Thursday, September 27, 2012

594. என்னிடம் மட்டும் ஏன் கடவுள் வருவதேயில்லை ??!!!






*




’ஏங்க .. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? எப்படி இந்த ஆளை உங்களுக்கு வாரிசா தேர்ந்தெடுத்தீங்க? ’

‘அடுத்த ஆளா யாரைப் போடலாம்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு நேத்து ராத்திரி கனவுல சிவ பெருமான் வந்துட்டாரு. என் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாரு... அப்படியே பார்த்தவரு டக்குன்னு நித்தியானந்தா பெயரை ‘டிக்’ செஞ்சிட்டாரு .. அவரே சொல்லிட்டா ... பிறகு நான் எதற்கு கஷ்டப்படணும். அதான் நித்தியைக் கூட்டியாந்து பட்டாபிஷேகம் பண்ணியாச்சி’.
SELECTED & ATTESTED BY LORD SHIVA !!

இப்படி மதுரை ஆதீனம் சொன்னதாக தினசரியில் படித்ததும் எனக்கு ‘சிலீர்’னு ஆகிப் போச்சு. எப்படி சில நல்ல மனுஷங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி நேரடியா வந்து ‘டிக்’ எல்லாம் போடுறார்னு பொறாமைப் பட்டுட்டேன். நமக்கெல்லாம் இப்படி ஒண்ணும் நடக்காம லைப் ரொம்ப டல் அடிக்குதேன்னு ரொம்ப கவலப் பட்டுட்டேன்.

கிறித்துவ நண்பர் ஒருவரிடம் இதைப் பத்தி கவலைப் பட்டு பேசினேன்.

’இன்னைக்கி மாலையில் வீட்டுக்கு வாங்க .. ஒண்ணு காமிக்கிறேன் .. அப்படியே நீங்க அசந்திருவீங்க’அப்டின்னார்.

சரின்னு நானும் அவர் சொன்ன டைமுக்கு வீட்டுக்குப் போனேன். ரெடியா இருந்தார். கணினியில் ஒரு படம் ஓட விட்டார். Medjugorje அப்டின்னு ஒரு சின்ன கிராமம். Bosnia-வில் இருக்கு. நம்ம டென்னிஸ் ஜோக்கோவிச் அந்த ஏரியாதான் போலும். அங்க ஒரு ஆறு சின்ன பிள்ளைகளுக்கு மேரி மாதா 1981-ல் இருந்து தொடர்ந்து ‘காட்சி’ கொடுக்குறாங்களாம். காட்சி ஆரம்பிச்சப்போ முதல் வாரம் முழுசும் காட்சி. இப்போவெல்லாம் எல்லா மாதத்திலும் இரண்டாம் தேதி டாண்ணு மாதா அந்த ஆறுல ரெண்டு பேத்துக்கோ, மூணு பேத்துக்கோ காட்சி கொடுக்குறாங்க. அதுவும் இந்த ஆளுக எங்க இருந்தாலும் அங்கே மாதாவும் போயிர்ராங்க. அமெரிக்கா அங்க இங்கன்னு இந்த ஆளுகளும் போறாங்க. அங்கே மாதாவும் டகார்னு காட்சி கொடுக்கப் போயிர்ராங்க.  காட்சி குடுக்குறப்போ நிறைய ஆட்கள் கூட்டம் கூடிர்ராங்க. அவங்க யாருக்கும் மாதா கண்ணில பட மாட்டாங்க. அதில் அந்த Medjugorje ஆளுகளுக்கு மட்டும் மாதா கண்ணில படுறாங்களாம். அப்போவெல்லாம் மாதா அந்த ஆளுக கிட்ட ’மெசேஜ்’ குடுக்குறாங்க. நம்ம காதில, கண்ணுல ஒண்ணும் படாது. ஆனா அவங்களுக்கு மட்டும் தெரியுது. காட்சி முடிஞ்சதும் மாதா சொன்ன மெசேஜ்களை பக்கத்தில இருக்கிற ஆளுக கிட்ட இவங்க சொல்றாங்க. அதில் உள்ள இலக்கணப் பிழைகளை சரி செஞ்சிட்டு, (sic!!) அந்த மெசேஜை எல்லோரும் கேக்குறது மாதிரி வாசிக்கிறாங்க. (மெசேஜ்ல இலக்கணப் பிழையா? மாதா சொல்றதுல பிழையா? இல்ல .. காட்சி பார்க்கிற அந்த அம்மா சொல்றதுல்ல இலக்கணப் பிழையான்னு தெரியலை! அதோட எந்த மொழியில் மெசேஜ் வருதுன்னும் தெரியலை. கீழே உள்ள படத்தைப் பாருங்க. பொறுமை இல்லாட்டா கூட காட்சியை ஓட விட்டு, ஓரிரு நிமிடங்களாவது பாருங்கள்.






அந்த அம்மாவுக்கு மாதா தெரியிறது உங்களுக்குத் தெரியுதா? காட்சி கிடைக்கிற அந்த அம்மாவுக்கு வலது பக்கத்தில் நிற்கிற அந்த Father ஏதாவது தெரியுதான்னு மேல மேல பார்த்துக் கொண்டு நிற்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருக்கும் போரடிச்சிப் போனது போலும். ஐந்தே முக்கால் நிமிடம் மாதா பேசுகிறார். அந்த செய்தியை வாசிக்க சரியாக ஒரு நிமிடம் மட்டும் ஆகிறது. மாதா பேசும் போது இந்த அம்மா இங்கே தலையாட்றாங்க; பரவாயில்லை. ஆனால் மாதா ஏதோ ஜோக் அடிச்சது மாதிரி சில இடத்தில் சிரிகிறாங்க. ஆனால் செய்தியை வாசிக்கும் போது அதில் ஜோக் ஏதும் இல்லையே என்று பார்த்தேன்.

இப்படி சில அதிசயக் காட்சிகள்
அங்கு தோன்றியதாகச் 
சொல்கிறார்கள்.

வானில் சிலுவைக் குறிகள் 



எனக்குப் பல ஆச்சரியம்.  ஏன் தொடர்ந்து 1981-ல இருந்து இன்னும் தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க?  31 வருஷம் ஆகிப் போச்சு.எதுக்காக இப்படி நீளமா, 31 வருஷமா மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. (சட்டுன்னு மண்டைக்குள்ள ஒரு ஐடியா வந்துச்சு ... ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக  மாதா இன்னும் இழுத்து 31 வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!)

மெசேஜ் கொடுக்குறது  எதுவரை அப்டின்னு கேட்டேன். ஆறு பேத்துக்கு மெசேஜ் ஆரம்பிச்சாங்களா. அதில் ஒவ்வொருத்தருக்கும் ஆளாளுக்கு பத்து .. பத்து ரகசிய மெசேஜ் கொடுத்திருவாங்களாம். அது முடிஞ்சதும் மெசேஜ்  முடிஞ்சிரும் அப்டின்னார் நண்பர். அதில இன்னும் ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் ரகசியம் பாக்கியிருக்குன்னார். என்ன மெசேஜ் .. எதும் அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு நண்பர் சொன்னார். சரி .. இது ‘அந்த’ விஷயங்களுக்கு மட்டும் அப்டின்னு நினச்சிக்கிட்டேன்.நண்பரின் நம்பிக்கையைப் பார்த்தால் அனேகமா சீக்கிரம்   Bosnia-க்குப் புறப்பட்டுருவார்னு நம்புறேன்.

இதில் இன்னொரு சந்தேகம் என்னன்னா, மாதா middle east asian  ஆளு. ஆனா அவங்களைப் பார்க்கிறவங்க எல்லாரும் சொன்னதை வச்சி செய்ற சிலை, படங்கள் எல்லாத்திலேயும் அவங்க அப்படியே அமெரிக்க / ஐரோப்பிய ஆளு மாதிரி,  அதாவது ‘வெள்ளைக்கார பொண்ணு’ மாதிரிதான் இருக்காங்க. இது எப்டின்னு தெரியலை!

( 1981-லிருந்து இந்தப் ‘புதுமை’ நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்கு மாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு. சரியாக 13 தேதியில்  மாதம் ஒவ்வொன்றாக ஆறு மாதங்களுக்கு இந்தக் காட்சி நடந்ததாம். அப்போது இந்தக்
குழந்தைகளுக்கு மாதா 3 ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதில் முதல் ரகசியம் நரகம் பற்றியது. இந்த நரகம் நம் பூமிக்கு அடியில் இருப்பதாம். இதனாலேயே இந்த ‘ரகசியத்தின்’ உண்மை புரிகிறது. என்னுடன் வேலை பார்த்த ஒரு “நல்ல” கிறித்துவர் பூமிக்கு அடியில் நீண்ட துளை போட்ட  போது அங்கிருந்து ஆட்களின் அழுகை ஒலி கேட்டதாகக் கூறினார்! இரண்டாவது ரகசியம் உலக யுத்தங்கள் பற்றியதாம். மூன்றாவது ரகசியத்தைப் பற்றிப் பல கதைகளும், விவாதங்களும், முரண்பாடுகளும்  உண்டு.  இதையெல்லாம் தெரிந்த பின்னும் இப்போது மாதா  ரகசியங்கள் கொடுக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது என்பது எனக்குப் புரியவில்லை.)


சரி .. மதுரை ஆதீனம் சும்மா சிவன் வந்து ’டிக்’ பண்ணினதைச் சொல்லிட்டார். இவங்க  வீடியோவெல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காங்க. இருந்தும் நம்மட்ட இன்னும் ஒரு கடவுளும் வரலையேன்னு ஒரு வருத்தத்தோடு இருந்தேன். அப்போ முக்கியமா மீதியிருந்த இன்னொரு கடவுளும் வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நான் இங்க பதிவிட ஆரம்பித்த பிறகு ஏன் கிறித்துவத்தை விட்டு வெளியே வந்தேன்னு எழுத ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் மற்ற மதங்களைப் படிக்க ஆரம்பித்தேனா .. அப்போதான் குரான் ஒன்று வேண்டியதிருந்தது. என்னிடம் படித்த இஸ்லாமிய மாணவர் ஒருவரிடம் ஒரு புத்தகம் கேட்டேன். தானே வாங்கித் தருவதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் குரானைத் ‘தொடும்போது’ நான் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியெல்லாம் கூறினார். அதெல்லாம் நமக்கு லாயக்கு படாது. எங்கே புத்தகம் கிடைக்கும்னு சொன்னா வாங்கிக்கிறேன் என்றேன். எப்படியோ  அவரிடமிருந்தே ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் எனக்கு இறையருள் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி அன்பளிப்பாகக் கொடுத்தார். நானும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அங்கங்கே அடிக் கோடுகள் போட்டு பயன்படுத்தினேன். அதன்பின் அதில் அராபியும் தமிழும் இருந்ததாலும்,  தலைகீழாகப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டியதிருந்தாலும் வேறொரு புது குரான், தமிழ் மட்டும் உள்ளது, IFT வெளியீடு ஒன்று வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன், ரம்ஜான் மாதத்தில்  அந்த நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி. என்னவென்றேன். நான் கொடுத்த குரானைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றார். இதென்ன, அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு இப்போது திருப்பிக் கேட்கிறாரேன்னு யோசித்தேன். இருந்தும் தருவதாகச் சொல்லிவிட்டு, சில நாளில் இன்னொரு நண்பர் மூலம் திருப்பிக் கொடுத்தனுப்பினேன். அதோடு, இது அன்பளிப்பாக வந்ததால் என் புத்தகமாக நினைத்து, நிறைய குறிப்புகளும், அடிக்கோடிட்டும் வைத்துள்ளேன் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். எடுத்துச் சென்ற நண்பரும் புத்தகம் கொடுத்தவருக்கு வாத்தியார் தான். இவர் புத்தகம் கொடுத்த போது நான் சொன்னதை அவரும் சொல்லியிருக்கிறார். வந்த பதில் நன்றாக இருந்தது.

ரம்ஜான் மாதத்தில் அல்லா அவரிடம் வந்து அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி விடு என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாராம்! அதனால் தான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டாராம்.

அதிக நாட்களாக என் கண்ணில் படாத அந்த நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த நாலைந்து நாட்களில் அதிர்ஷ்ட வசமாக (??) எதிர்த்தாற்போல் வந்தார்.

என்னிடம் வந்து, ’சார், அல்லா அடிக்கடி வந்து கேட்டதால் தான் அப்படி வாங்கினேன்’ என்றார்.

நான், ‘இதையெல்லாம் நம்பிக்கையுள்ளவர்களிடம் சொல்லுங்கள். நானெல்லாம் இதை நம்புவேனா?’ என்றேன்.

’இல்லை சார், ரம்ஜான் மாதம் நோம்பு காலத்தில் முழுவதும் அடிக்கடி அல்லா வந்து என்னிடம் புத்தகத்தை வாங்க திருப்பி திருப்பிச் சொன்னார்’ என்றார்.

’அட போங்கப்பா ...gift  கொடுத்த புத்தகத்தைத் திருப்பி வாங்குன்னு சொன்ன உங்க கடவுள நினச்சா சிரிப்பு சிரிப்பா வருது;  நீங்களும் .. உங்கள் கடவுளும் ..!. bye' அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.


இப்போதும் எனக்கு ஆச்சரியம். அது சிவபெருமானோ, மாதாவோ, அல்லாவோ இப்படி அடிக்கடி சிலருக்குப் ‘பிரசன்னம்’ ஆகிறார்களே என்று வருத்தமாகப் போச்சு. ஏன் எனக்கு மட்டும் அந்த ‘அதிர்ஷ்டம்’ வரவே மாட்டேங்குதுன்னு ஒரே கவலை.

ஆமா .. இந்த மாதிரிக் கவலைகள் என்னை மாதிரி உங்களுக்கும் இருக்குதா ...?

-------------------------------------

திருவிளையாடல்

கீழேயுள்ள காணொளி ரொம்ப நல்லா இருக்கு. தலைப்பு: JESUS PRANKS.

இப்பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. மதச்சர்ர்புள்ளது தான். ஆனால் ....

இதைப் பார்த்து யாரும் யாரையும் அடிக்கவில்லை;

போராட்டமில்லை;

அட .. ஒரு கண்டனம் கூட இல்லை.

எங்க கடவுளை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று யாரும் ஒரு கடப்பாரையைக் கூட தூக்கவில்லை.

எங்க கடவுளைக் காப்பாற்றினால் ஒரு லட்சம் டாலர் தர்ரேன்னு எந்த அமைச்சனும் சொல்லவில்லை.


ஆனாலும் ... நல்ல கற்பனைகள் ..  பாருங்க.
*












*

Wednesday, September 26, 2012

593. THE GNOSTIC GOSPELS ...7

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 




முடிவுரை



வெற்றி பெற்றவர்கள் எழுதும் வரலாறு எப்போதும் அவர்கள் விருப்பம் போலவே எழுதப்பட்டு இருக்கும். இதனாலேயே வளர்ந்து வந்த பழமைக் கிறித்துவர்கள் தங்களை Orthodox என்றும்,  மற்றவர்களை heretical என்றும் பிரித்து, தாங்கள் கிளைத்து வளர்ந்ததற்கு ‘பரிசுத்த ஆவி’யே காரணம் என்றும் ஒரு வரலாற்றைப் படைத்து விட்டார்கள்.   

ஆனால் நாக் ஹமாதியின் பழம் எழுத்துக்கள் இதனை ஒரு கேள்விக் குறியாக்கி விட்டுள்ளன. ஆரம்பத்தில் பல்வேறு அமைப்புகளோடு இயங்கி வந்த கிறித்துவம் அப்படியே விடப்பட்டிருந்தால், கால அமைப்பில்  மடிந்து போன பல மதங்கள் போலவே அழிந்து போயிருக்கலாம். அந்த அழிவிலிருந்து தப்பித்தது கிறித்துவத்தின் அமைப்பு முறையாலும், இறையியல் கட்டுக்கோப்பினால் மட்டுமே முடிந்தது. (142)

பழமைக் கிறித்துவம், gnostic கிறித்துவம் போலல்லாமல்,  பிற மனிதர்களோடான உறவிற்கு முக்கியத்துவம் அளித்தது. (146)

Irenaeus கடவுள் இரட்சணியத்தின் வழியை மிகவும் புத்திசாலித்தனத்தாலோ, ஆன்மீகத்தினாலோ அடையும்படி நிச்சயமாக  வைக்க மாட்டார். எளிமையானதாகவும், எல்லோராலும் அடையும் விதமாகவும் தான் வைத்திருப்பார் என்றார். (147)

மேலும்  Irenaeus, கிறித்துவர்கள் தங்கள் மதத்தைச் சீராக வழுவ வேண்டுமென்றும்,  தலைமையின் கீழ் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும், தலைமை அனுமதிக்கும் வேத நூல்களை, சமயச் சடங்குகளை, தலைமையின் ஆளுமையை மட்டும் மதிக்கும்படியும் வலியுறுத்தினார். 

 ஏசு, லூக்: 14:26-ல் “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன் தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது”  என்று கூறியுள்ளார். (எங்கள் உயிரினும் மேலான நபி என்று இஸ்லாமியரும் சொல்வது இதன் அடிப்படையில் தானோ? அவர்களுக்கு முகமது; இவர்களுக்கு ஏசு!  மத ஒற்றுமை !!!)  தன் வழியில் வருவோர் தங்கள் சுற்றம் முழுமையையும் நிராகரிக்க வேண்டுமென்றும், தன்னைப் போலவே குடும்பம், திருமணம், உறவு என்று ஏதுமில்லாமல் தன் உயிர் பற்றிய கவலையும் கொள்ளாமல் உண்மையைத் தேடி அவர் சென்றது போலவே தன் சீடர்களும் இருக்க அவர் எதிர்பார்த்தார். (148)

கிறித்துவத்தை வெறுத்த நீட்ஷே  -Nietzsche , ‘ஒரே ஒருவர் மட்டுமே உண்மையான கிறித்துவன்; அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்’ என்று எழுதினார். (149)

gnostic கிறித்துவம் பூமிக்குள் ஓடும் ஒரு அமைதியான நதி போல் காலம் பூராவும் ஓடி வந்துள்ளது அவ்வப்போது அது நிலத்திற்கு மேலும் பீறிட்டு வருவதுண்டு; மத்திய காலக்கட்டத்திலும் (Middle Ages), அதன் பின் மறுமலர்ச்சிக் காலத்திலும் (Reformation) அப்படி வெளிக்கிளம்பிய  கிறித்துவம்  பல மாற்றங்களையும் கண்டது. அதிலும் மறுமலச்சிக் காலத்தில் Baptist, Pentecostal, Methodist, Episcopal, Congregational, Presbyterian, Quaker போன்ற பிரிவுகள் பல பழமைக் கிறித்துவத்திற்குள் தோன்றின.  இவ்வமைப்புகள் எல்லாமே புது ஏற்பாட்டையும், பழைய சமய வழிமுறைகளையும் தக்க வைத்துக் கொண்டன. கிறித்துவ தேவ திரவியங்களை அவர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிக் கொண்டனர். ஆனால் அவைகளை எப்போதும்  கைவிடவில்லை. 

Valentinus, Heracleon, Blake, Rembrandt, Dostoevsky, Tolstoy and Nietzche போன்றவர்கள் அனைவரும் இயங்கி வந்த பழமைக் கிறித்துவத்தின் விளிம்பில் மட்டுமே தங்களை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கிறித்து, அவரது பிறப்பு, வளர்ப்பு, அவரது அறிவுரைகள், இறப்பு, மீண்டும் உயிரோடு எழும்புதல் - எல்லாமே பிடித்துள்ளன. ஆனால் பழமைக் கிறித்துவத்தில் இருந்த அமைப்பின் ஆளுமைக்கு எதிராகவே அவர்கள் இருந்தனர். இன்றும் இதே நிலை பல கிறித்துவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிறித்துவத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட பல பழைய கேள்விகள்  இன்னும் அதே போல் எழுப்பப்பட்டு வருகிற்ன்றன. 

பல கேள்விகள் :- 
*ஏசுவின் மறு உயிர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது?
*பெண்களுக்கான இடம் கிறித்துவத்தில் எது?  குருவானவர்களாக, கிறித்துவத்தின் ஆளுமையில் அவர்கள் இடம் எது?
*கிறிஸ்து என்பவர் யார்?
*கிறிஸ்துவிற்கும் அவரை நம்புவோருக்கும் உள்ள உறவு என்ன?
*கிறித்துவத்திற்கும் ஏனைய உலக மதங்களுக்குமான தொடர்புகள் என்ன?
(150)

நாக் ஹமாதியில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்  கண்டெடுக்கப்பட்டிருந்தால் அன்றே அவைகள் முற்றாக எரித்து, அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இருபதாம் நூற்றாண்டு வரை பாதுகாப்போடிருந்து வெளிவந்த இந்த நூல்கள் இப்போது ஒரு புதிய வழியைக் காண்பிக்கின்றன. கிறித்துவத்தின் மீது ஒரு புதிய பர்ர்வையைக் கொடுக்கின்றன. அவைகளை வெறும் மதப்புரட்டு, பைத்தியக்காரத்தனம் என்பது போன்ற தலைப்புகள் கொடுக்காமல், அவைகளைக் கிறித்துவத்தின் ஆரம்பகாலத்து வரலாறாகப் பார்க்கிறோம். இன்றைய பழமைக் கிறித்துவத்திற்குப் போட்டியாக வரலாற்றில் அன்று இருந்த ஓர் உண்மையை இன்று காண்கிறோம். (151)








*










 

Saturday, September 22, 2012

592. THE GNOSTIC GOSPELS ... 6

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 


 VI

GNOSIS:   SELF = KNOWLEDGE

AS KNOWLEDGE  OF  GOD



யோவான் 14: 5 - 7
தோமா அவரிடம் , ‘ஆண்டவரே!நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது.  அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?’ என்றார்.
இயேசு அவரிடம், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’,  என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’ என்றார்.

யோவானின் புதிய ஏற்பாடு gnostic கிறித்துவர்களிடமும் சிறப்புத் தன்மையோடு இருந்து வந்துள்ளது. அதே போல் பழமைக் கிறித்துவர்களுக்கும், சிறு மறுப்பு வந்திருந்தாலும், இந்நூல் ஏற்புடையதாயுள்ளது. Gospel of Thomas, Dialogue of the Savior போன்ற நூல்களைப் புறக்கணித்தவர்கள் யோவானை எப்படி ஏற்றுக் கொண்டனர்?  கடவுளை ஏசுவின் மூலமாகவே பார்க்க முடியும் என்று சொல்லும்  கொள்கையே காரணம்.(119)

Gospel of Thomas-ல் ஏசு இதே போன்ற ஒரு கேள்வியை ஏசுவின் சீடர்கள் கேட்ட போது , ‘ஒளிபடைத்த ஒருவனிடம் ஒளி இருக்கிறது; அதுவே இந்த உலகை ஒளிமயமாக்குகிறது.அவனிடம் ஒளியில்லையேல் அவன் இன்னும் இருளில் இருக்கிறான்’ என்கிறார்.

வாலண்டியன் வழியினருக்கு யோவானில் வரும் வார்த்தைகள் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் பல கிறித்துவர்கள் துறவு நிலைக்கான தனிமை, உருவெளித் தோற்றம், ஆன்மீக நிலை போன்றவைகளை மேற்கொண்டனர். ஆனால் நான்காம நூற்றாண்டிற்குப் பிறகு துறவிகளும் கூட நடைமுறைக் கிறித்துவர்களோடு ஒன்றி, மதக் குருக்களுக்குக் கீழ் வரவேண்டும் என்பதை உறுதிப் படுத்தினர்.  (120)

இந்த விதக் கட்டுப்பாடுகளினாலேயே, நாக் ஹமாதி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள St. Pachomius  என்ற இடத்திலிருந்த குருமடங்களில் நாக் ஹமாதி நகல்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாமென Frederik Wisse என்பவர் தன் ஆய்வுக் கருத்தைக் கூறியுள்ளார்.  ஆனால் 367-ம் ஆண்டில் மிகவும் அதிகாரம் பெற்றிருந்த Archbishop of Alexandria, Athanasius என்பவர் இது போன்ற நூல்களை- ஐயத்துக்கிடமான தேவப் புரட்டு நூல்களை - எரித்துப் போட உத்தரவிட்டார். அதை மீறி பாதுகாக்கப்பட்ட நூல்களே 1600 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

140 - 400 ஆண்டுகளில் கிறித்துவம் ஒரு அரசியல் அமைப்பாகவே உருவெடுத்தது. இரேனியஸ் gnostic கிறித்துவர்களைப் பகைமையோடு தான் பார்த்தார். (121)


gnostic கிறித்துவர்கள் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் உருவாக்கினான் . ஆகவே கடவுள் மனிதனை வணங்க வேண்டும் என்றொரு வாக்கியம் Gospel of Philip-ல் உள்ளது.  (122)

gnostic கிறித்துவர்கள் இதனாலேயே 19-ம் நூற்றாண்டின் மனோதத்துவ அறிஞர் Ludwig Feuerbach என்பவர் சொன்ன ‘theology is really anthropology' (இறையியல் என்பதே மனித இன இயலாகும்.) தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்கள். (123)

மனித இயலை பழமைக் கிறித்துவர்களும்,  gnostic கிறித்துவர்களும் இரு வேறு விதமாகக் காண்கிறார்கள். பழமைக் கிறித்துவர்கள்  யூதர்களைப் போலவே, கடவுளும் மனிதனும் மனிதன் செய்யும் பாவங்களால் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. ஆனால் gnostic கிறித்துவர்களின் கருத்து வேறுபட்டு நிற்கிறது. 'அறிவு’ அதுவும் ‘தன்னறிவு’ மட்டுமே ’தன்னையே தன்னுள் பார்க்கும்’ திறனைத் தருகிறது.

Valentinus என்பவரின் கருத்துப் படி எல்லாவற்றிற்கும் தாயான ‘அறிவு’ (wisdom)  தன் துயரங்களின் ஊடே நான்கு ‘பூதங்களை’க் கொண்டு வந்தது. அந்த நான்கு பூதங்கள்: மண், காற்று, நெருப்பு, நீர்.  (124)

சுய அறிவற்று இருப்பதே சுய அழிப்பின் முதல் படி. (Self-ignorance is also a form of self-destruction.) Dialogue of Savior என்ற நூலின்படி பிரபஞ்சத்தின் இந்த நான்கு பூதங்களை உணராதோர் அழிவை நோக்கிச் செல்கிறார்கள். (125)

Gospel of Thomas   சுய அறிவு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அந்த நூலில், ஏசு சொல்கிறார்: “தேடுபவன் தொடர்ந்து தான் தேடுவது கிடைக்கும் வரை தேடட்டும்.  தேடுவது கிடைத்தவுடன் அவன் குழம்பி நிற்பான்.  அந்தக் குழப்பத்தில் அவன் ஆச்சரியத்தின் விளிம்பிற்குப் போவான். அதன் பின் அவன் எல்லாவற்றையும் ஆளும் திறன் பெறுவான்.”

உள்ளேயிருப்பதாக உணரும் அந்த “ஒளி” எங்கிருந்து வருகிறது? ப்ராய்ட் சொன்னது போல் gnostic கிறித்துவம் ‘உடம்பின் விளக்காக இருப்பது மனமே ’ என்கிறது.

“மனமே நம் வழிநடத்தி;  காரணங்களே நமது ஆசிரியர்”.(127)

Kingdom of God - கடவுளின் ராஜ்ஜியம் என்பதை ஏசு Gospel of Thomas-ல் நன்றாகவே கிண்டலடிக்கிறார்:  “உங்களை வழி நடத்துபவர்கள் கடவுளின் ராஜ்ஜியம்  வானத்தில் உள்ளது என்றால், அங்கு நீங்கள் போகும் முன் பறவைகள் முதலில் போய்விடும்.  இல்லை, கடவுளின் ராஜ்ஜியம் கடலில் இருக்கிறது என்றால் முதலில் மீன்கள் அங்கே உங்களுக்கு முன் போய் விடும்.  ஆனால் கடவுளின் ராஜ்ஜியம் என்பது சுய தரிசனத்தில் தான் (It is a state of self-discovery.) இருக்கிறது”. (128)

gnostic கிறித்துவர்கள் ஏசுவின் மேற்கூறிய விளக்கங்களால் மனிதனின் முழு விடுவிப்பு என்பது வரலாற்றின் வடுக்களாக இருக்காது; ஆனால் அவை மனித மனங்களின் மாறுதல்களால் மட்டுமே இருக்கும் என்று கருதுகிறார்கள்.  (129)

Gospel of Thomas-ல் ஏசுவின் சீடர்கள் ஏசு எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்க, - அப்போதுதானே அவர்கள் அவரை அடைய முடியும் என்பதால் கேட்க - ஏசு அவர்களுக்கு நேரடி பதில் கொடுக்காது, உங்களிடமே ஒளிந்திருக்கும் பதிலைக் காணுங்கள் என்கிறார்.

அவரது மூன்று முக்கிய சீடர்களில் ஒருவரான மத்தேயு - "place of life" - வாழ்வின் இருப்பிடம் எது என்று கேட்க, ஏசு ‘உங்களில் யார் தன்னையே அறிந்திருக்கிறீர்களோ அவர் அதைக் கண்டு கொண்டு விட்டார்’ என்கிறார். (131)

ஒவ்வொரு gnostic கிறித்துவரும்  தன் மனதிற்கு தானே ஒரு சீடனாக இருப்பார் என்றும், தன் மனதே உண்மையின் பிறப்பிடம் என்றும் கருதுவார்கள் என்றும்  Testimony of Truth கூறுகிறது. ( இதைத்தான் “ஞானோதயம்” என்கிறோமோ?) (132)

சமயங்களின் மொழியில் உள்மனத்து மாற்றங்களே மொழியாகின்றன; இறையுணர்வை அடைந்தவர்கள் தாங்கள் காண்பது எதுவோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள்.

“நீ ஆன்மைவைப் பார்த்தாய்; நீயே ஆன்மாவாக மாறிவிட்டாய்.  நீ கிறிஸ்துவைப் பார்த்தாய்;  நீயே கிறிஸ்துவாக மாறி விட்டாய்.  நீ பரமபிதாவைப் பார்த்தாய்;  நீயே பரமபிதாவாக மாறி விட்டாய்.  நீ உன்னையே 
பார்த்தாய்; நீ பார்த்ததும் நீயே”


”Gnosis  என்ற இந்த நிலையை அடைந்தவன் இப்போது ஒரு கிறித்துவனல்ல; ஆனால் அவனே இப்போது ஒரு கிறிஸ்து”
(அகம் பிரம்மாஸ்மி என்பதுதான் இதுவோ?)

பல gnostic கிறித்துவர்கள் தன்னையே புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த ஆழ் மனத்து ஆர்வமே பல பேருண்மைகளைத் திறந்து காட்டும் ஒரு சாவியாக மாறி விடுகிறது. “நாம் யார்? எங்கிருந்து நாம் வந்தோம்? எங்கே இங்கிருந்து போகிறோம்?”  Book of Contender என்ற நூலின் படி “தன்னைத் தெரிந்து கொள்ளாதவன் எதையுமே தெரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான்.  ஆனால் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டவன் தன்னைப் பற்றியுமல்லாமல், எல்லாவற்றின் அடிப்படை உண்மைகளை உணர்ந்தவனாகிறான்”. 
(”நான்” என்ற கொள்கையை வைத்து இந்து மதத்தில் உள்ள தர்க்கங்கள் போலவே இவையுமுள்ளன.) (134)

ப்ளோட்டினஸ் - Plotinus - என்ற தத்துவாசிரியர் “கடவுளைப் பார் என்கிறார்கள்; ஆனால் கடவுளை எங்கே எப்படி பார்ப்பது என்று gnostic கிறித்துவர்கள் ஏதும் சொல்வதில்லை” என்கிறார். 

நாக் ஹமாதி ஆன்மீக ஒழுக்கம் பற்றி பலவற்றைக் கூறுகிறது. நாக் ஹமாதியின் மிக நீள நூலான Zostrianos ஞானம் பிறப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.  ‘ஒவ்வொருவனும் தனது உடலிச்சைகளை கடும் தவம் மூலம் ஒதுக்கி வைக்க வேண்டும்.  இரண்டாவதாக, தியானத்தின் மூலமாக தன் மனதை முழுமையாக ஆளுமைப் படுத்த வேண்டும். இந்த நிலைக்கு வரும்போது அவன் கடவுளை முழுமையாக உணர முடியும். 
(ஆசைகளை ஒழி என்ற புத்த தத்துவம் போலவே இக்கருத்துக்கள் உள்ளன.) (135)

gnostic  ஆசிரியர்கள் தங்களது ரகசியமான வழிகாட்டுதல்களை வெறும் வார்த்தையாடல்கள் மூலமாக செய்து வந்துள்ளனர். அவை அந்தந்த சீடர்களின் மனோநிலையை ஒத்ததாக இருக்கவே இம்முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 
(இது Zen குரு - சிஷ்ய உறவு போல் உள்ளதாகத் தெரிகிறது.)






*

 







































*










Thursday, September 20, 2012

591. ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல? - காணாமல் போன நண்பர்கள் ... 4




*




*





1957-ல் ....
கோடை விடுமுறையென்றால் உடனே பிறந்த மண்ணுக்கு ஓடியது ஒரு காலம். எங்கள் வீட்டைப் போலவே மதுரையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம்; பாளையங்கோட்டையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம். ஏறத்தாழ இந்த சமயத்தில் தான் ஊரில் அம்மன் கொடை நடக்கும். அதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஊரை நிறைத்திருப்போம். மதுரையில்பூட்டிக் கிடந்தவாழ்க்கை - வீடும் இத்தனூண்டு இருக்கும். மிஞ்சிப் போனால் வெளியே போய் தார் ரோட்டில் விளையாடலாம். ஆனால் இங்கே ஊருக்கு வந்தாலோ திறந்த வாழ்க்கை’! ஊரே நமது என்ற எண்ணம் வந்திருமே. எங்கே போனாலும் உறவினர். அதுவும் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு; கவனிப்பு; விசாரிப்பு. வீடும் பெரிது; ஊரும், காடும் விரிந்தது. எல்லாமே நிறைந்து கிடக்கும் திறந்த வாழ்வு’!

எல்லா உறவினர்களும் சந்திக்கும் நாட்கள். அது பெரியவர்களுக்கு எப்படியிருந்ததோ .. நாங்க .. சின்னஞ்சிறுசுகளுக்கு ஏக சந்தோஷம். விளையாட்டுகளுக்கும் குறைவில்லை. சிறு வயதில் எல்லோரும் சேர்ந்து ஒளிந்து விளையாடி .. பின் வயதாக வயதாக விளையாட்டுகளும் மாறின. பிள்ளையார் பந்து (எறிப் பந்து); குச்சி தூக்கி விளையாடுதல்; தேர்ந்தெடுத்த அகத்திக்குச்சியின் முனையை வெட்டிச் சரிசெய்து ஹாக்கி மட்டை தயார் செய்து, பனங்கொட்டையை பந்தாக்கி விளையாடியது; ஓடைகளில் ஓணானை விரட்டி அடித்து வேட்டையாடியது; கிட்டிப் புள்ளு; கருங்கல்லை தேய்த்து தேய்த்து செய்த குண்டு வைத்து கோலி விளையாட்டு;  புளிய மரங்களில் மரக்குரங்கு விளையாட்டு;  நொங்கில் வண்டி செய்து ஓட்டியது;  விட்டில் பிடித்து சுட்டு தின்பது;  ... அது மட்டுமா, மே மாதம் மாதா மாதம் - அதாவது மேரி மாதாவின் மாதம் - மாலைகளில் அத்தை நடத்திய ஜெபக்கூட்டம்; அது முடிந்ததும் கையில் அரிக்கேன் விளக்கோடு இருட்டுக்குள் வரிசையாக நடந்து கிறித்துவ உறவினர்கள் வீட்டுக்குப் போய், ஜெபம் செய்து விட்டு அவர்கள் தரும் கருப்பட்டிக் காப்பியில் முறுக்கை ஊறவைத்து தின்ற மகிழ்ச்சி ... அடேயப்பா .. Variety was the spice of life then! கொஞ்சம் வயசானதும் காட்டுக்குள் போய் திருட்டுப் பீடி குடித்துப் பழகியது ... இளமையின் ராஜ்ஜியமாக அந்த நாட்கள் கழிந்தன.

வழக்கமாக இப்படி விளையாட்டுகளில் மூழ்கிப் போனாலும் அவ்வப்போது சில இடிகளும் தலை மேல் வந்து இறங்கும். இன்னைக்கு எல்லோரும் வேட்டைக்குப் போவோம்னு நண்பர்களோடு முடிவெடுத்து மதியச் சாப்பாட்டிற்குப் பின் மெல்ல கிளம்பும் போது அப்பா ஆளை நிறுத்தி, ஊரிலிருந்து எடுத்து வந்திருக்கும் Wren & Martin ஆங்கில இலக்கண புத்தகத்தை எடுத்து அதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது என்னும் போது வரும் கோபம் ... ம்ம் .. அந்தக் கோபத்தையும் வெளியே காண்பிக்கவா முடியும். கடவுளேன்னு படிக்க உக்காரணும்!

ஆனால் ஒரு வருஷம் மிக மகிழ்ச்சியாகப் போனது. என் பாட்டையா அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். ஊருக்குப் பக்கத்தில் நல்லூர் என்ற ஊரில் ஒரு பெரிய பள்ளி; உயர் நிலைப்பள்ளி; ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஆரம்பித்த பள்ளி. அந்த ஊரிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரம் தான் எங்கள் ஊர் - காசியாபுரம். நல்லூர், கொஞ்சம் அரசியலால் பெயர் வாங்கிய ஆலடி, எங்கள் ஊர் காசியாபுரம் – மூன்றும் ஆயுத எழுத்து மாதிரி அடுத்தடுத்து இருக்கும். நல்லூரில் இருந்த அந்தப் பெரிய பள்ளி .. அடுத்து எங்கள் ஊரில் பாட்டையாவின் பள்ளி. பக்கத்தில் வேறு பள்ளி ஏதும் கிடையாது. அதனால் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் எங்கள் பள்ளிக்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அந்தப் பள்ளிக்கு three-wheeler-ல் போய் வண்டியை பள்ளியின் நடுவில் இருந்த வாதமடக்கி மரத்து நிழலில் park செய்து நான் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை அந்தப் பள்ளியில் படித்தேன்’. எனக்கு இருந்த நான்கு அத்தைகளும் அப்பள்ளியில் ஆசிரியர்களாக அவ்வப்போது இருந்தார்கள். ஏன் அந்த வயதிலேயே, மூன்று வயதிலேயே நான் அப்படி மாஞ்சு மாஞ்சு பள்ளிக்கூடம் போனேன்னு தெரியணும்னா அங்கே போய் படிச்சிக்கிங்க.  

அந்தப் பள்ளியில் ஒரு கோடை விடுமுறையில் பெரிதாக ஒரு விழா நடந்தது. இன்னும் சில நிகழ்வுகள் நினைவில் உள்ளன. ஒரு கண்காட்சி, சின்னச் சின்ன விளையாட்டுகள் என்று பகலெல்லாம் நடந்தன. மாலையில் தான் ஒரு பெரிய நிகழ்ச்சி - நாடகம் ஒன்று நடந்தது. நான் தான் ஹீரோ! அடிச்சி தூள் கிளப்பிட்டோம்ல! நாடகம் பார்த்த என் அப்பம்மா  என் உணர்ச்சி மிக்க நடிப்பில்அப்படியே அழுதுட்டாங்கல்லா ..! நாடகம் பற்றி இங்கே ஒண்ணும் சொல்லலை.  ஏன்னா அது பற்றி ஏற்கெனவே  சொல்லியிருக்கேன். கண்ணீரையெல்லாம் அடக்கி வச்சிக்கிட்டு நீங்களே அதை இங்கே வாசிச்சிக்கங்கோ ...சரியா?  

வாசிச்சிட்டீங்களா ..? ரொம்ப மனசு கனமா இருக்குமே!  சரி .. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கண்ணீரையெல்லாம் தொடச்சிக்கிட்டு நம்ம கதைக்கு வருவோம்.  அந்த நாடகத்தில கிளப் முதலாளியா வந்தானே வைத்தியலிங்கம், அவன் தான் இந்த நாடகத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பனானான். அது வரை எனக்கு அவனைத் தெரியாது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் உண்டு. ஆனால் கொஞ்சம் பெரிய பையனாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கள் பள்ளியில் படித்து முடித்து, பின் நல்லூர் உயர் நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்த வைத்தியலிங்கத்தை அத்தை பிடித்து இழுத்து வைத்திருந்தார்கள். மற்ற முக்கால்வாசி கதாபாத்திரங்களைத்தான் டவுன் பிள்ளைகளான நாங்கள் அமுக்கிக் கொண்டோமே..!

நாடகம் முடிந்த அடுத்த நாள் வைத்தியலிங்கத்திடம், ‘ஏண்டா! அப்படி கால் சட்டையையும் கழட்டச் சொன்ன?’ என்று கேட்டேன். இருந்தாலும் எனக்கு மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஏன்னா  அந்த சீன் அப்படி இருந்த்தால் தானே அப்பம்மா  அப்படி அழுதுட்டாங்க! அந்த நாளிலிருந்து அவன் எனக்கு நல்ல ஒரு நண்பனாகி விட்டான். திருநெல்வேலிப் பழக்கத்தில் ஏலே!என்று கூப்பிடும் பழக்கம் இருந்தாலும் நான் அந்த வயதில், ஏன் அதற்குப் பிறகும் அப்படி யாரையும் கூப்பிட்டதில்லை. வைத்தியலிங்கமும் நானும் அன்றிலிருந்து  ஒருவரை ஒருவர்ஏலேஎன்று கூப்பிட ஆரம்பித்தோம். நான் அப்படி ஏலேஎன்று அன்போடு கூப்பிட்டது அவன் ஒருத்தனைத்தான்.  (இப்போ பேரப் பசங்களை அப்பப்போ ‘ஏலேன்னு கூப்பிடுறது நல்லா இருக்கு!)  ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அவன் வீட்டுக்குத் தான் ஓடுவேன். ஊரில் இருக்கும் வரை அவன் கூடவே இருப்பேன். ஆனாலும் என்ன, இந்த மாதிரி இருந்தது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே.

ஒரு விடுமுறையில் ஊருக்குப்  போனதும் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டில் மட்டுமல்ல ஊரிலேயே இல்லை. அவனை சென்னைக்கு அவன் வீட்டார் அனுப்பி விட்டார்கள். படிக்கிறதாகச் சொன்னார்கள். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவன் படிப்பை விட்டு விட்டு காவல் துறையில் கான்ஸ்டேபிளாகச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிலும் யாரும் இல்லை. எல்லோரும் சென்னை வாசிகள் ஆகிவிட்டார்கள் போலும்.

நாடகத்தில் என் ட்ரவுசரை உருவிட்டான்’; ஆனால் இப்போ அவனும் அந்தக்கால போலீஸ்காரராக  அரை ட்ரவுசர் சீருடை உள்ள வேலைக்கே போய்ட்டான். என்னே ஒரு  dramatic irony!!! ஜீ பூம்பா போட்டு பழைய ஆட்களைக் கண்முன் கொண்டு வரும் மந்திரம் தெரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! வைத்தியை எதிரே கொண்டு வந்து, ‘ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியால?என்று உரத்துக் கேட்டு விடலாமே!



*

இப்பதிவிட்டு சில நாளில் எங்கள் ஊர் பதிவர் வேல்முருகன் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்களூரில் அவரது வீடு வைத்தியலிங்கத்தின் வீட்டிற்குப் பக்கத்து வீடு என்றார். கிராமத்தில் பக்கத்து வீடு என்றால் நிச்சயமாக உறவாகத்தானிருக்கும். அவர் மூலம் முயன்று கடைசியில் வைத்தியைக் கண்டு பிடித்து விட்டேன்.

வேல்முருகன் கொடுத்த ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு அங்கிருந்து வைத்தியின் எண்ணைக் கண்டுபிடித்தேன். அம்புட்டு மகிழ்ச்சி ... உடனே தொடர்பு கொண்டேன். வா .. போ .. என்று பேச ஆசை. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து வைத்தி ரொம்ப மரியாதையாகப் பேசியதால் எனக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று. வைத்தியின் தம்பி தான் காவல் துறைக்குப் போயிருந்திருக்கிறார். வைத்தி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று சென்னையில் அத்திப்பெட்டு என்னுமிடத்தில் சொந்த வீட்டில் மக்கள். பேரப் பிள்ளைகளோடு இருப்பதாகச் சொன்னார். அவரோடு பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது - போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்தது போல் இருந்தது. 



காணாமல் போன ஒரு 
நண்பனைக் கண்டு பிடிச்சிட்டோம்ல ...........


*







. *

Tuesday, September 04, 2012

590. ராஜா .. காணாமல் போகலை; இல்லாமல் போய்ட்டான்...3

*





*
”அதீதம்”  இணைய இதழின் ..

செப்டம்பர் முதலிதழில் பதியப்பட்ட கட்டுரை.

*












ராஜா  .. காணாமல் போகலை;  
இல்லாமல் போய்ட்டான்.



1954-ல் ……………..


நாங்கள் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளியிலேயே இங்கிலிபீசு மீடியம் என்ற பாடத்திட்டம் ஏதும் கிடையாது. ஆறாம் வகுப்பு - அப்போ அதற்குப் பெயர் I Form - வரும்போது தான் A .. B.. C.. D எல்லாம் சொல்லித் தருவார்கள். ஆனால் நான் படிச்சது ஐந்தாம் வகுப்பு A பிரிவு. நல்லா படிக்கிற பசங்களுக்கான வகுப்பு என்று பள்ளிக்கூடத்தில் பெயர். அதனால் தானோ என்னவோ நாங்கள் ஐந்தாம் வகுப்பின் கடைசியிலேயே எங்களுக்கு A .. B.. C.. D  சொல்லிக் கொடுத்தார்கள். father, mother, brother sister ... இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். நாங்களும் மற்ற க்ளாஸ் பசங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டோம். What is your name? What is your father's name? எம்புட்டு எம்புட்டு படிச்சோம்! மத்த பசங்களுக்கு நிச்சயம் காது வழி புகை வந்திருக்கணும்.

என் ஐந்தாம் க்ளாஸ் வாத்தியார் லூக்காஸ்.  நல்ல உயரம்; பயங்கர ஒல்லி; எப்பவும் சிரிச்ச முகம். தோள்பட்டை லேசா தூக்கி இருக்கும். அதனால் அவர் ரொம்ப வித்தியாசமா தோன்றுவார். என் மேலே அவருக்கு ரொம்ப பிரியம். பசங்களை அடிக்க வகுப்பு ஓரத்தில் ஒரு பிரம்பு வைத்திருப்பார். பசங்களை அடிக்க வேண்டுமானால் அந்த பிரம்பை என்னைத் தான்  எடுத்துத் தரச் சொல்வார். அதுவே ஒரு பெரிய கிரடிட். சில பசங்களுக்கு பொறாமையும் கூட. ஆனால் பிரம்பை எடுத்துக் கொடுக்கும் எனக்கே அந்த பிரம்பாலேயே ஒரு நாள் நல்லா அடிபட்டேன். அப்படி என்ன தப்பு செஞ்சி அடிவாங்கினேன்னு தெரிஞ்சுக்கணுமா ....  அந்தக் காலத்தில டிக்டேஷன் சொல்லுவாங்க .. அத நாங்க எங்க ஸ்லேட்ல எழுதணும். அதுக்குப் பிறகு வாத்தியார் தப்பு திருத்துவார். அப்போ ஸ்லேட்ல ஒரு பக்கத்துக்கு ரெண்டு தப்பு அனுமதி. அதுக்கு மேல இருந்தா பிரம்படி தப்பு எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி அடிக்கணக்கு உண்டு. நான்  இந்த தமிழ் டிக்டேஷனில் அடி வாங்கியது இல்லை. அதனால தான் பிரமபை எடுத்துக் கொடுக்கிற வேலையைக் கூட எங்க வாத்தியார் எனக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நானும் ஒரு நாள் ஓங்கி சில அடிகள் வாங்கினேன். அப்படி ஒரு பெரிய தப்பு ப்ண்ணிட்டேன். என்னது ... என்ன தப்புன்னு தெரியணுமா? அப்போ கொஞ்சம் அங்கே போய்ட்டு வாங்க. விவரம் அங்கதான் இருக்கு! 

சரி .. அடி வாங்கின அந்த ஒரு நாளை விட்டுருவோம். அதைத் தவிர நான் தமிழ் டிக்டேஷனில் தப்பு வாங்கினதில்லையல்லவா ... அதனால் வாத்தியார் பிரம்பை எடுத்துத் தரும் prestigious வேலையை எனக்குக் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பு எடுக்கும் போது சில பகுதிகளை வாசிக்க என்னைக் கூப்பிடுவார். நான் போய் அவர் மேசைக்குப் பக்கத்தில் போய் அந்தப் பகுதிகளை வாசிக்கணும். பசங்க மனசுல இதெல்லாம் ஒரு உறுத்தலா இருந்துச்சோ என்னமோ... ஆனால் ஒரு நாள் ஒரு மாணவன் ஆசிரியருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான்.

அவன் பெயர் ராஜா. பெரிய பையனாக இருப்பான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு குறை உண்டு. அவனது கண் இமைகள் நம்மைப் போல் திறந்து குறுகாது. அவை எப்போதுமே முக்கால் வாசி மூடியே இருக்கும். சிறு பாகம் வழியாகத்தான் அவனால் பார்க்க முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்குப் பார்வையில் கோளாறு ஏதுமில்லை. ஆனாலும் இந்தக் குறையினால் அவனுக்குப் பட்டப் பெயரெல்லாம் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரைச் சொன்னதும் சண்டைக்குப் போவான். பெரிய பையன் என்பதால் எல்லோருக்குமே அவனிடம் ஒரு பயம் உண்டு.  உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பின் ஒவ்வொரு வருஷமும் இந்தக் கோடை விடுமுறையில் கண்ணுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன் என்று வழக்கமாக பல ஆண்டுகள் சொல்லி வந்தான்.ஆனால் கடைசி வரை அப்படியேதும் செய்யவில்லை.

அவன் ஒரு நாள் லூக்காஸ் வாத்தியாரிடம், ‘ஏன் சார் .. எப்பவும் ஜார்ஜை மட்டும் வாசிக்கக் கூப்பிடுகிறீர்கள்?’ என்றான். துணிச்சல்காரப் பயல் தான்.  

லூக்காஸ்,  ‘அவன் ஒழுங்காக வாசிப்பான்; அதனால் தான்என்றார்.  

நானும் நல்லா வாசிப்பேன். வேணும்னா அவனோடு போட்டி வச்சிக்கிறேன்’. 

ஆகா ... வச்சிக்கலாமேஎன்றார் லூக்காஸ்.

அவரே போட்டியும் விதிகளையும் சொன்னார். அவரது மேசைக்குப் பக்கத்தில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டும். நடுவில் அவர் இருந்து ஒரே சமயத்தில் முதுகில் தட்டுவார். ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அவரது அடுத்த தட்டில் வாசிப்பவன் நிறுத்த, அடுத்தவன் வாசிக்க ஆரம்பிக்கணும். நடுவில் திக்கல், தவறுகள் இருந்தால் மதிப்பெண் குறைவு. இந்தத் தப்புகளை முன் பெஞ்சில் சில மாணவர்களை வைத்துக் குறித்துக் கொள்ளலாம் என்றார். யாருக்கு குறைந்த தப்புகள் இருக்கின்றனவோ அவன் தான் வின்னர் என்றார்.

எனக்குக் கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் சரியென்று சொல்லி விட்டேன். ராஜா அதோடு விடுவானா?  போட்டிக்கு நாங்கள் இருவரும்  பந்தயம் கட்டணும் என்றான். அவனே பந்தயப் பணத்தையும் சொன்னான். ஆளுக்கு ஓரணா பந்தயம் என்றான். அப்போ ஒரு அணா அப்டின்னா அது பெரிய காசு. நமக்கேது அம்புட்டு பாக்கெட் மணி. என்னால முடியாதுன்னேன். அப்போ இரண்டு நண்பர்கள். எனக்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். அனேகமாக அவர்கள் பெயர் வெற்றிவேல்,. கதிரேசன் என்று நினைக்கிறேன். வெற்றிவேல் அழகாக, கருப்பாக என் உயரத்தில் இருப்பான். கதிரேசன் ஒல்லியான உயரமான பையன். பாவம் அவர்கள்! வாழ்க்கையில் அப்பவே அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்கள். அவ்ர்கள் இருவரும் எனக்காக ஓரணா ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.

சார் முன் பெஞ்சில் நாலைந்து மாணவர்களை உட்காரவைத்து அவர்களிடம் எப்படி தப்புகளைக் குறிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து தயாராக்கினார். வெற்றிவேல்,. கதிரேசன் இருவரும் ஜட்ஜாக இருக்க்க் கூடாது என்றும் சொல்லி விட்டார்.  வகுப்பே களை கட்டி இருந்தது. போட்டி ஆரம்பித்தது. பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. இருவரும் வாசித்தோம். தவறுகள் குறிக்கப்பட்டன. போட்டி முடிவடைந்தது. ஜட்ஜூகள் ஆசிரியரின் மேசைக்கு பக்கத்தில் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் இடத்திற்கு வந்து விட்டோம். ஜட்ஜுகள் கணக்குப்படி எங்கள் தப்புகள், தடுமாற்றங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டன.
பயத்தோடு இருந்தேன். ஆனாலும் வெற்றி எனக்குத்தான்என்று  ஆசிரியர் சொன்னது தெரிந்தது. வகுப்பில் எனக்காக ஒரு கை தட்டல் இருந்தது. அந்தக் காலத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணக் கூட ஆள் இருந்திருக்கு! ராஜா ரொம்ப ஜென்டிலாக முன் வந்தான். எனக்குத் தெரியாத  மரியாதையெல்லாம் அவனுக்குத் தெரிந்திருந்தது. கை கொடுத்தான். பந்தயக் காசு ஓரணாவை வாத்தியாரிடம் இருவருமே கொடுத்திருந்தோம். சார் அதில் ஓரணாவை என்னிடம் ராஜாவைக் கொடுக்கச் சொன்னார். இன்னொரு ஓரணாவை எனது பைனான்சியர்களிடம்’  திருப்பிக் கொடுத்தார். அதிலும் ஒரு சிக்கல் வந்தது. பைனான்சியர்கள்என் பந்தயக் காசில் பங்கு கேட்டார்கள். சார் தீர்ப்பு சொல்லிட்டார்: அந்தக் காசு அவனுக்கு மட்டும் தான்’. ராஜாவிடம் சார் கேட்டார்: என்னடா ... இனிமே அவனையே வாசிக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். ராஜா உற்சாகமாக சரி என்றான்.

படிப்பில் நான் ஜெயிச்ச ஒரே நிகழ்வு இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.

அதன் பின் ராஜா ஒரே பள்ளியில் இருந்தாலும் வேற வேற செக்‌ஷன். நல்ல பெரிய உருவமாக வளர்ந்தான். கொஞ்சம் முரட்டுப் பையலாகவே தெரிந்தான். அவன் கண்ணை வைத்துப் பலரும் அவனைக் கேலி செய்வதுண்டு. அவர்களிடம் முரட்டுத்தனமாக இருந்தான்.ஆனால் உண்மையிலேயே அவன் பயங்கர சாப்ட் என்பது எனக்கு 29 வயதிற்குப் பிறகுதான் தெரிந்தது.  அதாவது என் மாமனார் வீட்டிற்கு பக்கத்தில் தான் அவன் இருந்தான். என் மாமனாருக்கு அவன் ஒரு நண்பன் மாதிரி. முரட்டுத்தனமா  ஒரு மீசை வைத்திருப்பான்.பெரிய மீசை. முனைகள் பிரஷ் மாதிரி பெருசா கன்னத்தை மூடியிருக்கும். என் முதல் மகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் கத்தினாள். சில நாட்களில் இருவரும் பயங்கர நண்பர்களாகி விட்டார்கள், மீசையை வைத்தே அவளைச் சிரிப்பு மூட்டுவான். அவளுக்கு அது ஒரு பெரிய விளையாட்டாகிப் போனது.  

அவன் கண்கள் சிறு வயதிலேயே தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டன. பள்ளிப் படிப்பு முடியும் வரை அதிகமாக ஏதும் இல்லை. அதன் பின் பார்வை குறைய ஆரம்பித்து விட்டது. எதையும் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும். கண்ணாடி போட்டுக்கோ என்று எல்லோரும் வற்புறுத்துவோம். ஆனால் கடைசி வரை போட்டுக் கொள்ளவேயில்லை. என் திருமணத்திற்கு முன் நாங்கள் அவ்வப்போது பார்த்துக் கொண்டது உண்டு. ஆனால் அதிகமாக நட்பு பாராட்டியதில்லை. அதன் பின் அடிக்கடி சந்திப்பதுண்டு. எங்கள் போட்டியை எனக்கு முழுவதுமாக நினைவு படுத்தியதே அவன்தான். நாங்கள் அன்று போட்டியில் வாங்கிய மதிப்பெண்களில் என்னைவிட அவன் இரு மடங்கு தப்புகள் செய்ததாகச் சொன்னான். உண்மை என்னவோ .. சும்மா என்னைத் தூக்கி வைப்பதற்காகக் கூட சொல்லியிருப்பான். பயல் அப்படிப்பட்டவன். என் மாமனார் வீட்டில் வைத்து இதைச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்துவது அவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. கொஞ்ச நாள் என்னை கேரம் விளையாட ஒரு கிளப்பிற்கு அழைத்துச் செல்வான். கண் பார்வையில் கோளாறு இருந்தும் அவன் மிக நன்றாக விளையாடுவான். செஞ்சுரி போடுறதெல்லாம் அவனுக்கு எளிது. 

அவன் திருமணமாகாத அக்காவிற்குத் துணையாக இருக்க வேண்டுமென்று திருமணமே வேண்டாமென்றிருந்து விட்டான். எல்லோருக்கும் உதவுவதில் மன்னன். யாருக்காகவும் எங்கே வேண்டுமானாலும் அலைந்து கஷ்டப்பட் தயாராக இருப்பான். என் மாமனாரின் கடைசி காலத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தான். மருத்துவ மனையில் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு இரவில் அவரோடு இருந்து நன்கு கவனித்துக் கொண்டான். அவருக்கும் அவன் இருப்பதே பிடித்தது. மாமனார் காலத்திற்குப் பிறகு எப்போதாவது அவனிடமிருந்து தொலை பேசி வரும். பேசிக் கொள்வோம்.

அறுபதை நாங்கள் எட்டிப் பிடித்த பின் எப்போதாவது பார்த்துக் கொள்வோம். பெரிய உருவம். திடகாத்திரமான உடம்பு. பெரிய மீசை. ஆனால் ஐம்பதுகளிலேயே சர்க்கரை வியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் அவனது பழைய தோரணை ஏதுமில்லாமல் போய் விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் திடீரென்று போய்ச்சேர்ந்திட்டான் என்ற செய்தி சில நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது..
*










*