Monday, June 04, 2007

221. ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!

ரெண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வீட்டுக்கொரு மரம் கொடுக்கமுடியாததாலோ என்னவோ, வீட்டுக்கொரு டி.வி. அதுவும் கலர் டி.வி. என்றெல்லாம் சலுகைகள் தேர்தல் வாக்குறுதிகளாக வந்த போது, இந்த வாக்குறுதிகளை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; இதுவே தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமாக இருக்கப் போகிறதென்றுதான் என் கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த இலவசங்களே மக்களுக்கு தேர்தல் களத்தில் மிகவும் பிடித்துப் போன திட்டங்களாகப் போனது. முதலில் கேலிசெய்த ஜெயலலிதாவும் தானும் பதவிக்கு வந்தால் இவையெல்லாவையுமே நிறைவேற்றுவேன் என்று பல்டி அடித்தார். எப்பவும் மொதல்ல சொன்னவங்க சொல்லுதான அம்பலமேறும் அப்டின்ற விதிப்படி திமுக அமோக வெற்றி.

இந்த அரிசித் திட்டம் எப்படியோ .. பொருளாதார நிபுணத்துவம் எல்லாம் இல்லாத என் போன்ற ஆளுக்கு எல்லோருக்கும் அந்த விலையில் அரிசி தரணுமா அப்டின்றது இன்னும் கேள்விதான்.

ஆனால் இந்த டி.வி. திட்டத்தை நினச்சு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியலை. இது பத்தாதுன்னு பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் அப்டின்னு ஒரு திட்டம். இது புதுசு இல்லைன்னாலும் அந்தத் திட்டமும் வேகமா செயல்பட ஆரம்பிச்சது. இதில interesting ஆன விஷயம் என்னன்னா, ரெண்டு மாசத்துக்கு முந்தி இந்த மாதிரி இலவசமா மாணவர்களுக்குக் கொடுத்த சைக்கிள் ஒன்றில் எங்க வீட்டுக்கு கேபிள் 'பையன்' வந்தான். 'என்னப்பா? இந்த சைக்கிள் உனக்கேது? ' என்றேன். 'ரெண்டாயிரம் பெறக்கூடிய சைக்கிள் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவா கிடச்சுது; வாங்கினேன்' அப்டின்னான். 'என்னப்பா, இது படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடுத்தது எப்படி விற்பனைக்கு வந்தது' என்றேன். 'என்ன சார், விவரமே இல்லாத ஆளா இருக்கீங்க .. சைக்கிள் ஓட்டத்தெரியாத ஆளுக்குக் கொடுத்தா அவன் / அவள் விக்க மாட்டாங்களா? அதோட, ஏற்கெனவே ஒண்ணுக்கு ரெண்டா சைக்கிள் வச்சிருக்க ஆளுக்கு இன்னொண்ணு கொடுத்தா .. மிஞ்சிப் போனா சந்தனம் கூட ... அப்டிங்கிறது மாதிரி .. விக்க மாட்டாங்களா?' என்றான். அதோடு இதே கதைதான் டி.வி.க்கும் என்றான். 'வேணும்னா சொல்லுங்க.. புது கவர்மெண்ட் டி.வி. இறக்கிருவோம்' அப்டின்னான். அதும் இதே கதைதானாம். இருக்கிறவங்களுக்கு இந்தா பிடி இன்னொண்ணுன்னு கொடுத்தா விக்க மாட்டாங்களா?

ஒண்ணுமே புரியலைங்க. 5 வருஷத்துக்கு முந்தி ரிட்டையரா ஆகுறதுக்கு கொஞ்ச நாளே இருக்கும்போது வயத்தில பயங்கரமா புளி கரைச்சாங்க. என்னன்னா, கவர்மென்டிடம் காசே இல்லை; அதனால ரிட்டையரா ஆகுற ஆளுகளுக்கு மொத்தமா கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காது; ஒண்ணுக்குப் பாதி காசு; மீதிக்கு பேப்பர் - அதாவது bond கொடுக்கப் போறாங்க அப்டின்னு செம வதந்தி. இதிலேயே ஹார்ட் அட்டாக் வந்த கேசுகள் உண்டு - சீரியஸாதான் சொல்றேன். எப்படியோ காசு எல்லாம் முழுசா வாங்கித்தான் ரிட்டையரா ஆனோம், இருந்தாலும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல போன முதலமைச்சர் புண்ணியத்தில வயத்துல நெருப்புத்தான்.

இப்படி இருந்த நமது அரசின் கருவூலம் எப்படி அதுக்குப் பிறகு நிறைஞ்சுது; எங்களுக்கெல்லாம் காசு முழுசா கிடச்சுது. முதலில் முந்திய முதல்மைச்சரால் மறுக்கப் பட்டவைகள் எப்படி அவர் காலத்திலேயே சாத்தியமாயின என்பதெல்லாம் தெரியாது. பலி போடாதே அப்டின்னு ஒரு சட்டம் வந்தது; வந்த வேகத்தில போயி, நீ ஆடு வேணும்னாலும் வெட்டிக்க; புலிய வேணும்னாலும் வெட்டிக்க; இல்ல, தலையில் பாறாங்கல்லைப் போட்டுக்கிட்டு சாமி கும்பிட்டுக்கன்னு ஆயிப் போச்சு. அரசு ஊழியர்களுக்குப் பைசா கிடையாது; அரசிடம் காசே இல்லைன்னு முதல்ல. தேர்தல் நெருங்கும்போது கஜானா திறந்து முதலமைச்சர் வள்ளலானார்.

ஆனால் அதுக்குப் பிறகு வந்த இப்போதைய அரசோ சும்மா லெஃப்ட், ரைட்டுன்னு காச அள்ளி வீசுது. ரெண்டு ரூபாய்க்கு அரிசி, சும்மாவே ஆளாளுக்கு டி.வி. அதுவும் கலர்ல, சைக்கிள் பள்ளிப் பிள்ளைங்களுக்கு, பஸ் பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு, ஆளில்லாத ரயில்வே கேட்டில் அவ்ளோ பெரிய ரயில் வண்டி வர்ரது தெரியாம, கண்ணை மூடிக்கிட்டு வண்டி ஓட்டி வந்து அடிபட்டா செத்துத்தொலைஞ்சா, செத்தவங்க, அடிபட்டவங்க பேர்ல என எல்லாத்துக்கும் காசு, அமெரிக்காவில் இறந்த பேராசிரியரைப் பார்க்க போன பெருங்கூட்டத்துக்கு விமான 'பாஸ்', - இப்படி, விழுந்தா காசு; எழுந்தா காசுன்னு இறைக்கிறத பார்த்தா ஒண்ணுமே புரியலையே. காசே இல்லாம ஒரு முதலமைச்சர் ஆட்சி நடத்துறேன்னு ஒரு கதை முதலில். அடுத்த வந்திருப்பவரோ - திருநெல்வேலி வார்த்தை ஒன்று உண்டு - மானாங்கணியா காசை இறைக்கிறார்.

இலவச மயம் என்று ஒரு பக்கம் இருந்தது பத்தாதுன்னு இன்னொரு "நல்ல" திட்டம்! தமிழில் பெயர் வைத்தால் சினிமாவுக்கெல்லாம் வரியில் தள்ளுபடி. அடப்பாவிகளா அப்டின்னுதான் எனக்குத் தோணியது. படத்து நீளத்தைக் குறைத்தால் வரி விலக்கு என்றால் அநாவசிய டப்பா டான்ஸுகள் இல்லாம நல்ல படம் வந்திராதான்னு ஒரு நப்பாசை உண்டு. ஆனா அதெல்லாம் படம் எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ,பெயர் மட்டும் தமிழில் வச்சுக்கோ அப்டின்னா அது என்ன புத்திசாலித்தனமோ? ராமதாஸுக்கு செக் வச்சதாக நினைப்போ என்னவோ? தமிழுக்கும் தொண்டு "ஆத்தி"யாச்சி; ராமதாஸுக்கும் ரவுண்டு கட்டியாச்சின்னு ஒரு நினைப்புன்னு நினைக்கிறேன்.

கருத்துக் கணிப்பு விவகாரத்தைக் கையாண்டதா நினச்சா உண்மையிலேயே எனக்கு ஒண்ணும் புரியலை. நமக்கு வெளிப்படையா தெரியறதை விடவும் ஆழமா அந்தக் குடும்பத்துக்குள்ள என்னென்னமோ நடக்கிறது மாதிரிதான் தோணுது. பிறகு என்னங்க... மூணு பேரு செத்ததுக்கு ஒரு மண்ணும் நடக்கலை. அந்தப் பக்கம் ஆளுக்கு ரெண்டு லட்சம்; முடிஞ்சிது கதை. ஆனால் அரசியல் அரங்கில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். அந்தக் காலத்தில R.S.மனோகர் அப்டின்னு ஒரு பெரிய நாடகக்காரர் இருந்தார்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். டக்கு டக்குன்னு சீன்கள் எல்லாம் மாறி மாறி வரும். ஒரு நிமிஷம் தேவலோகம்னா அடுத்த நிமிடமே இன்னொரு நாகலோகம்னு காமிப்பார் நாடக மேடையில். அவ்ளோ வேகம்; அவ்ளோ டெக்னிக். ஆனாலும் இப்போ ஒரு மாசத்தில நடந்த திரை மாற்றங்கள் முன்னால் அதெல்லாம் தூசுதான், போங்க!

இதையெல்லாம் தாண்டி இப்போ எனக்கு தலைசுத்துறதுக்குக் காரணம் நேத்து நடந்ததுதாங்க. 'பாவி' மனுஷன் ஒருத்தர் கேஸ் போட்டு, நடுவில 'நல்ல' மனுஷங்க சிலர் தடை கேட்டு கேஸ் போட்டு, எப்படியோ ஒரு நல்ல விஷயம் நடந்திருச்சின்னு நினச்சேன் - இந்த ஹெல்மட் கட்டாயமா போடணும்னு சட்டம் போட்டதை. சட்டம் போட்டதும் காசு 20 கோடி கைமாறிடிச்சி; அதான் சட்டம் பாய்ஞ்சிருச்சி அப்டின்னு வேற சொன்னாங்க. அது எப்படி சரியா எவ்வளவு பணம் அப்டிங்கிறதெல்லாம் இப்படி சொல்றங்களுக்குத் தெரியுமோ? அது போகட்டும். மக்கள் மாஞ்சி மாஞ்சி வாங்கினாங்க. முதல் நாள் தெருவில் இருசக்கர வண்டியோட்டங்களே கொஞ்சம் குறைவா தெரிஞ்சிது. ஹெல்மட் போட்டுத்தான் நிறைய பேர் வந்தாங்க. ஆனால் அடுத்த நாளே நம்ம முதல்வரின் தாயுள்ளம் கனிஞ்சிருச்சி. மக்களை போலீஸ்காரர்கள் கஷ்டப் படுத்த வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டார். இது போதாதா நம்ம மக்களுக்கு. உள்ளதே ஹெல்மட் போட்டா தலைவலி, கழுத்து வலி, வழுக்கை அது இதுன்னு ஒரு பாட்டம் மக்கள் அழுதாங்க. கண்ணீரைத் துடைக்க நம் முதல்வர் வந்திட்டதால் இனிமே அவ்வளவுதான் - சங்கு ஊதியாச்சி, அந்த சட்டத்துக்குதான். வேற ஏதாவது நினச்சுக்காதீங்க. மேஏ 1-ம், தேதி 95% ஆளுங்க ஹெல்மட் போட்டு வந்தாங்க. இன்னைக்கி காலையில் 5 விழுக்காடுதான் வாங்கிட்டோமேன்னு ஹெல்மட்டோடு வர்ராங்க. சட்டமுன்னு போட்டா அதை அமுல் படுத்தி ஒழுங்கா மக்களை நடத்துறதுக்குப் பேருதான் govern பண்றது அப்டிங்கிறது. அதைச் செய்ய முடியாதவங்க நடத்துறதுக்கு, இப்படியெல்லாம் பண்றதுக்குப் பேரு என்னவோ?

முந்திய ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டுமென ஒரு உத்தரவு போட்டு, எல்லோரையும் அந்த உத்தரவுக்குப் பணிய வைத்ததை நினைத்து இப்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதைத்தான் நான் ஏற்கெனவே என் பதிவுகளிலும், ஓரிரு பின்னூட்டங்களிலும் சொன்னேன்:

1. - அர்த்தமுள்ள ஒழுங்கான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும்.
2. - மக்களுக்கு சட்டங்களை மதிக்கிற புத்தி - respecting the law of the land - வரணும்.
3. - மக்களுக்கு அந்த புத்தி வர்ரதுக்கு சட்டங்களை மீறுபவர்களுக்குரிய தண்டனைகள்
கட்டாயம் தரப் படணும்.


இதில் முதல் விஷயமே தகராறு. முதல் நாள் ஹெல்மட் போடுன்னு சட்டம்; ரெண்டாம் நாள் அய்யோ பாவம் மக்கள் அப்டின்னு இரக்கம். முதல் நாள் அனுமதியில்லாத கட்டிடம் இடிப்புன்னு பேப்பர்ல பெருசா செய்தி. நாலு நாள் கழிச்சிப் பார்த்த எல்லாமே as it were தான். இப்படி இருந்தா, நமக்குத்தான் அப்புறம் சட்ட திட்டங்களில் எப்படி நம்பிக்கை வரும். அப்படியே ஏதாவது ஒரு சட்டம் போட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டிய government machineries பற்றி கேட்கவே வேண்டாம். சிக்னல் லைட் இருக்கிற இடத்தில நிற்கிற தாணாக்காரர்களில் யாராவது ஒருவராவது, பச்சை விளக்கு விழுந்தாதான் வண்டிகள் புறப்படணும்னு சொல்லி பார்த்திருக்கீங்களா? நாலைஞ்சு வினாடி இருக்கப்பவே போங்கப்பா அப்டின்னு கைய காமிச்சிருவார். இந்தச் சின்ன விஷயத்தில் இருந்து பெரிய விஷயம் வரை அப்டிதான். இங்கு யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை.

ஏனிப்படி நடக்குது? ஏன் நம்மை ஆள்பவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? நாம் எல்லோருமே சொல்லி வச்சது மாதிரி ஏன் இப்படி இருக்கிறோம்? உருப்பட விரும்பாத நாம் மோசமா? நம்மளை உருப்பட விடாத நம் அரசுகள் மோசமா? எப்படியோ, நாம் உருப்பட்ட மாதிரிதான். Do we deserve only such people to rule us?

ஒருவேளை இப்படி இருக்குமோ?
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நாம் மாற்றி மாற்றித்தான் தேர்ந்தெடுக்கிறோம். போன தி.மு.க. ஆட்சி கொஞ்சம் நேர்மையாக, வெளிப்படையாக நடந்ததாக எனக்கு ஒரு கணிப்பு. கலைஞர் தனக்கும் தன் கட்சிக்கும் நல்ல பெயர் வாங்கிவைத்து விட்டு விலக நினைக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி நல்ல முறையில் ஆட்சி செய்தாலுமே அடுத்த முறை அவருக்கு மறுபடி மகுடம் சூட்டாமல் ஜெயலலிதாவுக்குச் சூட்டினோம். ஆகவே இந்த இரு கட்சிக்காரர்களுக்கும் புரிஞ்சி போச்சு. எப்படியும் மாறி மாறிதான் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்; ஆகவே இருக்கும் வரை ஆடிவிட்டுப் போவோம். அடுத்த முறை அடுத்தவர் அதே மாதிரிதான் ஆடுவார். அதற்கடுத்த முறை நமக்குத்தான் என்ற உண்மை / நடப்பு நம் இரு கட்சிகளுக்கும் தெரிந்துவிட்டதென நினைக்கிறேன். அதனால்தான் நம்மைப் பற்றி, நம் எதிர்வினைகள் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாத, அக்கறையுமில்லாத, தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்களோ? நமக்கும் இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு வக்கில்லாமல் மாற்றி மாற்றி இவர்களையே தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டுமா? இருக்கிற ரெண்டுமா இப்படி இருக்கணும்! ஒரே குட்டையில் ஊறின மட்டைன்னு அன்னைக்கே பெருந்தலைவர் சொன்னார் ... இன்னும் எத்தனை காலம்தான் மாறி மாறி வரும் இந்த இரண்டு கட்சி தர்பார் தமிழகத்திற்கு?

ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!

30 comments:

மனதின் ஓசை said...

//1. - அர்த்தமுள்ள ஒழுங்கான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும்.
2. - மக்களுக்கு சட்டங்களை மதிக்கிற புத்தி - respecting the law of the land - வரணும்.
3. - மக்களுக்கு அந்த புத்தி வர்ரதுக்கு சட்டங்களை மீறுபவர்களுக்குரிய தண்டனைகள்
கட்டாயம் தரப் படணும்.
//

செவிடன் காதில் சங்குதாங்க :-(((((



//உருப்பட விரும்பாத நாம் மோசமா? நம்மளை உருப்பட விடாத நம் அரசுகள் மோசமா? //
ரெண்டுமே..

//எப்படியோ, நாம் உருப்பட்ட மாதிரிதான்.//

நிதர்சனமான உண்மை


//இன்னும் எத்தனை காலம்தான் மாறி மாறி வரும் இந்த இரண்டு கட்சி தர்பார் தமிழகத்திற்கு?//

மூணாவதா ஒரு கட்சி வந்தாலும் விளங்கும்னு நம்பிக்கை இல்லீங்களே :-((((

வெங்கட்ராமன் said...

//////////////////
தமிழுக்கும் தொண்டு "ஆத்தி"யாச்சி; ராமதாஸுக்கும் ரவுண்டு கட்டியாச்சின்னு ஒரு நினைப்புன்னு நினைக்கிறேன்.
//////////////////

Super. . .

//////////////
சட்டமுன்னு போட்டா அதை அமுல் படுத்தி ஒழுங்கா மக்களை நடத்துறதுக்குப் பேருதான் govern பண்றது அப்டிங்கிறது. அதைச் செய்ய முடியாதவங்க நடத்துறதுக்கு, இப்படியெல்லாம் பண்றதுக்குப் பேரு என்னவோ?
//////////////

theriyalaya . .. DMK Government

பாலராஜன்கீதா said...

உங்க ஊர்க்காரரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறாரே அடுத்த முறை அவருக்குதான் வாய்ப்புக் கொடுத்துப்பார்ப்போமே, அவர் என்னதான் செய்கிறார் என்று
:-))

அபி அப்பா said...

//பாலராஜன்கீதா said...
உங்க ஊர்க்காரரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறாரே அடுத்த முறை அவருக்குதான் வாய்ப்புக் கொடுத்துப்பார்ப்போமே, அவர் என்னதான் செய்கிறார் என்று
:-)) //

பத்தீங்களா! இந்த பாலராஜன் சார் சிரிக்காம சோக் அடிக்கிறாரு.. தருமி சார் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு சீரியஸ் பதிவு போட்டிருக்கார், அதை போய் இப்படி காமடி பதிவா ஆக்கினா எப்படி? தோ பாருங்க மின்னல்/குட்டி பிசாசு/அய்யணார் எல்லாம் ரெடியாயிட்டாங்க கும்மின்னு நெனச்சுகிட்டு:-))

ச.மனோகர் said...

தருமி சார்...அருமையான பதிவு.அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டு நான் அடைந்த எரிச்சல்களை அப்படியே வெளிக் கொணவர்வதாக இருந்தது உங்கள் எழுத்து.

அரசியல்வாதிகளே! மக்களாகிய நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

PRABHU RAJADURAI said...

"ஒரே குட்டையில் ஊறின மட்டைன்னு அன்னைக்கே பெருந்தலைவர் சொன்னார்"

அவரும் பேரியக்க குட்டையில் ஊறியவர்தான்...:-))

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு நடந்தும் நாம திருப்பியும் செய்த தப்பையே செய்வோம்.



அதுதான் நம்ம லாஜிக். புரியாதது.

G.Ragavan said...

தருமி சார்....நான் நெனைக்கிறத நீங்க எப்படி திருடலாம். ஒங்க மேல திருட்டு வழக்கு பதியப் போறேன். என்ன திருட்டுன்னு கேக்குறீங்களா? எண்ணத் திருட்டுதான். நல்லவேளை எல்லா எண்ணத்தையும் திருடலை. இல்லைன்னா...நான் பதிவு போடாம சும்மா உக்காந்திருக்க வேண்டியிருக்கும் :)

துளசி கோபால் said...

மக்களைப் புரிஞ்சுக்கறது சுலபமா இல்லே அரசியல்வாதியைப் புரிஞ்சுக்கறது சுலபமான்னு
ஒண்ணும்புரியாம நிக்கறமோ?

அருமையான பதிவு. எங்க மனசுலே ஓடிக்கிட்டு இருந்ததைப் படிச்ச திருப்தி.

தருமி said...

பிரபு,
பேரியக்கம் என்பதை காங்கிரஸ் என்ற பொருளிலோ, அரசியல் என்ற பொருளிலோ பயன்படுத்துகிறீர்கள் என்றே நினைக்கிறேன். காமராஜர் வாழ்ந்த காலத்தில் அவர் மீது எனக்குப் பெரிய மரியாதை ஒன்றும் இல்லை. ஆனால் இப்போது மனித தெய்வம் போல் தெரிகிறர். இப்படியும் ஒரு மனிதரா என்று. அதுவும் பொது வாழ்க்கையில் இப்படி ஒரு சுத்தமா என்று வியப்பு - இப்போது திரு; நல்லக் கண்ணு அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் அதே வியப்பு.

இவர்களோடு இப்போதைய தலைமுறை அரசியல்வாதிகளை ஒப்பிடுவதே தவறென்றே நினைக்கிறேன்.

நந்தா said...

பல பேரு சொன்னதுதான். நாங்க நினைச்சுட்டிருந்தோம். நீங்க அதை அழகான வார்த்தையால வடிச்சுட்டீங்க.

இது போன்ற நாடகங்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்கள், அந்தர் பல்டிகளை எல்லாம் பார்த்து வெறுத்துப் போய் இருந்தப்ப இவர் வந்தாரு. தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலமாகவும், தானும் சளைத்தவனில்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

Narayanaswamy G said...

""பெரியவரே""

நமக்கு தேவை ஒரு ஜனநாயக சர்வாதிகாரி. இல்லைன்னா ஒரு படிச்ச, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு Governing Bench. அதை சப்போர்ட் பண்ண ஒரு லஞ்சம் வாங்காத Implementation team. கொஞ்சம் கடுமையான சட்டங்கள்.

நடக்கர காரியமா?

நம்மில் எத்தனை பேர் சட்டங்களை முழு மனதுடன் மதிக்கிறோம்?

என் வாழ்க்கையில் நான் லஞ்சமே கொடுக்கவில்லை என்று எவராலாவது சொல்ல முடியுமா?

லஞ்சம் பெருக நாமும் காரணம்.

இப்படிப்பட்ட மனோபாவத்தில் இருக்கும் நமக்கு இப்படிப்பட்ட அரசாங்கம்தானே அமையும்?

அவர்கள் எங்கிருந்தோ குதிக்கவில்லை......... நம்மில் ஒரு பகுதி தான் அவர்களும்.......அந்த குட்டையில் விழுந்து இன்னும் மோசம் அடைகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லாம்.

குற்றம் நம்மில் இருக்கிறது......

இதை ஏற்றுக்கொள்ள நம்மில் எத்தனை பேர் தயார்?

தருமி said...

மனதின் ஓசை,
//மூணாவதா ஒரு கட்சி வந்தாலும் விளங்கும்னு நம்பிக்கை இல்லீங்களே//

அரசியல் ஒரு profession ஆக ஆகிவிட்டதால் எந்தக் கட்சி வந்தாலும் நிலைமை இப்படித்தான்.

தருமி said...

வெங்கட்ராமன்,
உங்க பதில் தப்புன்னு நினைக்கிறென். காரணத்துக்கு முந்திய என் பின்னூட்டம் பாருங்கள்.

தருமி said...

பாகீ,
என்ன விளையாடுறீங்களா? எங்க ஊரு ஆளு எப்பவே எம்மாம் பெருசா வளர்ந்தாச்சு.. நீங்க என்னடான்னா,இப்பத்தான் வளர்ந்து வர்ராருன்னு சொல்றீங்க.

தருமி said...

அபிஅப்பா,
என்ன நம்ம குடும்பத்துக்கு ப்ரேக் போட்டுட்டீங்க போலும் :)

தருமி said...

பாபு மனோகர்:அரசியல்வாதிகளே! மக்களாகிய நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியல்வாதிகள்: உங்கள எப்படி மடக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா? ஹா..

தருமி said...

வல்லி சிம்ஹன்,
எரியிற கொள்ளியில் எது ந்ல்ல கொள்ளி; எது கெட்ட கொள்ளின்னு எப்படிங்க சொல்றது?

தருமி said...

ஜிரா,
என்ன ஜிரா இப்படி சொல்லீட்டீங்க. நாம் எல்லாரும் - especially the so called 'silent majority' -நினைக்கிறதே இதுதானே; இல்லியா?

தருமி said...

துளசி,
ஜிராவுக்குச் சொன்னது மாதிரி இது நம் பொது எண்ணங்கள்தானே.
நன்றி.

தருமி said...

ஆமாம் நந்தா,
கொள்ளியில இந்த கொள்ளி மட்டும் வேறமாதிரியா இருக்க முடியும்.

தருமி said...

நாணு,
//நமக்கு தேவை ஒரு ஜனநாயக சர்வாதிகாரி..//
உங்க வயசில எல்லாருக்கும் வர்ர wishful thinking தான் இது. எனக்குக் கூட இப்படி ஒரு ஐடியா வந்து அந்தக் காலத்தில எழுதி, அதை பதிவிலேயும் போட்டேன்; பாருங்களேன்.

//குற்றம் நம்மில் இருக்கிறது......//

நானும் அதையே சொல்லியுள்ளேன்:
மக்களுக்கு சட்டங்களை மதிக்கிற புத்தி - respecting the law of the land - வரணும்.

நாம் எல்லோருமே சொல்லி வச்சது மாதிரி ஏன் இப்படி இருக்கிறோம்? உருப்பட விரும்பாத நாம் மோசமா?

ஓகை said...

//"ஒரே குட்டையில் ஊறின மட்டைன்னு அன்னைக்கே பெருந்தலைவர் சொன்னார்"

அவரும் பேரியக்க குட்டையில் ஊறியவர்தான்...:-))//

அன்றைய காங்கிரஸ் கட்சிகளை குட்டை என்று கூறுவதில் என்ன உவப்பு இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை.

காமராஜரை விட அரசியலில் சிறந்தவர்களை நாம் உருவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருந்தோமானால் அவர் எள்ளி நகையாடும் உரிமை நமக்குண்டு.

67க்கு முன்னும் பின்னுமான தமிழக அரசியலை எல்லாமே ஒரே குட்டைதான் என்கிற வாதத்துக்குள் அடக்கவியலுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

சீரழிவுகளைக் கண்டிக்காவிட்டாலும் முன்மாதிரிகளை எள்ளாமல் இருப்பது நலம்.

தருமி said...

ஓகை,
//சீரழிவுகளைக் கண்டிக்காவிட்டாலும் முன்மாதிரிகளை எள்ளாமல் இருப்பது நலம்//

உங்கள் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன்.

நன்றி.

கண்மணி/kanmani said...

நீங்க ஜட்ஜ் பண்ணதுதான் சரி.மாத்தி மாத்திப் போட்டே நாம பழக்கப் பட்டதால் 'ஏமாத்தியே' அவங்களும் பழகிட்டாங்க.

தருமி said...

pun ரொம்ப நல்லா இருக்கு.

ச.மனோகர் said...

பாபு மனோகர்:அரசியல்வாதிகளே! மக்களாகிய நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியல்வாதிகள்: உங்கள எப்படி மடக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா? ஹா..

பாபு மனோகர்: அய்யா! தப்பா புரிஞ்சுகிட்டீங்க..நாங்க உங்களுக்கு ஓட்டு போடுறோம்...லஞ்சம் கொடுக்கிறோம்..இதைத்தான்'கவனித்து'
என்று சொல்லுகிறோம்.ஆணையிடுங்கள்!
தலையை நீட்டுகிறோம்..மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்.

தருமி said...

பாபு மனோகர்,

:)

ஆடுமாடு said...

உங்களுக்கு இருக்கும் ஆதங்கம்தான் எல்லாருக்கும். ஆனால், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரால் கொடுக்கப்படும் அன்பளிப்புகளில்தான் மக்களின் ஓட்டு தீர்மானிக்கப்படுகிறது. வேறன்ன செய்ய?
பின்னூட்டத்தில் நல்லக்கண்ணு பற்றி சொல்லியிருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது என் தாத்தாவும் அவரோடு மறைந்து வாழ்ந்தவர்தான். ஆனால் என் தாத்தாவை அப்போது நான் மதித்ததில்லை. இன்றைய அரசியலையும் அரசியல் வாதியையும் ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை உணர முடிகிறது.
நான்கைந்து வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம். சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தேன். எதிரில் சப்வேயில் இறங்கி ஏறி வரும் வெள்ளை வேட்டி மனிதரை பார்த்த போது ஷாக். ஒரு கட்சியின் சாதாரண கிளை செயலாளரே டாடா சுமோ போன்ற கார்களில் வரும்போது, ஒரு கட்சியின் பொது செயலாளர்(இப்போது தா.பாண்டியன்) எவ்வளவு எளிமையாக வருகிறார் என்பது இன்னும் ஆச்சர்யம்தான். இப்போதுதான் அவரது உடல்நிலை கருதி கட்சியின் சார்பில் அம்பாசிடர் கார் வாங்கியிருப்பதாகத் தகவல்.
ஆடுமாடு

தருமி said...

ஆனா மானா,
சில அரசியல் விவகாரங்களில் கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகள் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் தந்தாலும் நீங்கள் சொல்வது போல் பெரும்பான்மையான விஷயங்களில் அவர்கள் மற்றைய அரசியல்வாதிகளிடமிருந்து வேறு பட்டிருப்பது சந்தோஷமாயும் ஆச்சரியமாயும் இருக்கிறது. ஆயினும் ஏன் இன்னும் அவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கு பெருகவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான். அவர்களுக்கும் சரி, நமக்கும் சரி பதில் தெரிந்தால் நல்லது.

Post a Comment