையான வேதம். அதைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுப்பது எப்படி தவறாகும்'?
- இது நல்வழி என்று காண்பிக்கும்போது மற்ற வழிகள் சரியான வழிகள் மட்டுமல்ல; தவறான வழியுமாகும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டாமா?
- பிள்ளைகளுக்கு வெறும் விஞ்ஞானக் கல்வி மட்டும் போதுமா?
- அவர்கள் தங்களைப் படைத்தவர் யார்? எதற்காக நம்மைப் படைத்தார்? அவரை மகிழ்விக்க நாம் எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன செய்யலாம்; எதையெல்லாம் செய்யக் கூடாது? என்றெல்லாம் சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டியது பெற்றவர்களின் முதல் கடமையில்லையா?

- இதுதான் ப்ரியனின் கூற்றுக்கு இந்த மதத்தினரால் கொடுக்கப்படும் பதிலாக நிச்சயமாக இருக்கும்

“What is sauce for the goose may be sauce for the gander, but it is not necessarily sauce for the chicken, the duck,.............!

ப்ரியனுக்கு 'நச்சு விதை'யாகத் தோன்றுவது அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக, வாழ்வின், மதத்தின் அடிப்பைடை விஷயமாகத் தெரிகிறதே. கடவுளை - எங்கள் கடவுளை - அவர் சொன்ன காரியங்களை அச்சு பிசகாமல் பின்பற்ற நாங்கள் மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் கூற முடியும்? அதுவும் கிறித்துவ மதத்தின் 10 கட்டளைகளில் -அவைகள் மதத்தின் ஆதாரமான, நல்வழிப்படுத்துதலுக்கானது - முதல் கட்டளையே 'என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை' என்பது. இதைச் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? இதேபோல் இஸ்லாமில் என்னவென்று தெரியாது; ஆனால் 'இணைவைக்காதே' என்ற தத்துவத்தை அவர்கள் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? அந்த மதத்துக்காரர்களால் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு
சமயக் கல்வி தராது இருக்க முடியாது. அவ்விதமான கல்வி தரும்போது, அடுத்த மதக் கருத்துக்கள் தவறு; நம் வழியே நல்வழி மட்டுமல்ல - ஒரே நல்வழி என்று சொல்லாமல் இருக்க முடியாது.நான் கூறுவதில் நம்பிக்கையில்லையெனில், நம்பிக்கையாளர்களைக் கேளுங்கள். நிச்சயமாக நான் சொல்வதோடு அவர்கள் ஒத்துப் போவார்கள்.
(அப்பாடா! ஒரு வழியாக நம்பிக்கையாளர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப் போவார்கள் !)

//புத்தக மூட்டையையும், பாடச்சுமைகளையும் தூக்கி சோர்ந்து போய் இருக்கும் குழந்தைகளை மதமென்னும் மாயவலைக்குள் தள்ளுவதை பெற்றோரும் மற்றோரும் விட்டொழிக்க வேண்டும். - எஸ்.பா.//

எப்படி? ஒருவேளை, 'சமயக் கல்வியைச் சிறு வயதிலேயே கொடுக்காமல் விட்டு விட்டு, நாலையும் புரிந்து கொள்ளும் வயதில் அவர்களாகவே தங்கள் தங்கள் விருப்பம் போலும், கருத்து படியும் ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியுங்களேன்' என்று யாரேனும் சொன்னாலும், அதிலும் ஒரு குறையுண்டு. ரெண்டும் கெட்டான் வயதென்று சொல்லும் அந்த பதின்ம வயதில்தான் மனிதனுக்கு மதத்தின் முக்கியம் அதிகம். மதங்கள் நல்லது சொல்லி மனிதனை நல்வழிப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயமாக நான் என் மதப் பதிவுகளில் கூறியபடி நல்லாவே பயங்காட்டும் பூச்சாண்டிகளாகப் பயன் படுகின்றன. fear of god is the beginning of wisdom என்ற ஒரு பைபிள் வாக்கியம் இங்கு நினைவுக்கு வருகிறது. இந்துக்களின் அடுத்த பிறவி கீழ் பிறவியாகி விடும் என்ற தத்துவமோ, கிறித்துவர்களின் நித்திய நரகம் என்றோ, இஸ்லாமியர்களின் gehenna என்றோ ஒன்றை வைத்துப் பயமுறுத்தி, மக்களை நல்வழிப்படுத்த முயலும் முயற்சி இந்த இளம் வயதிலேயே கொடுக்கப்பட்டால்தான் கொஞ்ச நஞ்சமாவது வயது காலத்தில் / வயதான காலத்தில் மனுஷப் பிறவிகள் மதங்கள் சொல்லும் இந்தத் தண்டனைகளை மனதில் வைத்து 'கடவுளுக்குப் பயந்து' இருப்பார்கள்.

அடுத்து -

//மக்கள் மனதில் மத சகிப்புத்தன்மை என்பது வளர்க்கப்படவேண்டிய ஒன்று.-ப்ரியன் // - என்று சொல்வதைப் பற்றி.

'மத சகிப்புத்தன்மை' என்பதே ஒரு வகையில் தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம் என்று நினைக்கிறேன். தலைவலி வந்தால் சகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, வேறு வழியில்லாமல் ஒன்றை நாம் accept செய்து கொள்ள வேண்டும். நமக்கு அதைப் பிடிக்காது; இருந்தும் சகித்துக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு நேரம் இல்லையென்றால் இன்னொரு நேரம் கோபமாகவோ வேறு எந்த வழியிலோ வெளிப்படும் நிலை வரும். நமக்குள் இருக்க வேண்டியது religious tolerance இல்லை; தேவை relgious acceptance. அப்படி ஒன்று நமக்குள் (நமக்குள் என்பது இந்த முழு மனித குலத்திற்கும் என்று கொள்க) ஏற்பட்டால்தான் எல்லா மதத்தினருக்கும் நடுவில் சமத்துவமும், மனித நேயமும் நன்கு மலரும்.

ஆனால்,இது நடக்கிற காரியமல்ல. ஏனெனில் (மீண்டும் மீண்டும் இப்படி கூறுவதற்கு மன்னிக்கணும்..) நான் ஏற்கெனவே என் மதப் பதிவுகளில் கூறியபடி ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே தங்கள் தங்கள் மதக் கோட்பாடே சரியென்பதும், மற்றைய மதங்கள் தவறானவை,திரிக்கப்பட்டவை என்பதுமாகும். அப்படியிருக்கும் போது ஒரு ஆபிரஹாமிய மதத்தவர் அடுத்த ஒரு மதத்தினரைச் சகித்துக் கொண்டாலும் கொள்வாரேயன்றி, அவரது மதக் கோட்பாடுகளை ஒருக்காலும் accept செய்ய முடியாது; அவர்கள் மதமும் அதற்கு அனுமதிக்காது. கிறித்துவர்கள் இந்து மத நண்பர்களுக்குத் தங்கள் கடவுளர் போட்ட காலண்டர், டாலர் போன்றவற்றைக் கொடுப்பதும், அதை எந்த வித மறுப்பின்றி இந்து நண்பர்கள் வாங்கி,கொடுத்தவரின் அன்புக்காகவேனும் அதைப் பயன்படுத்தும் பண்பை என்றாவது ஒரு கிறித்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ காண முடியுமா? It is so simple; they can never ACCEPT other religions, கொடுத்தவர்களின் அன்பை மரியாதை செய்வதற்காகக் கூட. மெக்கா, ஒரு சிலுவை, ஒரு கோயில் கோபுரம் போட்ட படங்களை எந்தக் கடைகளில் காண முடியும் சொல்லுங்கள். இதில் இஸ்லாமியரையும், கிறித்துவரையும் குற்றம் கூறுவதும் அர்த்தமில்லை;ஏனெனில் அவர்கள் மதம் தரும் கட்டளை அது. அந்த மதத்தில் இருந்தால் அவர்கள் அதைப் பின்பற்றித்தானே ஆகவேண்டும்?

அப்படியானால், என்னதான் செய்வது? a zillion dollar question...!! இதற்குப் பதில் தெரிந்திருந்தால் மனித குலம் என்றோ எப்படியெல்லாமோ இருந்திருக்குமே!

* (ஆபிரஹாமிய )மதங்கள் தங்கள் கோட்பாடுகளை தங்களைக் கடைப்பிடிப்போரிடம் வலிமையோடு ஆழமாகப் பதிக்கின்றன. அக்கோட்பாடுகளை நம்பிக்கையாளர்கள் மீறுவதென்பது நம்பிக்கையாளர்களால் முடியாத ஒன்று.

* அடுத்த மதமும் கடவுளை அடைய (?) ஒரு வழியாக இருக்கக் கூடும் என்பதை இந்த மதங்கள் ஒப்புக் கொள்ளாது.

* சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. தங்கள் மதமே சரியானது என்ற superiority complex- யோடுதான் மதக் கல்வியின் ஆரம்பமே இருக்கும்.

* இப்படி ஆபிரஹாமிய மதங்கள் தங்களின் 'சிறப்பை, உன்னதத்தை' சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தால், மற்ற மதத்தினரை (இந்து மதத்தவருக்கு) ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும். அதன் ஆரம்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. R.S.S.. சங் பரிவார் இவைகளின் குரல் உயர்வது இதன் வெளிப்பாடே. Churchill இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றிக்குப் பிறகு சொன்ன வார்த்தைகள்தான் இங்கு பொருத்தம். - "This is the not the end; not even the beginning of the end; it is just the end of the beginning". அவர் நல்ல விஷயத்துக்குச் சொன்னது இங்கே கெட்ட விஷயத்துக்குச் சொல்லும்படியாகி விட்டது!

விடியும் நாட்களை நினைத்துப் பயமாக இருக்கிறது. நாளை...பொதுவாக மனித குலம், நம்மட்டில் இந்தியாவில், நம் குறுகிய சமூகத்தில் இந்த மதங்களை வைத்து நமக்குள் இருக்கும், எழப்போகும் பிரச்சனைகளை நினைத்தால்...

இளைஞர்களே...நீங்களே கேள்விகள்; நீங்களே பதில்கள்.

உங்கள் பதில் என்ன..?

*

*

Saturday, November 04, 2006

186. அமெரிக்கத் துளிகள் - II

.

.

இப்பதிவோடு தொடர்புள்ள ஏனைய பதிவுகள்:--


Don’t be nice to Desis -- ப்ரேமாலதா
Won’t Smile Back Syndrome - ஹேமந்த்.


Niceties and not so nice NRIs in US -- பாஸ்டன் பாலா

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...! -- தெக்ஸ்

பேரா. தருமி அய்யா இந்த கதை தெரியுமா? -- பால பாரதி

அமெரிக்கத் தமிழனின் அவலம்! -- செல்லா

அமெரிக்க வாழ்க்கை -- அவிட்டம்

எனது முந்திய பதிவு.


மகள் தொலைபேசியில் சொன்ன ஒரு சேதியை வைத்தும், என் நேரடி அனுபவத்தையும் வைத்து ரொம்பவும் சீரியஸாக இல்லாமல் எழுதிய முந்திய பதிவுக்கு வந்த எதிர்வினைகள் (reactions) இதைப் பற்றி சீரியஸாகவே என்னை நினைக்க வைத்துள்ளன.

ப்ரேமலதா வின் பதிவில் அவரது சொந்த அனுபவம் - மிக மிக கசப்பானவைதான் - எழுதியுள்ளது பற்றி பாஸ்டன் பாலாவின் பதிவிலிருந்தே தெரிந்தது. பிரேமலதாவின் பதிவிற்குப் பதில் ஏதும் தர முடியாதுதான். On day 1, she has met a fellow too nasty and the other guy on the second day was both cruel and stupid. She was so unlucky to have met guys of this sort. அதன் பின் வந்த பதிவுகள் அவைகளுக்கு வந்த பின்னூட்டங்கள் "இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?" என்ற தெக்கிக்காட்டானின் கேள்வியை மிகவும் பொருளுள்ளதாக ஆக்குகின்றன.


என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது. நகரங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு ஜோக் - தியேட்டரில் யாரையும் பார்க்கும்போது 'என்ன சினிமா பார்க்க வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ, ஹோட்டலில் பார்க்கும்போது 'என்ன சாப்பிட வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ ஒரு பெரிய ஜோக்காக நமக்கு இன்று இருக்கிறது. ஆனால்,இன்னும் நம் கிராமப் பகுதிகளில் தினமும் பார்க்கும் ஒருவர், மண்வெட்டியோடு இல்லை வேறு விவசாயக் கருவிகளோடு எதிர் வரும்போது எல்லோருக்கும் தெரியும் அவர் வயல் வேலைக்குத்தான் போகிறார் என்று. ஆனாலும் 'என்ன'பா, வயல் வேலைக்கி கிளம்பியாச்சா?' என்றோ, வெள்ளையுஞ் சள்ளையுமா கிளம்பின ஆள பார்த்து 'என்ன,டவுனுக்குப் போறாப்பலையா?' என்றோ, அல்லது 'என்ன'பா, ரொம்ப தூரமா?" (எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதல்லவா?!) என்றோ கேட்பது வழக்கம். ஊர்க்காரரோடு புதிதாக யாரும் வந்தாலும், 'தம்பி, புதுசாயிருக்கே!' என்று பூடகமாகக் கேட்பதும் பல காலத்து வழக்கம். இதில் கேள்வி கேட்பதும், கேட்கப்படுவதுமே முக்கியம். தரப்படும் பதில்கள் இரண்டாம் பட்சம்தான். பட்டினத்து ஆட்கள் இதை 'சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்' என்று சொல்வதும் வழக்கம். இது போன்ற கேள்விகள் நம்ம மாடர்ன் ஸ்டைலில் 'Good morning', 'Hi!', Long time no see!, 'So long' என்று சொல்வதற்கு ஒப்பானது என்று இப்போதுதான் எனக்கும் புரிகிறது. இதுதான் எதிர்த்தாற்போல் வருபவரை நம் மக்கள் 'கண்டுகொள்ளும்'முறை.

ஆனால் இந்த நடப்புகளை முழுவதுமாக இழந்துவிட்டு இன்று "இந்தியாவில் எதிர்ப்படுவோரிடம் முகமன் கூறும் பழக்கம் இருந்ததில்லை ( பாஸ்டன் பாலா )" என்ற நகர்ப்புற வழக்கத்தை வைத்து ஒரு முடிவெடுக்கிறோமா? மேலை நாட்டுக்காரர்களின் thank you என்பதற்கு பதில் நம்மூரில் ஒரு புன்னகை இருந்தது; அனேகமாக அந்தப் பழக்கம் போயே போய்விட்டது. sorry-என்பதையும் சில body languages மூலமாகச் சொல்லி வந்தோம். யார் காலையாவது மிதித்து விட்டால், இன்னும் பலர் செய்வோமே அதுதான் நம்ம ஊர் sorry / excuse me. ஆனால் அவைகள்"'பட்டிக்காட்டுத்தனம்" என்பதாக முற்றிலும் மறக்கப்பட்டு விட்டன. சரி, புதிதாக வந்த மேலை நாட்டு பழக்கங்களையாவது பற்றிக் கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. இதனாலேயே நான் என் மாணவர்களிடம், Try to learn to say 'sorry' and 'thanks'. It would make your life happier.என்று சொல்வதுண்டு.

//நம்மவர்களின் பிரச்சினையே தானாகவே இல்லாமல் மற்றவரைப் பார்த்து காப்பியடிப்பது … கலாச்சாரம் முதல் மொழி வரை .. இது நம்மவரின் inferiority complex !?? - செல்லா. செல்லா இதை முடிவாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்ல; ஏனெனில் அவர் கூற்றிற்குப் பிறகு !?? போட்டு விட்டார் ??! Chella, whether we like it or not, the world is going and has gone all the way of the West - whether it is our jeans or our mental makeup. We have to accept it? Right? ஜப்பானில் எல்லோரும் அது என்ன, கிமோனாவையா அணிகிறார்கள்? நாம் என்ன நம்ம தாத்தா கட்டிய நாலு முழ அல்லது அதைவிடக் குறைந்த துணியையா கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆகவே இது தன்னிச்சையாக - நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நடக்கும் ஒரு காரியம். no chance for any rewinding...! அதனால் இதை நீங்கள் சொல்வது போல் inferiority complex என்று கூற முடியவில்லை. We ape, of course. but who else does not?

இல்ல, செல்லா. இந்த inferiority complex என்பதெல்லாம் எங்க காலத்து விஷயம். உங்களுக்கு அந்த good old joke தெரியுமில்லையா? அமெரிக்க அம்மா தன் குழந்தையிடம் அந்தக் காலத்தில் - அதாவது எங்க காலத்தில - சொன்னது: ஒழுங்கா சாப்பிடு; இல்ல, the hungry children of India would snatch away your meal. ஆனா இப்போ உங்க காலத்தில அந்த அமெரிக்க அம்மா: ஒழுங்கா படி; இல்ல the intelligent guys from India would snatch away your jobs! - இப்படி மாறிப்போச்சு, செல்லா. அதனால உங்களுக்கெல்லாம் இன்னுமா எங்களுக்கு இருந்தது போல inferiority complex இருக்குங்றீங்க? அப்படியே இருந்துதுன்னா ரொம்ப தப்பு. We have proved what we are - at least we are not second to none. Skin colour does not matter at all. இல்லீங்களா? எங்களுக்கெல்லாம் அவங்க 'துரை மார்கள்'; உங்களுக்கு just colleagues. இல்லியா?

ஆயினும் எனக்கு விடைதெரியாத ஒரு கேள்வி: நம் ஆங்கில மோகத்திற்கு british legacy என்று ஒரு வரி விளக்கம் கூறுவதுண்டு. ஆனால் அது எப்படி நமக்கு மட்டும் இந்த மோகம்; நம் அடுத்த வீட்டு, மலையாளிகளுக்கோ, ஆந்திரர்களுக்கோ, கன்னடத்துக்காரர்களுக்கோ இல்லாதபடி நாம் மட்டும் ஏன் இந்த "மோகவலை"யில் சிக்கிக் கொண்டுள்ளோம்? என் மாணவர்களிடம் பரிட்சித்துப் பார்க்க சொன்ன ஒரு விஷயம்: ஒரு நாள் தொடர்வண்டி நிலையத்தில் சாதாரணமாக pants போட்டுக் கொண்டு தமிழில் ஒரு தொடர்வண்டி வரும் நேரத்தை அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கேட்க வேண்டும்; அடுத்த நாள், சட்டையை tuck செஞ்சி,ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (வேற ஆள்கிட்டதான்!) கேட்கணும்; அடுத்த நாள் அதே மாதிரி உடையோடு, eh..excuse me ...ah.. could you please tell me ..ehh.. (இவ்வளவு ஆங்கிலம் போதும்; அதன் பிறகு நம்ம தமிழ் போதும் !) இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்...? என்று கேட்கணும். - மூன்றில் எதற்கு மரியாதை கிடைக்கிறது என்று பார் என்று. நிச்சயம் இந்த மூன்றிற்கும் நம்மூரில் நல்ல வித்தியாசமான பதில்கள் வரும். ஆனால் அடுத்த ஊர் கேரளாவில் அப்படி நிச்சயமாக இல்லை; வேட்டிக்கு இன்றும் மரியாதை உண்டு; மலையாளத்துக்கும்தான். ஏன் இப்படி?

பால பாரதி, இன்னும் பலரும் சொல்லுவதை வைத்து நான் வைத்திருந்த ஒரு கருத்தை மாற்றிக் கொள்கிறென். நான் என்னவோ இது அமெரிக்காவில் உள்ள நம் மக்கள்தான் இப்படி 'பாராமுக"வித்தை பயின்றுள்ளார்கள் என்று நினைத்திருந்தேன். பாலபாரதியின் நேரடி அனுபவமும், மற்றும் வந்துள்ள பலப்பல பின்னூட்டங்களிலிருந்தும் இது தவறு; நம் ஊரிலும் அப்படித்தான் என்ற கருத்தை - கொஞ்சம் அரைகுறை மனத்துடன், அதாவது with some reservation - ஒப்புக் கொள்கிறேன். முழுமையாக ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. இன்றும் ரயில், பஸ் பயணங்களில் அடுத்து அமர்ந்திருப்பவரோடு, அவர் நம் frequency-க்கு ஒத்து வரும் ஆளாக இருக்கும் பட்சத்தில், விடை பெறும்போது ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொண்டு செல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட என்னால் முடிந்திருக்கிறது. ஒரு ரயில் பயண நட்பு பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலும் இன்றும் நீட்டிக்கிறது. இருப்பினும் ஒப்புக் கொள்கிறேன். ஆகவே இதை அமெரிக்கத்தனம் என்று கூறாமல் பால பாரதி சொன்னது போல, பட்டணத்து ராசா கேட்டதை ஒத்துக் கொண்டு, "தமிழ்த்தனம்" என்று அழைக்கிறேன். ஆயினும்,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எழுதியுள்ள நெல்லை கிறுக்கன், ஹரிகரன் அங்கேயெல்லாம் அப்படி இல்லை என்று கூறுவதற்கு என்ன விளக்கம் கூறுவதென்பது தெரியவில்லை. அதேபோல் ஒட்டு மொத்தமாநம் இலங்கைத் தமிழர்கள் பற்றி எல்லோரும் ஒருமித்துக் கூறும் நல்ல கருத்துக்காக அவர்களுக்கு ஒரு " ஓ " போடுவோம்!

அடுத்த கேள்வி: ஆங்கில மோகம் நமக்கு மட்டும் இவ்வளவு ஏன் என்று கேட்டேன்; அதோடு இப்போது இன்னொரு கேள்வி - மற்ற மாநிலத்தவர் போலன்றி நாம் மட்டும் ஏன் நம் 'அயலானை நேசிக்க முடியவில்லை?

//இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்? //- கொத்ஸ் எல்லோரும், எல்லோருடனுமா அப்படி இருக்கிறோம்; இருக்க முடியும்? ஒத்தக் குணம், கருத்துக்கள் இவை எல்லாம் கூடி வந்தால்தானே தெரிதல் நட்பாகி அதன் பின் நெருக்கமெல்லாம் வருகிறது. ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்தோடு நான் முழுமையாக உடன் படுகிறேன்: "அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds."

அப்சல் விஷயமோ, இடப் பங்கீடு போலவோ, மத விவகாரம் போலவோ இல்லாமல் நான் எழுதிய ஒரு விஷயத்தில் அதிக மன வேறுபாடின்றி நாம் இந்த சமூக நிலைப்பாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதில் நமக்கு ஒத்தக் கருத்திருப்பதாக உணர்கிறேன்! அப்பாடா...!!

ஒத்தக் கருத்து ஒரு விஷயத்தில் வந்திருச்சின்னா, அப்ப அடுத்த ஸ்டெப் - இதுக்கு நாம என்ன செய்றது? இங்க இந்த அளவு விவாதம் நடந்ததே பலருக்கும் ஒரு கண் திறப்பாக பல காரியங்கள் இருந்திருக்கும். குற்றமுள்ளவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும், குற்றம் சாட்டுவோர் வேறு ஒரு கோணத்தில் (perspective) இதைப் பார்க்கவும் முடியுமென நினைக்கிறேன். KVD சொல்வது போல '... this as a "socio psychological issue",.." என்ற அளவில் நாம் ஒவ்வொருவரும் இந்த inherent mistrust-யை விலக்க முயலமுடியாதா?


தமிழ்த் தனத்தை மாற்றுவோமா?...please.


.

.

.