Tuesday, June 26, 2007

225. ஓர் உதவாக்கரையின் 'எட்டாட்டம்'

தொடாத உயரங்கள்...(ஓர் எட்டாட்டம்)

என்னையும் இந்த எட்டாட்டத்துக்கு அழைத்த மணியனையும், கண்மணியையும் என்னவென்று சொல்லித் திட்டுவது என்று தெரியாமலேயே ... இதோ .. என் எட்டாட்டம்.

கண்திருஷ்டி பொம்மையாக என்னை நானே இந்த "8-பதிவு"களில் இணைக்க வேண்டியதுள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை எழுதியவர்களின் பதிவுகளில் பலவற்றை வாசித்ததும் பெருமூச்சு மட்டுமே வந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நானும் கொஞ்சம் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ்ந்த, தெளிந்த கருத்தோட்டங்கள் எப்போதும் வியப்பையையே அளித்து வந்துள்ளன. ஆனாலும், நான் இக்கூட்டத்து மக்களோடு பல விஷயங்களில் ஒட்ட முடியாதவனாக இருந்தும் எப்படியோ என்னை நான் இவர்களோடு இணைத்துக் கொண்டதை நினைக்கும்போது தாழ்வு மனப்பான்மையையும் தாண்டி ஒரு சந்தோஷம்.

விஷயத்துக்கு வருவோம் ...

If you want to be successful in life, take me as your model. ... But take me as your negative model! - என் மாணவர்களிடம் நான் சொல்வது. சும்மா humble pie எல்லாம் இல்லை.எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்தாச்சு. procrastination - எல்லாவற்றையும் எப்போதும் நாளைக்கு .. நாளைக்கு என்று தள்ளிப் போடுவது உடன் பிறந்த வியாதியாய் இன்னும் தொடர்கிறது. சாதித்திருக்கக் கூடியது என்று நிறைய இருந்தும் இதுவரை எதையுமே சாதிக்காமல், பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்ற வகையினுள் ஒருவனாய் இதோ இதுவரை இருந்தாயிற்று.

1. பள்ளிப் படிப்பில் தமிழ்,ஆங்கில, கணக்குப் புலி என்று ஒன்பதாம் வகுப்பு வரை - IV Form - இருந்தாயிற்று. அதன்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்புக் கணிதம் எடுத்த அன்று வாழ்க்கையில் முதல் சறுக்கு. மனப்பாடம் செய்ய முடியாத ஒருவன் அல்ஜீப்ராவையும், தியரங்களையும், ரைடர்களையும் பார்த்து ஓட ஆரம்பித்தது கல்லூரி வரும்போது கணக்கே இல்லாத பாடத்திட்டத்தில் சேரும்வரை தொடர்ந்தது.

2. கல்லூரி வந்தபிறகு ஆங்கிலம் அல்லது பொருளாதாரம் எடுக்க ஆசைப்பட்டு, அதில் சேர்ந்து 30 நாட்கள் ஓட்டிய பின்னும், அப்பாவின் ஆசைக்கு அறிவியலில் தூக்கிப் போடப்பட்டேன். இளங்கலையில், ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் கொடுத்த ஆர்வத்தை, முயற்சியை எடுத்துக் கொண்ட அறிவியலுக்குக் கொடுத்திருந்தால் முன்னேறியிருந்திருக்கலாம். அடுத்த சறுக்கு.

3. இளங்கலை முடித்ததும் எல்லா விலங்கியல் மாணவர்கள் போலவே மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து, இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை; மருத்துவத் தேர்வு முடிவுகள் வெளியே வரும் முன் இடம் கிடைத்து விட்டதாக குறுக்கு வழித் தகவல்.பாதி டாக்டராகி விட்டது மாதிரி கனவுகள். ஆனால் முடிவு வெளியே வரும்போது பெயர் இல்லை. மதுரையிலிருந்து என் கூட வந்தவர் என்னை விடவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியும் அவருக்குக் கிடைத்திருந்தது. முதலில் தகவல் சொன்னவரிடம் கேட்ட போது (அந்தக் காலத்து) இடப் பங்கீடுதான் காரணமென்றார். இடம் கிடைத்த நண்பரோ இன்றுவரை உனக்கே அந்த இடம் கிடைத்திருக்கலாம் என்று வருந்துவது வழக்கம்.

4. முதுகலை முடித்ததும், எனக்குப் பிடித்த ஆசிரியருக்கு என்னைப் பிடித்துப் போக ஆராய்ச்சி மாணவனாக வரும்படி அழைத்தார். மூன்று ஆண்டுகள் வரை வீட்டில் உத்தரவு கிடைக்கவில்லை. அதற்குள் வயது கடந்து போட்டித் தேர்வுகள் எழுதும் வாய்ப்பை இழந்தாயிற்று. அதற்குப் பின்னும் ஆராய்ச்சியில் சேர்ந்து ஒரு பட்டம் வாங்கும் அந்த முயற்சியை கடைசிவரை முழுமையாக எடுக்காததற்கு இன்று வரை சரியான காரணம் ஏதும் கிடையாது.

5. கல்லூரியில் சித்தாள் வேலையில் சேர்ந்த பிறகு முதல் நான்கு வருடங்களில் கிடைத்த சில நல்ல அனுபவங்கள் ஆசிரியத்தொழில் ஈடுபாடு கொள்ள வைத்தது. அது என்ன மாயமோ .. முதலில் இருந்தே மாணவர்களோடு நல்ல உறவு; செய்யும் தொழிலில் ஒரு பெரிய பிடிப்பைக் கொடுத்ததே அந்த உறவுகள்தான். இன்னும் பல மாணவர்கள் தொடர்ந்து வைத்திருக்கும் உறவுகளே வாழ்க்கைக்கு வளம் தருகின்றன. சில ஆசிரியர்கள் தரும் testimonial-களை மாணவர்கள் பத்திரமாக வைத்திருப்பதுண்டு. நான் அதுபோல் மாணவர்கள் சொன்னவைகளை நினைவில் வைத்திருக்கிறேன்.

மாணவர்களை கன்னடர்-தமிழர் தகராறு இருந்த ஒரு சமயம் பெண்களூருக்கு அழைத்துச் சென்றபோது ரயில் நிலையத்தில் பதிவுச்சீட்டை மறுத்து தகராறு செய்த ரயில்வே ஊழியரிடம் முதலில் தயவாகவும், அதன் பின் எல்லாம் முற்றிய பின் மதுரை 'சலம்பலை' அரங்கேற்றியபோது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவன், You do what you say' என்று சொன்னதும்,

முதுகலை வகுப்பில் புதுப் பாடத்திட்டம் ஒன்றை புகுத்தி அதை 'I wont be a teacher for you. I will be just a lecturer' என்று கூறி பாடம் எடுத்து முடித்ததும் மாணவர் இருவர் பின்னாலேயே வந்து, 'Sir, ஒண்ணுமே புரியலை ..தலை சுத்துது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரு மாணவிகள் வந்து, 'Sir, thank you for bringing in fresh breath into our class' என்று சொன்னதும்,

பழைய மாணவன் ஒருவன் படித்துச் சென்றபின் சில ஆண்டுகள் கழித்து கடிதத்தில், 'நீங்கள் சொல்லிக்கொடுத்தது எவ்வளவு புரிந்தது, நினைவில் இருக்கிறது என்பதையெல்லாம் விட இப்போதும் அந்தப் பாடத்தோடு தொடர்புள்ள விஷயங்களைப் பார்க்கும்போது உங்கள் நினைவு வந்துவிடுகிறது' என்று எழுதியதையும்,

I dont know how much you know things; but you always make us feel pretty awe about you' என்ற ஒரு மாணவியின் comment-யையும்,

மாணவனின் கல்யாணத்துக்குப் போயிருந்த போது அவனின் தந்தை மணப்பெண்ணின் தந்தையிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது, 'I am just his father; but he is his god-father' என்றதையும் எப்படி மறக்க முடியும்?

6. சார்ந்த துறையை ஒட்டி புத்தகங்கள் எழுத கிடைத்த வாய்ப்புகளைத் தவற விட்டதோடு, இப்போதும் ஒரு புத்தகமாவது எழுதவேண்டும் என்று மனத்தளவில் ஆவல்; ஆனால், நிறைவேற்ற முயற்சி இல்லாது .. காலம் நழுவிக்கொண்டிருக்கிறது விரைவாக.

7. creativity உள்ள ஆட்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பொறாமை. அதிலும் ஓவியர்களுக்கும், பாடகர்களுக்கும் முதலிடம். சித்திரமும் கைப் பழக்கம் என்று யாரோ சொன்னதை நம்பி நானும் அந்தக் காலத்திலிருந்து கிறுக்கி கிறுக்கிப் பார்த்தேன்; கிறுக்கலாகவே நின்றுவிட்டது; ஓவியமாக என்றும் வரவேயில்லை. பென்சில், water colour, oil paint என்று பல முயற்சிகள். எல்லாம் விழல்கள்.

பாடத்தான் வராது; ஏதாவது இசைக்கருவி பழகலாமென்றும் பல முயற்சிகள். mouth-organ மிக எளிது என்று சொல்ல நாலைந்து டைப் mouth-organs வாங்கி ஊதி ஊதி .. சத்தம் மட்டும்தான் வரும்; அதிலிருந்து ஒருநாள்கூட சங்கீதம் வந்ததில்லை. இருப்பதிலேயே எளியது என்று சொல்ல, அடுத்து புல்-புல் தாரா ஒன்று வாங்கினேன். சொல்லிக் கொடுத்தவர் 'என்ன என்ன வார்த்தைகளோ ..' (வெண்ணிற ஆடை) பாட்டின் அந்த முதலடியை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு மீதியை நீயே 'பிடித்துக் கொள்' என்று போய்விட்டார். எங்க பிடிக்கிறது? ஆன மட்டும் முயற்சித்தும் அது என் பிடிக்குள் அகப்படவேயில்லை.

8. சரி, சித்திரமும் இசையும்தான் நம்மளை விட்டு இப்படி ஓடுது; விளையாட்டில் ஏதாவது முயற்சிக்கலாமென நினைத்து முயன்றதும் உண்டு. இங்கு ஒரே ஒரு வித்தியாசம். யாரோடு சேர்ந்து பழக ஆரம்பித்தாலும் அந்தக் குழுவில் முதலாக எல்லோரையும் தோற்கடிக்கும்படி முதலிடத்தை முதலில் பெற்றுவிடுவேன். எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அதன்பின் நான் அதிலேயே தேங்கிவிட எல்லோரும் என்னை ஓவர் டேக் செய்வது வழக்கம். அனேகமாக கிரிக்கெட் தவிர எல்லா விளையாட்டிலும் கொஞ்சமாவது கைவண்ணம் காட்டியிருப்பேன்.

.........அப்பாடா..ஒரு வழியா நம்ம பற்றி கொஞ்சம் சொல்லியாச்சு .. ஆள விடுங்கப்பா .. weird விஷயங்கள் எழுதச் சொல்லி 'i am a lousy guy' அப்டின்னு முன்னொரு பதிவில் சொல்ல வச்சாச்சு. இப்போ எட்டு கேட்டு உதவாக்கரைன்னு சொல்ல வச்சாச்சு. போதுமப்பா போதும்.. மக்கள்ஸ், இனிமேலும் இந்த மாதிரி confessions பண்ண வச்சு என்னை முழுசுமா வெளிக்காண்பிக்க வைக்காதீங்க. கட்டாயமா நம்ம பதிவர்களுக்கு என் சுயரூபம் தெரியணுமா, என்ன? பாவம் நானு .. உட்ருங்க...

ஓ! அடுத்து எட்டுபேரை கை காண்பிக்கணுமோ. பாவப்பட்ட அந்த எட்டு ஆட்கள்:

கடப்பாரை
ஜாலி ஜம்பர்
ஸ்ரீதர் வெங்கட்
ராம்
லிவிங் ஸ்மைல் வித்யா
ப்ரபு ராஜதுரை
தெக்கிக் காட்டான்
கல்வெட்டு


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Monday, June 18, 2007

224. காவல்துறையினரோடு ஓர் அனுபவம்

*

சில சமயங்களில் நாம போட்டு வச்சிருக்கிற கணக்கு சுத்தமா தப்பா போகும் போது ரொம்ப சந்தோஷமா ஆயிடுது. சமீபத்தில நடந்த காவல் துறை ஆட்களோடு தொடர்புடைய இரண்டு நிகழ்வுகள் அப்படித்தான் ஆகின.

சில நாட்களுக்கு முன் நானும் தங்கமணியும் இருட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது எங்களைத் தாண்டிச் சென்ற ஒரு தம்பதிகளின் மொப்பட் ரோடின் நடுவில் இருந்த so called median-ல் தடிக்கி வண்டியோடு விழுந்தார்கள். பச்சிளம் கைக் குழந்தை வேறு. சும்மா சொல்லக்கூடாது அந்த தாயை. தான் விழுந்தும் அந்த நிலையிலும் எப்படியோ அணைத்த குழந்தையை விடவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் உடனே எழுந்திருக்க முடிந்தாலும் ஓரளவு நல்ல அடிதான். ஆனால் குழந்தை தாயின் அணைப்பில் எந்தவித அதிர்வுமின்றி பேசாமலிருந்தது.

அவர்கள் விழுந்ததற்கு முழுக் காரணமாக இருந்தது எது அல்லது யார் என்று எப்படிக் குறிப்பிட்டுக் கூறுவது என்று தெரியவில்லை. அரசாங்கம் என்று பொதுவாகச் சொல்லவா; நகராட்சி என்பதா; காவல்துறை என்பதா என்று தெரியவில்லை. ஏனெனில், (அவர்கள் விழுந்தது மதுரை மீனாட்சி கல்லூரி அருகில், செல்லூர் ரோடு ஆரம்பிக்கும் இடம் - இக்குறிப்பு மதுரைக்காரர்களுக்காக ) அந்த இடத்தில் சாலையைப் பிரிக்கும் அந்த மீடியன் அரை அடி உயரம்கூட இல்லாதது; கறுப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பார்களே அதெல்லாம் இல்லாதிருந்தது; சரியாக அந்த இடத்தில் மின் தெருவிளக்கும் இல்லாதிருந்தது; இவை எல்லாமே அந்த விபத்துக்குரிய காரணிகள். வண்டியோட்டிகளுக்கு அந்தத் தடை இருப்பதே சரியாகத் தெரியாது. பார்த்த விபத்தினால் வழக்கமாக வரும் எரிச்சலோடு அன்றைக்கு வீட்டுக்குப் போயாகிவிட்டது. ஆனால் நல்லூழாக - luckily!? - அடுத்த ஓரிரு நாளிலேயே மீண்டும் அந்த இடத்தைத் தாண்டி வரும்போது சில காவல்துறை அதிகாரிகள் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க நானும் அவர்கள் ஜீப் அருகில் நிறுத்தி நின்று கொண்டிருந்த ஓட்டுனரிடம் இவர்கள் யாரென்று கேட்க, ஏ.சி., ட்ராஃபிக் என்றதும் நேரே அவரிடம் போய் நடந்த அந்த விபத்தைப் பற்றிக் கூறினேன். "ஏன் சார், ரோடுன்னா ஆயிரத்தெட்டு accidents நடந்துகிட்டுதான் இருக்கும். அதுக்கெல்லாம் நாங்க என்ன பண்ண முடியும்? வண்டி ஓட்டுறவங்கதான் கண்ணைத் திறந்து ஒழுங்கா ஓட்டணும். எங்கள என்ன பண்ணச் சொல்றீங்க? பெருசா சொல்ல வந்துட்டீங்க ...போங்க சார், போய் உங்க வேலை எதுவோ அத ஒழுங்கா செய்யுங்க" - இப்படித்தான் ஒரு பதிலை எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கொஞ்ச வயசு அதிகாரி பொறுமையாகக் கேட்டார். என்ன செய்யலாம்னு என்கிட்டயே கேட்டார். சொன்னேன். பீட்டில் இருந்த போலீஸ்காரரைக் கூப்பிட்டார். இன்னும் இரண்டுமணி நேரத்தில் இந்த இடத்தில் ஒரு பீப்பாய் அடையாளத்துக்கு வைத்தாக வேண்டும் என்றார். எனக்கும் நன்றி சொன்னார். நானும் சொன்னேன்.

Image and video hosting by TinyPic
செம்மை செய்த பின் எடுத்த படம்.




அடுத்த நாள் அந்த இடத்தில் ஒரு பீப்பாய் சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது. அதைவிடவும் அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் அந்த இடத்தை மேலும் செம்மைப் படுத்தி இப்போது அது ஒரு பாதுகாப்பான இடமாக மாறி விட்டிருக்கிறது. சே! காவல் துறை ஆட்களை வைத்து நம்ம போட்ட கணக்கு இப்படி ஒரேயடியா தலைகீழா தப்பா போச்சேன்னு எனக்கு ஒரே சந்தோஷம்!

சரி அதுதான் அப்டின்னா, இப்போ அஞ்சு நாளைக்கு முன்னால எங்க வீட்டுக்குப் போற வழியில் (மதுரைக்காரங்களுக்கு - பாத்திமா கல்லூரிக்குப் பக்கத்தில் ) உள்ள ஒரு traffic island-ல் உள்ள ஒரு பாதுகாப்பின்மையை அங்கு நின்ற கான்ஸ்டேபிளிடம் - பெயர்: திரு. குமார் - சொன்னேன். அவரும் தன்மையாக் கேட்டுட்டு நாளைக்கு இந்த இடத்திற்குப் பணிக்கு வரும் காவலரிடம் ட்ராஃபிக் ஏ.சி.ன் தொலைபேசி எண் கொடுத்தனுப்புகிறேன். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்றார். அதே போல அடுத்த நாள் அங்கு நின்ற காவலர் - பெயர்: திரு. அபு பக்கர் - ஏ.சி.யின் எண் கொடுத்தார். ஏ.சி.யின் பெயர் கேட்டேன். சிவானந்தன் என்றார். வீட்டுக்கு வந்து உடனே தொலைபேசினேன். ரிங் போய்க்கிட்டே இருந்தது; எடுக்க ஆளைக் காணோம். சரி அவ்வளவுதான்னு இருந்தேன். தொலைபேசி வைத்ததுமே மறுபடி என் தொலை பேசி கிணுகிணுத்தது. வேறு யாரோன்னு நினச்சி எடுத்து, யாருங்க பேசுறதின்னு கேட்டா, இப்போ நீங்கதான இந்த எண்ணுக்கு பேசியது என்று ஒரு குரல். சரி.. ஏ.சி.யின் அலுவலகத்திலிருந்து யாரேனும் பேசுவார்கள் என்று எண்ணினால் பேசியது ஏ.சி.யேதான்! - ஆச்சரியமாக இருந்தது.

அடுத்து, என்ன விஷயம் என்று கேட்டார்; சொன்னேன். ஆங்.. அதெல்லாம் தெரியும். வேண்டியதைச் செய்வோம். ம்ம்.. - இப்போதும் இப்படித்தான் பதில் வரும் என்று நினைத்தேன்.ஆனால் எந்த வித அதிகார தோரணையற்ற குரலில் பேசினார்; விளக்கம் கேட்டார். ஏற்கெனவே அந்த இடத்தில் செய்யப் போகும் மாற்றங்கள் பற்றியும் விளக்கினார்.நீங்கள் சொல்லும் குறையையும் நினைவில் வைத்திருந்து வேண்டியதைச் செய்கிறேன் என்றார்.

இந்த இரண்டு ஏ.சி.யும் ஒரே ஆளா என்று தெரியாது. ஆனால் அப்படித்தான் இருக்கணும். ஒரேமாதிரியான utmost courtesy. நிரம்பவே எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக போயிற்று. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதுவும் போலீஸ் துறையில் உள்ள ஓர் உயர் அதிகாரி ஒரு சாதாரண குடிமகன் சொன்ன சில கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. சொன்னதை செய்தும் காட்டுவது மிகப் பெரிய விஷயம்தான். நம் நாடு நல்லாதான் சென்று கொண்டு இருக்கிறதோ...? நான்தான் ரொம்பவே cynical-ஆன ஆளாக இருக்கிறேனோ?

Tuesday, June 12, 2007

223. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 3

பதிவர் நல்லடியார் என் பெயரிட்டே இதுவரை மூன்று பதிவுகள் இட்டுள்ளார்; அவைகளை நான் இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது என் பதிவொன்றில் ஒரு பின்னூட்டம் இட்டு தன் பதிவுக்கு அழைத்துள்ளார். அவருக்காகவே இதைப் பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீளம் காரணமாக இதை ஒரு தனிப்பதிவாக்கியுள்ளேன்.

நல்லடியார்,

உங்கள் பின்னூட்டத்திற்கு கடைசியிலிருந்து பதில் சொல்ல வேண்டியதுள்ளது.
//எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.//
பொடிநடை நடந்து உங்கள் பதிவை ஏற்கெனவே வாசித்துள்ளேன்; ஆனாலும் கண்டு கொள்ளாமல் வந்ததற்குரிய காரணம் -

உங்கள் எழுத்தில் உள்ள எள்ளல்தான். கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது? அப்படி என்ன எள்ளல் என்று நிச்சயம் கேட்பீர்கள். ஒரு சில துளிகள் உங்கள் எழுத்திலிருந்து....

1. //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட .........//
நான உங்களை எப்போது நம்பச்சொன்னேன்?
என்ன சொல்ல வருகிறீர்கள்?
நாத்திகனாக இருந்தும் குடிக்கிறானே என்றா?
இல்லை, குடித்தும் நாத்திகனாக இருக்கிறானே என்றா?
இல்லை, இவன் என்றாவது மட்டும்தானே குடிக்கிறானே என்றா?

2. தலைப்பையே பாருங்களேன்: தி.நகரில் தருமிக்கு என்ன வேலை? (பதில் கட்டாயம் சொல்ல வேண்டுமோ? அப்படியெனில் பதிவின் முதல் வரியைப் படியுங்களேன்; ஓ! நீங்கள் 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல?

3. அந்த உங்கள் பதிவில் என்னைக் கொஞ்சம்தானே "கவனித்துள்ளீர்கள்". மீதியெல்லாம் நேசகுமாருக்குத்தானே!

இந்த காரணங்களால் பதில் சொல்லாமலிருந்தேன்; இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல; குழப்பத்திலிருக்கும் பஸ் பயணியாக தருமியை ஆக்கிய பதிவு, நோக்கியா வாங்கிய தருமி இந்தப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடாதது இது போன்ற உங்கள் மொழியாள்மைக்காகத்தான். இப்போது என் 'வீட்டுக்கே' வந்து கேட்கும்போதும் மெளனம் சாதிப்பது நாகரீகமாகாது என்பதாலும், என் பெயர் போட்டே இத்தனை பதிவுகள் போட்டு என்னைப் பெருமை படுத்தியமைக்காகவும் உங்கள் கேள்விகளுக்கு என் பதிலை இப்படி ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன்.

//சென்ற மாதப்பதிவில்"குண்டு எல்லாம் எதற்கு?" என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது.//
இப்பதிவில் என்ன நாத்திகம் கண்டீர்களோ எனக்குத் தெரியவில்லை. இஸ்லாமை அல்ல, இஸ்லாமியரைக் குறை சொன்னாலே நாத்திகமா, என்ன?

//முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?//
உங்களுக்குப் பாங்கொலி இனிமையாக இருக்குமென்றால் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும், இருக்கும் என்பது உங்கள் எண்ணமா? நீங்கள் சொல்லும் இந்து சமயப் பாடல்கள் உங்களுக்குக் குத்துப் பாட்டு என்றால் எல்லோருக்கும் அப்படிதானா? நீங்கள் சொன்னதில் முதல் பாட்டு எனக்குகூட பிடிக்குமே! கும்மிப் பாட்டு என்று மற்றொரு சமயப் பாடலைக் கூறுவது ஒருவேளை அவர்களுக்குத் தவறாகப் படலாம் வருத்தம் தரலாம் என்றுகூட நீங்கள் நினைக்கவில்லை இல்லையா? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பது தெரியாதவரா நீங்கள்? உங்களுக்குக் குத்துப் பாட்டாகப் படுவதுபோல் பாங்கொலி மற்றவருக்கு எப்படியிருக்கும் என்றும் நினைத்துப் பாருங்கள் - இசையில்லாமல், ஒரு புரியாத மொழியில் ஒரு சத்தம் என்பதைத் தவிர மற்ற மதத்தினருக்கும் அது இனிமையாக இருக்கும் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; மற்ற சமயத்தினர் நாலு பேரிடம் கேட்டுப் பாருங்கள்.

//போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம்.// அதைத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் அதோடு, // அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று.// என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் என்ன? படித்தீர்களா அதை?

//முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது//
மிக்க நன்றி.

//'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.// யாரை, எதற்காக, ஏன் நொந்து கொண்டேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

//அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !//
இவ்வரிகளும் இதற்கு முந்திய பத்தியும் என்ன நினைத்து, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உண்மையிலேயே புரியவில்லை.

// நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.//
இதைத்தான் மேலேயே ஒரு முறை கூறியுள்ளேன். நீங்கள் இருப்பது "ஒற்றைச் சாளர வீடு". எதைப் பார்க்க வேண்டுமென்று மெனக்கெடுகிறீர்களோ அதை மட்டும் பார்க்கிறீர்கள்.கொஞ்சம் நீங்கள் வாசித்த பதிவுக்கு அடுத்ததாக, "யாரைத்தான் நொந்து கொள்வதோ...?" என்று எழுதியுள்ள, இன்னும் எழுத உள்ள பதிவுகளைப் படித்து விட்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள், சார். நீங்கள் சொல்லும் 'தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள்' பற்றி இங்கே பார்க்கவில்லை போலும். என்னைப் பற்றிய தீர்ப்பெழுதும் முன் என் பதிவுகள் எல்லாவற்றையும் பாருங்கள், ஐயா.

நீங்கள் நம்ப முடியாத ஆனால் நான் நம்பும் சமூக அக்கறையுடன்தான் இவைகளை எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமியரை மட்டும் குறை சொல்ல எழுதப் பட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இத்தவறுக்குக் காரணம் நான் ஏற்கெனவே சொன்னதுதான்: 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல? குண்டு எல்லாம் எதற்காக என்ற அந்த "நாத்திகப்" பதிவை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்துப் பார்த்தால் நான் முக்கிய குறையாகச் சொல்வது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். பொறுமையில்லை உங்களுக்கு. இப்படி எழுதிய பதிவு மட்டும்தானா கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து எழுதியுள்ள பதிவுகளும், அவைகளில் எழுதியிருப்பவைகளையும் ஏன் படிக்க உங்களுக்குப் பொறுமையில்லை? ஏதோ இஸ்லாமை எதிர்க்க மட்டுமே நான் பதிவுகள் எழுதுவதாக நினைத்து விட்டீர்களா?

என் மதப் பதிவுகளிலும் நான் நம்பிய என் மதத்தைப் பற்றிய நான் எழுப்பிய ஐயங்கள் உங்கள் கண்களில் படவில்லை; நான் இஸ்லாமைப் பற்றி எழுதியது மட்டுமே உங்களை வந்தடைகிறது என்றால் அதற்குக் காரணம் உங்கள் ஒற்றைச் சாளர வீடு. நான் என் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் முழுமையாகத் திறந்து வைத்துள்ளேன் - கொடுப்பதற்கும், பெறுவதற்கும். நாம் இருவருமெழுதி வரும் பதிவுகளின் உள்ளீடே இதைச் சொல்லும். உங்கள் மதம் சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதும் உங்களை ஒரே ஒரு பதிவு மாற்றி எழுதட்டுமே என்றுதான் 'அழகான ஆறு' தொடர் பதிவிற்கு உங்களை அழைத்தேன். அழைப்புக்கு எந்த response-ம் இல்லை. அதைத் தப்பு என்று கூறவில்லை. எழுத முடியாமைக்கு வருத்தம்கூட சொல்லவில்லையே என்று கூட நான் நினைக்கவில்லை. ஏனெனில் மத ஈடுபாடு மட்டுமே உங்கள் பதிவுகளுக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது என் ஒரு பதிவில் நான் இஸ்லாமியரின் வழிபாட்டை, அதற்கான ஒரு சமூக மீறலைப் பற்றி சொல்லியதும்.அதற்குப் பிறகு நான் குற்றம் கண்டது யாரை என்றுகூட புரிந்து கொள்ளாமல், ஏன் அந்தப் பதிவுக்கு அந்தத் தலைப்பை வைத்தேன் என்று கொஞ்சமும் யோசித்துப் பார்க்காது, 'ஆஹா, என் மதக்காரர்களை குறை சொல்லிவிட்டாயா' என்ற உங்கள் கோபமும் எரிச்சலும் உங்களின் பார்வையை எனக்கு முழுவதுமாகப் புரியவைக்கிறது. 'அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது' என்று சொல்லி அதன்பின் ஏன் அந்தத் தலைப்பு வைத்தேனென்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஒரு சமூகம் அங்கீகரித்து விட்ட, அதற்காக நான் சந்தோஷமும் பெருமையும் படும் ஒரு சமூக மீறலைப் பற்றிப் பேசியபோது வந்துள்ள உங்கள் கோபம், அதன்பின் //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி// எழுதி வரும் மற்ற சமூக மீறல்களைப் பற்றியும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். என் பதிவில் நடுத்தெருக் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியதில் மிகுந்த மத நம்பிக்கைகொண்ட ஒரு பதிவர், 'சாமியெல்லாம் இப்படி இடைஞ்சல் தரும்படி சொல்லவில்லை; இப்படிப்பட்ட கோவிலை, அத்துமீறலை இடித்து அகற்ற வேண்டும்' என்று சொல்லியுள்ளார். உங்களால் அப்படி ஒரு நிலைப்பாட்டை இஸ்லாமைப் பொருத்தவரை எடுக்க முடியாது. குதிரைக்கு கண்ணில் மாட்டும் blinkers போல் ஒரே நேர்கோட்டுப் பாதை உங்களுக்கு என்று நினைக்கிறேன். நான் நாலு பக்கமும் பார்க்கிறேன். எது சரியென்று நான் தீர்ப்பிடவில்லை.

நல்லடியார், உங்கள் நம்பிக்கையை, மதத்தை, நடைமுறைகளை யாரும் கேள்வி கேட்டாலே தவறு என்று நினைக்கிறீர்கள். எல்லா மதங்களுமே மக்களுக்கான பொது விஷயங்கள். அவைகளைப் பற்றிய விவாதங்கள் நீங்களே உங்கள் பதிவுகளில் சொல்லியுள்ளது போல காலம் காலமாய் இருந்து வருபவை; என்றும் இருக்கும். மார்க்ஸியமும், இன்றைய உலகமயமாக்கலும் விவாதத்திற்குள்ளாவது போல்தான் மதங்களும் விவாதத்திற்குட்படும். அதுவே நியதி. நாத்திகனாக ஒருவன் மதத்தைப் பற்றிய விவாதத்தை வைத்தால் அதற்குப் பதில் தெரிந்த நம்பிக்கையாளர்கள் பதில் தர முனைவதும், பதில் தெரியாத நம்பிக்கையாளர்கள் 'நீ என்னமும் சொல்லிட்டு போ; எனக்கு என் கடவுள் நம்பிக்கை பெரிது' என்று சொல்லிப் போவதுதான் நடைமுறை. இதில் கேள்வி கேட்டாலே அது தவறு என்ற நிலைப்பாடு சரியா? ஏன், இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றிய சர்ச்சையில் கலந்து கொள்வதில்லையா? சொல்லில் மரியாதையோடு, புண்படுத்தாத மொழியில், sensible-ஆக, சரியான logic-ஓடு மதங்களைப் பற்றிய கேள்விகளை நாத்திகர்கள் எழுப்பிக் கொண்டிருப்பது தொடரத்தான் செய்யும். இதில் எந்த மதத்திற்கும் விலக்கு இல்லை. பதில் இருந்தால் தாருங்கள்; இல்லையேல் விட்டு விடுங்கள்.

உங்கள் பதிவுக்கு மட்டுமல்ல; என் பெயர் சொல்லிவரும் சில பதிவுகளை நான் கண்டு கொள்வதில்லைதான். மொழியாளுமை ஒரு காரணம் என்றால் சில நேரங்களில் என் பதிலுக்கு எந்த பயனுமிருக்கப் போவதில்லை என்று தெரியுமாதலால் விட்டு விடுகிறேன்.

இரண்டு உதாரணங்கள்:
1. //தான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற பிரதானக் காரணமாக, இயேசுவை கர்த்தர் காப்பாற்றவில்லை என்பதால் கடவுளின் வல்லமை, கேள்விக்குரியதாகிறது என்றார்.//
இதற்குப் பதில் சொல்லிவிட்டோம் ஆகவே எங்கள் மதத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே என்றொரு கேள்வி உங்களிடமிருந்தும், மற்றும் உங்கள் நண்பரொருவரிடமிருந்தும். இதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. காரணம் - இவர்கள் தாங்கள் செய்யும் விவாதம் என்னவென்று தெரியாமல் செய்கிறார்களே என்றுதான். ஏனெனில் நான் இதைப் பற்றிப் பேசும்போது predeterminism vs free will; predeterminism vs prayers என்ற தளத்தில் பேசுகிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு அல்லாஹ் ஈசாவைக் காப்பாற்றி விட்டாரே; பின் என்ன? இங்கே வந்துவிடு என்பது ....?! குண்டு பதிவில் நான் கூறியதில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அப்பதிவின் spirit-யை தவற விட்டது போலவே இங்கும் தவறு செய்துள்ளீர்கள். உங்கள் கருத்துப்படியே வைத்துக் கொண்டாலும், கிறித்துவம் பற்றிப் பேசியபோது, ஜிப்ரேல் பற்றி சொன்னதுபோல, இரண்டு மதக்காரர்களுக்கு இரு வேறு நம்பிக்கைகள்; இதில் எது சரி? அல்லது, எல்லாமே கதைதான் என்கிற என் மூன்றாவது option-ம் சரியாக இருக்கலாமில்லையா? என் பதிவுகளில் நான் சொன்னதை முழுமையாக உள்வாங்கியிருந்தால் இந்த உங்கள் குற்றச்சாட்டுக்குத் தேவையே இருந்திருக்காது.

2. உங்கள் நோக்கியா பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் கேட்டது ஏன் மனிதனுக்கும் கடவுளுக்குமிடையில் இப்படி ஒரு கொடூரம் என்று. அதற்கு நோக்கியா வாங்கிய தருமியில் பதில் கொடுத்துள்ளீர்கள்.

என் கேள்வி: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

உங்கள் பதில்: தன் மகன் எக்காரணம் கொண்டும் நஷ்டமடைந்து விடக்கூடாது என பேரன்புகொண்ட தந்தை தேவைப்பட்டால் மென்மையாக அடித்தும்கூட எச்சரிப்பார்.

ஒன்று செய்யுங்கள் - இந்த இரண்டு விவாதங்களையும் உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாருமிருப்பின் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள். என் கேள்வியில் உள்ள 'கடவுளின் கொடூரம்' உங்கள் பதிவில் 'மென்மையாக' மாறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு இஸ்லாமியரல்லாத ஒருவரைப் பார்க்க ஆசை. ஆனால் நான் உங்கள் ஒரு சாளர வீட்டிற்கு வந்து இதைச் சொன்னால் என்ன பயன்? இருவரும் ஆளுக்கொரு முயல் வைத்துக் கொண்டு, குருடர்கள் பார்த்த யானைக் கதை போல் ஏதாவது தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பயன் இருக்கும்?

இருந்தாலும், உங்களின் அந்தப் பதிவில் நான் போட நினைத்த பின்னூட்டம் இதுதான்:

நல்லடியார்,

இந்த எழுத்து என் ஸ்டைல் கிடையாது. உங்கள் ஸ்டைலிலேயே பதில் சொல்ல முயன்றுள்ளேன்.

நோக்கியாவில் நீங்கள் சொன்ன இந்த ஒப்பந்தங்கள் மட்டும் இருந்தால் சரி. ஆனால் கடைசியாக இன்னுமொரு ஒப்பந்தம் இப்படி இருந்திச்சுன்னா என்ன பண்ணணும்னு சொல்லுங்க:

"நோக்கியா போன் வாங்கியது வாங்கியதுதான். இனி எப்போதேனும் அந்த உரிமையாளர் இந்த போனை மாற்ற நினைக்கவோ, இல்லை அதன் தரம் பற்றிய ஐயங்கள் ஏதும் எழுப்பவோ, இந்த போனை விட்டு விட்டு வேறு போன் ஏதும் வாங்க நினைக்கவோ கூடவே கூடாது. அப்படியின்றி "...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், நோக்கியா கம்பெனி அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடும்" என்றால் ...?"


என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.


பதிவர் கல்வெட்டு போன்று சிலர் என்னிடம் 'நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது தேவையற்ற ஒரு வீண் வேலை' என்றார்கள். நானோ எப்படியோ இதை ஒரு academic interest ஆக ரொம்ப ஆண்டுகளாக வளர்த்துக் கொண்டு விட்டதால் என்னால் நாய்வாலை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும் மதங்கள் பற்றிய என் பதிவுகளை நான் எப்போதோ முடித்துக் கொண்டேன். எல்லா மதங்களைப் பற்றிய என் கேள்விகள் பலவும் கேள்விகளாகவே இன்னும் இருக்கின்றன. அவ்வப்போது உங்களைப் போன்றோர் தரும் பதில்களுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமே செய்து வருகிறேன். கொஞ்சம் நாய்வாலை நிமிர்த்தி வச்சிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

ரொம்ப நாள் கழிச்சி, நீண்ட, எனக்குப் பிடித்த மதம் பற்றிய ஒரு பதிவை இட வழிசெய்தமைக்கு நன்றி.
===============================================================================


12.06.'07 காலை 10 மணிக்கு சேர்த்த பின் குறிப்பு:
1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?

2. நான் நடுத்தெரு இந்துக் கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தும் ஒரே ஒரு இந்துவாவது ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியுள்ளாரா? அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்ற தத்துவத்தைப் பொழிந்துள்ளார்களா? வேறு மதக்காரர்கள் சாலைகளில் அப்படி பண்ணவில்லையா? இப்படி செய்யவில்லையா என்று கேள்வி கேட்டிருக்கிறார்களா? சாலைகள் எல்லாமே மிக நன்றாகவா இருக்கு; வேறு தடைகளே கிடையாதா என்றெல்லாம் கேட்கவில்லை. இதனால்தான் குடி கெட்டுவிட்டதாக்கும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் காட்டும் இந்த தீவிரம் ஏன், அது சரிதானா என்று தயவு செய்து உங்களையே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள்.

3. என்னை வேற்றொரு மதக்காரனாகப் பார்த்தாலும் இந்து கோவில்களைப் பற்றிப் பேசும்போது கூட நான் என்ன சொல்கிறேன்; அது சரியா என்றுதானே அந்த மதக்காரர்கள் பார்த்தார்கள். நான் மதத்தைத் தாக்குவதாக யாரும் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. ஏன்? எது சரி? ஒருவேளை உங்களைப் போல அவர்களும் இருந்தால்தான் சரியா? புரியவில்லை.

Thursday, June 07, 2007

222. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 2

இன்னொரு படக்கதை.

மதுரைக்கு வடக்கிருந்து வரும் புகைவண்டிகள் ஊருக்குள் நுழையுமிடத்தில், புகைவண்டிப் பாதைக்கு இணையாக ஒரு பாலம் கட்டினார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்.மேம்பாலம் இல்லாத இந்த இடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல இது ஒரு தேவையான பாலம்தான். முதல்படத்தில் இந்த பாலத்தையும், பாலத்திற்கு அடுத்துள்ள ரயில்பாதையும் தெரியுதா? ஆனா கட்டுவதற்கு முன்பே இந்தப் பாலம் அடுத்த முனையில் ஊருக்கு உள்ளே வரைசெல்ல ஏதும் தடையேதும் உள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும். பாவம்! என்ன அவசரமோ .. வேக வேகமா கட்டினாங்க போலும்.
இரண்டாவது படத்தில பார்க்கிறது மாதிரி பாலம் முடிஞ்சி, ரோடு நல்லா அகலாமாத்தான் இருக்கும். ஆனா இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் குறுக ஆரம்பிக்கும். வலது பக்கம் மஞ்சள் பெயிண்ட அடிச்ச இடம் தெரியுதில்லையா .. அங்கதான் குறுக ஆரம்பிக்கும். இப்போது
வலது பக்கம் கோவில் சுற்றுச் சுவர்களில் அடிக்கும் காவி-வெள்ளை வண்ணக் கோடுகள் தெரியுதா? அந்த இடத்தில் முதலில் ரோட்டுக்கு உள்ளடங்கி ஒரு கோவில் இருந்தது. உள்ளே இருந்த கோவிலின் வெளிச்சுவர் இப்போது மட்டும் எப்படி வெளியே வந்து, ரோட்டில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்தது பற்றி ஒரு கதை தெரியும்.

பாலம் கட்டி முடித்த பின்தான் அந்த சாலையின் கடைசிமுனைக்கு கொஞ்சம் முன்புள்ள அந்தக் கோவிலுக்குரிய இடம் சாலைக்கு மிக அருகில் இருப்பதைக் கவனித்துள்ளார்கள். அப்போது மதுரை கமிஷனராக இருந்து மதுரைக்குக் குறுக்கே அங்குமிங்குமாக நீரின்றி அமைந்திருக்கும் கிருதிமால் 'நதி'யின் மீதிருந்த ஆக்கிரமிப்புகளை தீவிரமாக அகற்றி மக்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்த அதிகாரி, நான் எங்கள் கல்லூரியில் நடத்திய பட்டரை ஒன்றின் open house session-ல் கூறியது: சாலைக்கருகே இருந்தமையால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக - bottle neck-ஆக - இருக்கும் அந்தக் கோவிலின் முற்றத்தை கையகப்படுத்தும் முயற்சியாக, அந்தக் கோவில் நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு செண்டுக்கும் குறைவான அந்த முற்றத்தை விட்டுத் தந்தால் அந்த்க் கோவிலுக்காக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தைத் தருவதாகச் சொல்லியுள்ளார். கோவில் அங்கேயே இருக்கும்; முற்றம் இருக்கும் இடம் மட்டும் கொஞ்சம் குறையும்.
பொதுநலத்திற்காக இந்த உதவியைக் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். முடியாது என்று மறுத்ததோடு மட்டுமின்றி, அந்தக் கோவிலுக்குரிய இடத்தையும் தாண்டி, சாலையின் பெரும்பகுதியை வளைத்துக் போட்டு பெரிய காம்பவுண்டு சுவரையும் எழுப்பி விட்டார்களாம். 'புல்டோசர் கொண்டு ஒரு மணிநேரத்தில் அந்தச் சுவரை காலி செய்ய முடியாதா?' என்று கேட்ட மாணவர்களிடம் அவர் வருத்தத்தோடு, 'இதில் மதம் வந்து விட்டது; அப்படியெல்லாம் செய்தால் பிரச்சனை பூதாகரமாகி விடும்' என்றார்.

இன்றும் traffic bottle neck என்பத்ற்கு ஒரு நல்ல உதாரணமாக அந்த இடைஞ்சல் இன்னும் தொடர்கிறது; தொடரும். இதனால் பாலம் கட்டியும் அந்தப் பாலம் அதிகம் பயன்படாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்காக மக்கள் இந்தப் பாலத்தை முழுமையாகப் பயன் படுத்துவதில்லை. ஏதாவது ஒரு காரணத்துக்காக இந்தப் பாலம் வழியாக செல்ல வேண்டியதேற்பட்டால் - இரண்டு மூன்று முறை எனக்கு அந்த அனுபவம் உண்டு - தொலைந்தீர்கள் நீங்கள்!

வாழ்க்கையில் விரக்தி நிலைக்குத் தள்ளப் படுவீர்கள். (கடைசி இருபடங்களும் பாலத்தை நோக்கிச் செல்லும் எதிர்முகமான சாலையைக் காட்டும் படங்கள்)

- இதில் பாலம் கட்டுவதற்கு முன்பே சரியான ஆய்வுகளை மேற்கொள்ளாத அரசு அதிகாரிகளை நொந்து கொள்வதா?

- மதத்தின் பெயரால் ஊருக்கே இடைஞ்சல் தரும்படி, தங்களுக்குரிய இடத்தையும் தாண்டி மதம் தரும் "ஊக்கத்தால்" சுவர் எழுப்பிய கோவில்காரர்களை நொந்து கொள்வதா?

- இவ்வளவுக்குப் பிறகும் கோவில் நிர்வாகத்தினரை மீறி, அந்தச் சுவர்களை எடுத்து 'நாட்டுக்கு நல்லது' செய்ய முடியாத அரசின் கையாலாகாத நிலையை நொந்து கொள்வதா?


இதில் எனக்கு இன்னுமொரு கேள்வி. என் 217வது, 219-வது பதிவுகளில் எல்லா மதத்தினருமே தங்கள் மதத்தின் பெயரால் பல சமூக இடைஞ்சல்களுக்குக் காரணமாயுள்ளார்கள்; இதில் எம்மதமும் விதி விலக்கல்ல என்று கூறியுள்ளேன். அப்படியானால் நம்பிக்கையாளர்களின் ஒட்டு மொத்தமான இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன? அவர்களின் மத நம்பிக்கையா? மதத்தின் மேலுள்ள அதீத பற்றா? கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய வேண்டும் என்ற மதக் கோட்பாடா? நிச்சயமாக இதில் ஏதும் இல்லை. மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு செய்யும் நியாயமற்ற காரியங்கள். தங்கள் கடவுளர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் செய்வதல்ல இவை. நாம் இப்படியெல்லாம் மதத்தின் பெயரால் செய்தால் நம்மைக் கேள்வி கேட்க ஆளில்லை, கேட்க முடியாது என்ற ஆணவம்தான் காரணம். தங்கள் மேல் இப்படி ஒரு ஒளிவீச்சு விழுவதில் எல்லா மதக்காரர்களுக்கும் தனி சந்தோஷம்தான் - vicarious pleasure?

இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களினால் ஏற்படும் இடைஞ்சல்களை மற்றவர்கள் கொஞ்சம் adjust செய்து கொள்ள வேண்டுமென்பது ஒரு சாராரின் வாதம். இப்படி தனி மனிதர்கள் அட்ஜஸ்ட் செய்வது தனிமனித நாகரீகம்தான். ஆனால் 'நீ எனக்காக அட்ஜஸ்ட் செய்தே ஆகவேண்டும்' என்று நிர்ப்பந்திப்பதை அதுவும் ஒரு குழுவாக, அரசியல், பணம், மதம், ஜாதி இப்படி ஏதோ ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, நீங்கள் எல்லோரும் adjust செய்துகொண்டே ஆக வேண்டும் என்றால் அது நாகரீகம்தானா? We dont have any right to be a nuisance to others. None should be forced to 'adjust' for others. அதுதான் ஏற்கெனவே சொன்னதுபோல் அழகாக தமிழில் சொல்லிச் சென்றிருக்கிறார்களே :அடுத்தவனுக்கு உபகாரமா இல்லாவிட்டாலும் உபத்திரமாக இராதே!

இப்படி தெருவில் கேள்வி கேட்பாரற்று நடக்கும், முன்பு ஒரு பதிவில் நான் எழுதிய ஒரு வழக்கமான நிகழ்வுக்கும், மேற்கூறியவைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ஆனால் நமக்கு இந்த civic sense என்பதுதான் சுட்டுப் போட்டாலும் வராதே! அது எப்படி? ஒருவேளை, இந்தப் பண்பு நம் தேசிய குணமோ?

Monday, June 04, 2007

221. ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!

ரெண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வீட்டுக்கொரு மரம் கொடுக்கமுடியாததாலோ என்னவோ, வீட்டுக்கொரு டி.வி. அதுவும் கலர் டி.வி. என்றெல்லாம் சலுகைகள் தேர்தல் வாக்குறுதிகளாக வந்த போது, இந்த வாக்குறுதிகளை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; இதுவே தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமாக இருக்கப் போகிறதென்றுதான் என் கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த இலவசங்களே மக்களுக்கு தேர்தல் களத்தில் மிகவும் பிடித்துப் போன திட்டங்களாகப் போனது. முதலில் கேலிசெய்த ஜெயலலிதாவும் தானும் பதவிக்கு வந்தால் இவையெல்லாவையுமே நிறைவேற்றுவேன் என்று பல்டி அடித்தார். எப்பவும் மொதல்ல சொன்னவங்க சொல்லுதான அம்பலமேறும் அப்டின்ற விதிப்படி திமுக அமோக வெற்றி.

இந்த அரிசித் திட்டம் எப்படியோ .. பொருளாதார நிபுணத்துவம் எல்லாம் இல்லாத என் போன்ற ஆளுக்கு எல்லோருக்கும் அந்த விலையில் அரிசி தரணுமா அப்டின்றது இன்னும் கேள்விதான்.

ஆனால் இந்த டி.வி. திட்டத்தை நினச்சு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியலை. இது பத்தாதுன்னு பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் அப்டின்னு ஒரு திட்டம். இது புதுசு இல்லைன்னாலும் அந்தத் திட்டமும் வேகமா செயல்பட ஆரம்பிச்சது. இதில interesting ஆன விஷயம் என்னன்னா, ரெண்டு மாசத்துக்கு முந்தி இந்த மாதிரி இலவசமா மாணவர்களுக்குக் கொடுத்த சைக்கிள் ஒன்றில் எங்க வீட்டுக்கு கேபிள் 'பையன்' வந்தான். 'என்னப்பா? இந்த சைக்கிள் உனக்கேது? ' என்றேன். 'ரெண்டாயிரம் பெறக்கூடிய சைக்கிள் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவா கிடச்சுது; வாங்கினேன்' அப்டின்னான். 'என்னப்பா, இது படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடுத்தது எப்படி விற்பனைக்கு வந்தது' என்றேன். 'என்ன சார், விவரமே இல்லாத ஆளா இருக்கீங்க .. சைக்கிள் ஓட்டத்தெரியாத ஆளுக்குக் கொடுத்தா அவன் / அவள் விக்க மாட்டாங்களா? அதோட, ஏற்கெனவே ஒண்ணுக்கு ரெண்டா சைக்கிள் வச்சிருக்க ஆளுக்கு இன்னொண்ணு கொடுத்தா .. மிஞ்சிப் போனா சந்தனம் கூட ... அப்டிங்கிறது மாதிரி .. விக்க மாட்டாங்களா?' என்றான். அதோடு இதே கதைதான் டி.வி.க்கும் என்றான். 'வேணும்னா சொல்லுங்க.. புது கவர்மெண்ட் டி.வி. இறக்கிருவோம்' அப்டின்னான். அதும் இதே கதைதானாம். இருக்கிறவங்களுக்கு இந்தா பிடி இன்னொண்ணுன்னு கொடுத்தா விக்க மாட்டாங்களா?

ஒண்ணுமே புரியலைங்க. 5 வருஷத்துக்கு முந்தி ரிட்டையரா ஆகுறதுக்கு கொஞ்ச நாளே இருக்கும்போது வயத்தில பயங்கரமா புளி கரைச்சாங்க. என்னன்னா, கவர்மென்டிடம் காசே இல்லை; அதனால ரிட்டையரா ஆகுற ஆளுகளுக்கு மொத்தமா கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காது; ஒண்ணுக்குப் பாதி காசு; மீதிக்கு பேப்பர் - அதாவது bond கொடுக்கப் போறாங்க அப்டின்னு செம வதந்தி. இதிலேயே ஹார்ட் அட்டாக் வந்த கேசுகள் உண்டு - சீரியஸாதான் சொல்றேன். எப்படியோ காசு எல்லாம் முழுசா வாங்கித்தான் ரிட்டையரா ஆனோம், இருந்தாலும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல போன முதலமைச்சர் புண்ணியத்தில வயத்துல நெருப்புத்தான்.

இப்படி இருந்த நமது அரசின் கருவூலம் எப்படி அதுக்குப் பிறகு நிறைஞ்சுது; எங்களுக்கெல்லாம் காசு முழுசா கிடச்சுது. முதலில் முந்திய முதல்மைச்சரால் மறுக்கப் பட்டவைகள் எப்படி அவர் காலத்திலேயே சாத்தியமாயின என்பதெல்லாம் தெரியாது. பலி போடாதே அப்டின்னு ஒரு சட்டம் வந்தது; வந்த வேகத்தில போயி, நீ ஆடு வேணும்னாலும் வெட்டிக்க; புலிய வேணும்னாலும் வெட்டிக்க; இல்ல, தலையில் பாறாங்கல்லைப் போட்டுக்கிட்டு சாமி கும்பிட்டுக்கன்னு ஆயிப் போச்சு. அரசு ஊழியர்களுக்குப் பைசா கிடையாது; அரசிடம் காசே இல்லைன்னு முதல்ல. தேர்தல் நெருங்கும்போது கஜானா திறந்து முதலமைச்சர் வள்ளலானார்.

ஆனால் அதுக்குப் பிறகு வந்த இப்போதைய அரசோ சும்மா லெஃப்ட், ரைட்டுன்னு காச அள்ளி வீசுது. ரெண்டு ரூபாய்க்கு அரிசி, சும்மாவே ஆளாளுக்கு டி.வி. அதுவும் கலர்ல, சைக்கிள் பள்ளிப் பிள்ளைங்களுக்கு, பஸ் பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு, ஆளில்லாத ரயில்வே கேட்டில் அவ்ளோ பெரிய ரயில் வண்டி வர்ரது தெரியாம, கண்ணை மூடிக்கிட்டு வண்டி ஓட்டி வந்து அடிபட்டா செத்துத்தொலைஞ்சா, செத்தவங்க, அடிபட்டவங்க பேர்ல என எல்லாத்துக்கும் காசு, அமெரிக்காவில் இறந்த பேராசிரியரைப் பார்க்க போன பெருங்கூட்டத்துக்கு விமான 'பாஸ்', - இப்படி, விழுந்தா காசு; எழுந்தா காசுன்னு இறைக்கிறத பார்த்தா ஒண்ணுமே புரியலையே. காசே இல்லாம ஒரு முதலமைச்சர் ஆட்சி நடத்துறேன்னு ஒரு கதை முதலில். அடுத்த வந்திருப்பவரோ - திருநெல்வேலி வார்த்தை ஒன்று உண்டு - மானாங்கணியா காசை இறைக்கிறார்.

இலவச மயம் என்று ஒரு பக்கம் இருந்தது பத்தாதுன்னு இன்னொரு "நல்ல" திட்டம்! தமிழில் பெயர் வைத்தால் சினிமாவுக்கெல்லாம் வரியில் தள்ளுபடி. அடப்பாவிகளா அப்டின்னுதான் எனக்குத் தோணியது. படத்து நீளத்தைக் குறைத்தால் வரி விலக்கு என்றால் அநாவசிய டப்பா டான்ஸுகள் இல்லாம நல்ல படம் வந்திராதான்னு ஒரு நப்பாசை உண்டு. ஆனா அதெல்லாம் படம் எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ,பெயர் மட்டும் தமிழில் வச்சுக்கோ அப்டின்னா அது என்ன புத்திசாலித்தனமோ? ராமதாஸுக்கு செக் வச்சதாக நினைப்போ என்னவோ? தமிழுக்கும் தொண்டு "ஆத்தி"யாச்சி; ராமதாஸுக்கும் ரவுண்டு கட்டியாச்சின்னு ஒரு நினைப்புன்னு நினைக்கிறேன்.

கருத்துக் கணிப்பு விவகாரத்தைக் கையாண்டதா நினச்சா உண்மையிலேயே எனக்கு ஒண்ணும் புரியலை. நமக்கு வெளிப்படையா தெரியறதை விடவும் ஆழமா அந்தக் குடும்பத்துக்குள்ள என்னென்னமோ நடக்கிறது மாதிரிதான் தோணுது. பிறகு என்னங்க... மூணு பேரு செத்ததுக்கு ஒரு மண்ணும் நடக்கலை. அந்தப் பக்கம் ஆளுக்கு ரெண்டு லட்சம்; முடிஞ்சிது கதை. ஆனால் அரசியல் அரங்கில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். அந்தக் காலத்தில R.S.மனோகர் அப்டின்னு ஒரு பெரிய நாடகக்காரர் இருந்தார்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். டக்கு டக்குன்னு சீன்கள் எல்லாம் மாறி மாறி வரும். ஒரு நிமிஷம் தேவலோகம்னா அடுத்த நிமிடமே இன்னொரு நாகலோகம்னு காமிப்பார் நாடக மேடையில். அவ்ளோ வேகம்; அவ்ளோ டெக்னிக். ஆனாலும் இப்போ ஒரு மாசத்தில நடந்த திரை மாற்றங்கள் முன்னால் அதெல்லாம் தூசுதான், போங்க!

இதையெல்லாம் தாண்டி இப்போ எனக்கு தலைசுத்துறதுக்குக் காரணம் நேத்து நடந்ததுதாங்க. 'பாவி' மனுஷன் ஒருத்தர் கேஸ் போட்டு, நடுவில 'நல்ல' மனுஷங்க சிலர் தடை கேட்டு கேஸ் போட்டு, எப்படியோ ஒரு நல்ல விஷயம் நடந்திருச்சின்னு நினச்சேன் - இந்த ஹெல்மட் கட்டாயமா போடணும்னு சட்டம் போட்டதை. சட்டம் போட்டதும் காசு 20 கோடி கைமாறிடிச்சி; அதான் சட்டம் பாய்ஞ்சிருச்சி அப்டின்னு வேற சொன்னாங்க. அது எப்படி சரியா எவ்வளவு பணம் அப்டிங்கிறதெல்லாம் இப்படி சொல்றங்களுக்குத் தெரியுமோ? அது போகட்டும். மக்கள் மாஞ்சி மாஞ்சி வாங்கினாங்க. முதல் நாள் தெருவில் இருசக்கர வண்டியோட்டங்களே கொஞ்சம் குறைவா தெரிஞ்சிது. ஹெல்மட் போட்டுத்தான் நிறைய பேர் வந்தாங்க. ஆனால் அடுத்த நாளே நம்ம முதல்வரின் தாயுள்ளம் கனிஞ்சிருச்சி. மக்களை போலீஸ்காரர்கள் கஷ்டப் படுத்த வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டார். இது போதாதா நம்ம மக்களுக்கு. உள்ளதே ஹெல்மட் போட்டா தலைவலி, கழுத்து வலி, வழுக்கை அது இதுன்னு ஒரு பாட்டம் மக்கள் அழுதாங்க. கண்ணீரைத் துடைக்க நம் முதல்வர் வந்திட்டதால் இனிமே அவ்வளவுதான் - சங்கு ஊதியாச்சி, அந்த சட்டத்துக்குதான். வேற ஏதாவது நினச்சுக்காதீங்க. மேஏ 1-ம், தேதி 95% ஆளுங்க ஹெல்மட் போட்டு வந்தாங்க. இன்னைக்கி காலையில் 5 விழுக்காடுதான் வாங்கிட்டோமேன்னு ஹெல்மட்டோடு வர்ராங்க. சட்டமுன்னு போட்டா அதை அமுல் படுத்தி ஒழுங்கா மக்களை நடத்துறதுக்குப் பேருதான் govern பண்றது அப்டிங்கிறது. அதைச் செய்ய முடியாதவங்க நடத்துறதுக்கு, இப்படியெல்லாம் பண்றதுக்குப் பேரு என்னவோ?

முந்திய ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டுமென ஒரு உத்தரவு போட்டு, எல்லோரையும் அந்த உத்தரவுக்குப் பணிய வைத்ததை நினைத்து இப்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதைத்தான் நான் ஏற்கெனவே என் பதிவுகளிலும், ஓரிரு பின்னூட்டங்களிலும் சொன்னேன்:

1. - அர்த்தமுள்ள ஒழுங்கான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும்.
2. - மக்களுக்கு சட்டங்களை மதிக்கிற புத்தி - respecting the law of the land - வரணும்.
3. - மக்களுக்கு அந்த புத்தி வர்ரதுக்கு சட்டங்களை மீறுபவர்களுக்குரிய தண்டனைகள்
கட்டாயம் தரப் படணும்.


இதில் முதல் விஷயமே தகராறு. முதல் நாள் ஹெல்மட் போடுன்னு சட்டம்; ரெண்டாம் நாள் அய்யோ பாவம் மக்கள் அப்டின்னு இரக்கம். முதல் நாள் அனுமதியில்லாத கட்டிடம் இடிப்புன்னு பேப்பர்ல பெருசா செய்தி. நாலு நாள் கழிச்சிப் பார்த்த எல்லாமே as it were தான். இப்படி இருந்தா, நமக்குத்தான் அப்புறம் சட்ட திட்டங்களில் எப்படி நம்பிக்கை வரும். அப்படியே ஏதாவது ஒரு சட்டம் போட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டிய government machineries பற்றி கேட்கவே வேண்டாம். சிக்னல் லைட் இருக்கிற இடத்தில நிற்கிற தாணாக்காரர்களில் யாராவது ஒருவராவது, பச்சை விளக்கு விழுந்தாதான் வண்டிகள் புறப்படணும்னு சொல்லி பார்த்திருக்கீங்களா? நாலைஞ்சு வினாடி இருக்கப்பவே போங்கப்பா அப்டின்னு கைய காமிச்சிருவார். இந்தச் சின்ன விஷயத்தில் இருந்து பெரிய விஷயம் வரை அப்டிதான். இங்கு யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை.

ஏனிப்படி நடக்குது? ஏன் நம்மை ஆள்பவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? நாம் எல்லோருமே சொல்லி வச்சது மாதிரி ஏன் இப்படி இருக்கிறோம்? உருப்பட விரும்பாத நாம் மோசமா? நம்மளை உருப்பட விடாத நம் அரசுகள் மோசமா? எப்படியோ, நாம் உருப்பட்ட மாதிரிதான். Do we deserve only such people to rule us?

ஒருவேளை இப்படி இருக்குமோ?
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நாம் மாற்றி மாற்றித்தான் தேர்ந்தெடுக்கிறோம். போன தி.மு.க. ஆட்சி கொஞ்சம் நேர்மையாக, வெளிப்படையாக நடந்ததாக எனக்கு ஒரு கணிப்பு. கலைஞர் தனக்கும் தன் கட்சிக்கும் நல்ல பெயர் வாங்கிவைத்து விட்டு விலக நினைக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி நல்ல முறையில் ஆட்சி செய்தாலுமே அடுத்த முறை அவருக்கு மறுபடி மகுடம் சூட்டாமல் ஜெயலலிதாவுக்குச் சூட்டினோம். ஆகவே இந்த இரு கட்சிக்காரர்களுக்கும் புரிஞ்சி போச்சு. எப்படியும் மாறி மாறிதான் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்; ஆகவே இருக்கும் வரை ஆடிவிட்டுப் போவோம். அடுத்த முறை அடுத்தவர் அதே மாதிரிதான் ஆடுவார். அதற்கடுத்த முறை நமக்குத்தான் என்ற உண்மை / நடப்பு நம் இரு கட்சிகளுக்கும் தெரிந்துவிட்டதென நினைக்கிறேன். அதனால்தான் நம்மைப் பற்றி, நம் எதிர்வினைகள் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாத, அக்கறையுமில்லாத, தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்களோ? நமக்கும் இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு வக்கில்லாமல் மாற்றி மாற்றி இவர்களையே தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டுமா? இருக்கிற ரெண்டுமா இப்படி இருக்கணும்! ஒரே குட்டையில் ஊறின மட்டைன்னு அன்னைக்கே பெருந்தலைவர் சொன்னார் ... இன்னும் எத்தனை காலம்தான் மாறி மாறி வரும் இந்த இரண்டு கட்சி தர்பார் தமிழகத்திற்கு?

ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!

Saturday, June 02, 2007

220. THE HINDU-வில் நாமும் தமிழ்மணமும்

இன்றைய இந்து தினசரியின் Metro Plus மதுரைப் பதிவில் நம் தமிழ்ப் பதிவுகளைப் பற்றியும், நல்லா தெரிஞ்ச நம் பதிவர்கள் சிலர் பற்றியும், தமிழ்மணம்,தேன்கூடு ... பற்றியும் நல்ல சில தகவல்கள்.
very vocal பால பாரதி, demure-looking லி.ஸ்.வித்யா, motivator ஓசை செல்லா, writer பாமரன் இவர்கள் பெயர் குறிப்பிட்டு ஒரு செய்தித் தொகுப்பாக வந்துள்ளது.

பொதுசன பத்திரிக்கைகளில் நம் பதிவுகளுக்குத் தனியிடம் கிடைப்பது இந்த நேரத்தில் நம் வளமைக்கு நல்லது என்ற முறையில் மகிழ்ச்சி. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.