Tuesday, December 30, 2014

813. டி, எம், கிருஷ்ணா - அதிசய மனிதர் !








*



எற்கெனவே கர்னாடக சங்கீதப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பற்றி வாசித்திருக்கிறேன். வித்தியாசமான ஆச்சரியமான மனிதராகத் தோன்றினார். இப்போது ஆனந்த விகடன் 31.12.14 இதழில் கி. கார்த்திகேயன் என்பவரால் “அனைவரும் வரட்டும் .. அரங்கங்கள் அதிரட்டும்!” என்ற தலைப்பில் வந்த கட்டுரை அவரை மேலும் உயர்ந்து பார்க்க வைத்தது.

அக்கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

 “கர்னாடக சங்கீதத்தை ஏ.சி. அரங்குகளில் மட்டும் தான் பாடணும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன? இல்லை ... குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் பாடணும்னு கட்டுப்பாடு இருக்கா?”


 “டிசம்பர் சீசனில் சபாக்களில் கச்சேரி நடக்கும் போது, குப்பத்திலும் அது போலவே நடக்கும்.”

 “எலியட்ஸ் பீச் இருக்கிற ஊரூர் ஆல்காட் குப்பத்தைத் தேர்ந்தெடுத்து அந்த மக்களிடம் விஷயத்தைச் சொன்னோம். .. டிசம்பர் 29, 30 தேதிகள்ல ஊரூர் ஆல்காட் மார்கழி விழா களை கட்டும்.”

 “இங்கே கலைகளுக்குள்ளயே ஏற்றத் தாழ்வு இருக்கு. பரதம் உசத்தி; பறையாட்டம் தாழ்ந்தது. கர்னாடக சங்கீதப் பாடகர்கள் உசத்தி; தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு மதிப்பே இல்லை. இப்படி கலைக்கும் கலைஞர்களுக்கும் இடையிடையே ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.என்னைப் பொறுத்தவரை ‘கலை’ ஒண்ணுதான்.ஒவ்வொரு கலைஞனின் படைப்பும், ரசிகனின் ஆன்மாவைத் தொடணும்; ரசனையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அது எங்கே .. எப்படி நடந்தாலும் எனக்கு ஓ.கே. இன்னைக்கு குப்பத்திலே பரதநாட்டியம் நடக்கிற மாதிரி, அடுத்த சில வருஷங்களில் மயிலாப்பூர் சபாக்களில் கட்டைகூத்து நடக்கணும்.”

 “எந்த இன மக்கள் வந்தாலும் கர்னாடக சங்கீதம் கத்துக்க இங்கே வாய்ப்பு இருக்கு. அந்தத் தன்னார்வத்தை எப்படி தூண்டுறது? அந்தத் தூண்டில் முயற்சிதான் இந்தக் குப்பத் திருவிழா. இப்படி எல்லாம் ஒரு கலைவடிவம் இருக்குன்னு தெரிஞ்சாதானே, எல்லா பசங்களும் அதைக் கத்துக்க ஆசைப்படுவாங்க. வரட்டும். எல்லாரும் வரட்டும். அரங்கங்கள் அதிரட்டும்.”


“பிராமணராப் பிறந்ததாலேயே கஷ்டப்படுறோம்னு யாராவது சொன்னா, அது அவங்க அறியாமைனுதான் சொல்லத் தோணுது. இந்த இட ஒதுக்கீடுதான் எனக்கு எல்லா வாய்ப்புகளையும் அடைச்சிருச்சு. ... அட, 2000 வருஷங்களா பல சாதி மக்களுக்கு மறுத்து அடக்கி வச்சிட்டு, இப்போ 40 வருஷங்களாத் தானே இட ஒதுக்கீடு கொடுக்கிறீங்க. அதுக்குள்ள அதைக் குத்தம் சொன்னா எப்படி? ... என்னைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு அவசியம். ஆனா,, எப்பவோ வகுத்த கொள்கைகளோட இருக்கிற இட ஒதுக்கீட்டை இப்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யணும்னு தோணுது.”

 “சில சாதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பத்தி பிராமணர்கள் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது.”


இவரை வழிகாட்டியாக நினைத்து, இன்றிருக்கும் நிலையில் சாதிப் படிக்கட்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சற்றே மேலுள்ள சாதியினரும் இது போன்ற புரிதலோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

 உயர்ந்த நோக்கோடு குப்பத்திற்கு இசை, நடனத்தை அழைத்துச் செல்கிறார். எல்லாம் வெற்றிகரமாக நடக்க என் வாழ்த்து.

விழா ஒரு முறை நடப்பதோடு நின்று விடாமல் தொடர்ந்து நடப்பது, நடத்தி வைப்பது அந்தக் குப்பத்து மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே முடியும். அவர்கள் இந்த நல்ல விதைக்கு நீரூற்றி, வேலியிட்டுக் காத்து நடக்க வழிகாட்டலும் உந்துதலும் மிகவும் தேவை.



 *



Monday, December 29, 2014

812. இளைய ராஜா பற்றி ஒரு புகழ் பெற்ற பாடகர் கூறியது .........






*



இளைய ராஜாவின் இசை மீது எனக்குப் பெரும் மரியாதை. அவரை நான் எங்கோ வைத்திருக்கிறேன். இருப்பினும் இன்று அவரது பாடல்கள் பழைய பாடல்கள் போலில்லையே என்ற ஆதங்கமும் உண்டு. இருப்பினும் அவருக்குப் பின் அவரது அரியணையில் இன்னும் யாரையும் இதுவரை ஏற்றவில்லை.

ஆனால் சில மேதாவிகள் //இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை.// என்று சொன்னதும் என்னடா ... நமக்குத்தான் இசையறிவு இல்லையே ... நாம்தான் அறிவில்லாமல் இப்படி தப்பாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ என்று கூட நினைத்தேன்.

அந்த சோகத்தில் இருக்கும் போது 'இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள்’ என்றும் அவர் கூறியதும் ... சரி .. நாம் தான் தற்குறியாக ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நினைத்து வருந்திக் கொண்டேன்.



தற்செயலாக நான் நல்லெண்ணம் கொண்டிருந்த ஒரு கர்நாடகப் பாடகர் - தொழில் முறையிலேயே பெரிய பாடகர்; வெறும் எழுத்துகளில் மட்டும் தன் பாண்டியத்தைக் காண்பிக்காமல் குரல் வளத்தாலேயே பெரும் பாடகர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர் - இ.ரா. வைப் பற்றிக் கூறியதைப் படித்ததும் என் ‘ஜென்மம் சாபல்யமானது’!!

 டி. என். கிருஷ்ணா இளையராஜா பற்றி ஆ.வி.யில் கூறியது:

 “தமிழ் சினிமா இசையை ரசிப்பீர்களா?”


 ”இளையராஜா காலம் வரைக்கும் ரசிச்சேன். இப்போதைய இசையமைப்பாளர்கள் பத்தி சொல்ல ஏதும் இல்லை. கொஞ்சம் கவலையாகக் கூட இருக்கு.

’டெக்னாலஜி .. டெக்னாலஜி’னு சொல்றாங்க. கலைஞனின் சிந்தனைக்கு உருவம் கொடுக்கத்தான் டெக்னாலஜி பயன்படணும். ஆனா, இப்போ அந்தச் சிந்தனையையே டெக்னாலஜி தான் பண்ணுது. கலைஞர்கள் வெறும் ‘ஏற்பாட்டாளர்’களாக மாறிட்டாங்க. சின்ன பிட், குட்டி நோட் கூட பிசகாம பக்காவா பாட்டு பாடுறாங்க. ஆனா, அதுல உயிர் இல்லையே! மெஷின்ல பட்டன் தட்டி உருவாக்கும் பாட்டு அப்படித்தான் இருக்கும். சின்னச் சின்னக் குறைகளோடு கூட பாட்டு பண்ணுங்க. ஆனா அதுல உங்க கிரியேட்டிவிட்டினு ஏதோ ஒரு டச் இருக்கணும். அது இல்லாம வர்ற இசை ... நிக்காது.”

 அப்பாடா ....!


 *

Sunday, December 28, 2014

811. அசோகன் - ஓர் அறிமுகம்







*




கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 


தி இந்து - டிசம்பர் 24, 2014


மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம் 



கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்கரவர்த்தி கி.மு.270 முதல் கி.மு.233 வரை, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி.   இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். 



பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு, 

தமிழில்: தருமி

பக்கங்கள்: 496 விலை: 400


 மேற்கண்ட நூலை வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002

தொலைபேசி: 04259-226012; 99850 05084



*

Sunday, December 21, 2014

810. INDIAN SUPER LEAGUE





*  

ISL போட்டிகள் முடிவடைந்தன.

அரையிறுதி ஆட்டங்களில் பாவம் ... நம்ம சென்னையின் அணி. லீக் ஆட்டத்தில் இரு முறை கேரளா அணியை வென்றிருந்தார்கள். மறுபடி அரையிறுதியில் இரு ஆட்டங்கள். நன்றாக ஆடியும் முதல் ஆட்டத்தில் மூன்று கோல்கள் வாங்கினார்கள். இரண்டாம் சுற்றில் மூன்றுக்கு மூன்று என்று கொண்டு வந்தார்கள், ஆனால் கடைசியில் கேரளா அணி 3:1 என்று கடைசி கோலடித்து இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. விரும்பிய சென்னை அணி தோற்றது.

அடுத்த அரையிறுதியில் கொல்கத்தா அணியும் கோவா அணியும் மோதின. இரண்டு சுற்றிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது சுற்றில் கோவா அணியின் கையே --- இல்லை..இல்லை... காலே மேலோங்கியிருந்தது. ஆனாலும் ஒரு கோல் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.

இறுதிப் போட்டி கொல்கத்தா அணிக்கும் கேரளா அணிக்கும்.  முதலிலிருந்தே கேரளா அணியின் பக்கமே பந்து இருந்தது. அவ்வப்போது இரு கோல்கள் பக்கம் பந்து அயாயகரமாகச் சென்று ஆர்வத்தைத் தூண்டியது. வழக்கமாக பந்து ஒரு அணியிடமே அதிகமாக இருக்கும் போது சடாரென எதிர்த்த அணி பக்கம் கோல் விழுவதுண்டு. அதே போல் இந்த முறையும் நடக்கும் என்று என்  கோழி சொல்லியது.  புள்ளி விவரம்கேரளா: கொல்கத்தா  70:30 என்ற கணக்கு காட்டியது. இருந்தும் பந்து கோவா அணிக்கும் அவ்வப்போது பயம் காட்டியது. கோல்கள் விழாமல் கடைசி வரை போராட்டம் நீடித்தது. நீட்டிப்பு காலம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதில் முதல் நிமிடத்தில் ரபீக் தலையால் மோதி கோவாவிற்கு கோல் போட்டார்; வெற்றி கல்கத்தாவிற்கு. இப்போட்டியிலும் விரும்பிய கேரளா அணி தோற்றது.

அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விரும்பிய அணிகள் தோற்றன.ஆனாலும் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்த பின், கால்பந்தில் ஆர்வம் மிக்க மாநிலங்களே வெற்றி பெற்றுள்ளன. இரு பெரிய அணிகள் வைத்து முழு ஆர்வம் காட்டும் கொல்கத்தா அணிக்கு முதலிடம். அதன் பின் கேரளா. அடுத்து கோவா. ஒரு சந்தோஷம் நாலாவது இடம் நமது மாநிலத்திற்கு! கணக்கு சரிதான்!

இதில் ஆச்சரியப்பட வேண்டிய பல விஷயங்கள் நடந்துள்ளன.

*  விஜய் டிவி நேரடி ஒலிபரப்பை எடுத்துக் கொண்டது. ஆச்சரியாக இருந்தது.. இருந்திருந்து கால்பந்திற்கு நேரடி ஒலிபரப்பா ...? அதுவும் தமிழ் நாட்டில்...! அடடே... என்ன ஆச்சரியம். இதற்காகவே விஜய் டிவிக்கு நன்றி.

*  என்னங்க இது ... அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மக்களிடம் கால்பந்திற்கு இவ்வளவு ஆர்வமா! ஆச்சரியம் ... மகிழ்ச்சி. It is not the end; it is not even the beginning of the end; but just end of the beginning ....என்ற சர்ச்சிலின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.கால்பந்து விளையாட்டுக்கும் காலம் வரும் போலும்.

*  கால்பந்து விளையாட்டை இவ்வளவு ஆர்வத்துடன் மேலெடுத்து வந்த ரிலையன்ஸ், ஹீரோ போன்ற ஆர்வலர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தின் நன்றி இருக்கும் என்று நம்புகிறேன்.

*  ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி இவ்வளவு கால்பந்து பரவுவதில் ஆர்வம். ஆயினும் அவர்கள் நம் நன்றிக்குரியவர்களே.

*  இந்தி நடிகர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். நம்மூர் ஆட்கள் யாரும் இதில் கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை; கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர்களுக்கும் நன்றி.

*  கால்பந்து வீர்ர்களுக்கான பரிசுகள் ஆயிரங்களில்  இருந்தன. ஒரு வேளை கிரிக்கெட் போட்டி வீரர்களை இந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். அவர்களுக்கு லட்சங்களில் பரிசு வரலாம். பாவம் .. கால்பந்து வீரர்களுக்கு ஆயிரத்தில் மட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

*  போட்டியில் தரம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கின்றேன். ஆனாலும் ஒரே வருத்தம். நம்மூர் ஆட்கள் மிகவும் கம்மியான எண்ணிக்கையில் இருந்தார்கள். இந்த போட்டி இனி ஒவ்வொரு வருடமும் நடக்கலாம்; நடக்க வேண்டும். அப்போதெல்லாம், நம்மூர் ஆட்களுக்குக் கட்டாயம் இந்த அணிகளில் கட்டாயம் இடம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50:50 என்றாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அணியில் கணக்கிற்காக மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ISLக்கு முன்பாகவே பல போட்டிகள் நடந்து அவைகளில் நம்மூர் வீரர்கள் பங்கெடுத்து, அதன் மூலம் இப்போட்டிகளில் இடம் பிடிக்க வேண்டும். .......... எல்லாம் ஆசை தான். எவ்வளவு தூரம் நடக்குமோ.... காத்திருந்து பார்க்க வேண்டும்.



... *

Friday, December 19, 2014

809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...





*



மெட்ராஸ் .... 

படம் பிடித்தது. வழக்கம் போல் காதல் நடுப்புள்ளியாக இல்லாததே படம் பிடிப்பதற்கான முதல் காரணம். இயல்பு வாழ்க்கை, நிஜத்தை ஒட்டிய மனிதர்கள், அவர்களது அச்சு அசலான பின்புலம், நம்மூர் அரசியல், அரசியலின் நுண்ணரசியல் .... எல்லாம் இயற்கையாக நன்றாக இருந்தன.

கதாநாயகன், கதாநாயகி நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களை விடவும் இரண்டாம் கதாநாயகனும், கதாநாயகியும் மேலும் அழகாகத் தெரிந்தார்கள்; மிக நன்றாக நடித்திருந்தார்கள். படம் மிகவும் பிடித்திருந்தது ....

ஆனால் அந்தக் கடைசி சீனில் இருந்த எழுத்துப் பிழை படத்தின் சுவையை அப்படியே நம் மனதிலிருந்து பறித்து எறிந்தது போலிருந்தது. கதாநாயகன் உண்மையில் அந்தச் சுவர் தான். இறுதியில் அதிலிருந்த அரசியல்வாதியின் படம் அழிக்கப்பட்டு, கல்வி பற்றிய அறிவிப்பு ஒன்றோடு படம் முடிகிறது. நல்ல இனிப்பான ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கசப்பான,உறைப்பான ஒன்றைக் கடித்து வைத்தது போல் இருந்தது. ரசித்த அனைத்தும் அந்த கசப்போடு / உறைப்போடு முடிந்தது போலாயிற்று. அதுவும் கல்வி பற்றி எழுதும் போது கூட இப்படி ஒரு பிழையோடு எழுதலாமா என்று சீத்தலைச் சாத்தனாரின் கோபம் தான் வந்தது!

கல்வி கற்பது
உலகை அறிவதற்க்காக அல்ல ;
உலகை மாற்றுவதற்க்கு.

படத்தோடு தொடர்புடையவர்கள் யார் கண்களிலும் இந்த எழுத்துப் பிழை கண்ணிலேயே படவில்லையா....? அட போங்கப்பா...!


 ************* *


த்ரிஷ்யம் ....

இந்திய சினிமாவின் ஒரு பெரிய வியாதி படம் கட்டாயம் இரண்டு,  இரண்டரை
மணியளவு ஓடியே ஆக வேண்டும் என்பதே. த்ரிஷ்யம் இடைவேளைக்குப் பிறகுதான் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் நடப்பவைகளை மிகச் சில காட்சிகளில் காட்டியிருந்திருக்க முடியும். ஆனால் படம் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும்.  ஆனால் படம் ஒரு முழுமையான, இறுக்கமான படமாக இருந்திருக்கும். நாம் செஞ்ச பாவம் ... இரண்டு மணி நேரம் படம் நாம் பார்த்தாக வேண்டுமே....! மலையாளக்காரங்களாவது ஒன்றரை மணி நேர படம் எடுக்க ஆரம்பிக்க மாட்டீங்களா?

செய்த தவறை மறைக்க கதாநாயகன் எடுக்கும் முதல் சில முயற்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் செய்திருக்கலாமென்று தோன்றியது. காரை மறைக்க ஏதோ தெரியாத ஒரு பள்ளத்தில், பட்டப் பகலில் முயற்சி செய்ய வேண்டுமா? தண்ணீரின் ஆழம் போதுமா என்றெல்லாம் தெரியாமல் பலரும் நடமாடும் இடத்தில் காரை மூழ்கடிக்கிறார்.

ஆனால் அதன் பின் சில நிகழ்வுகள். அதை மற்றவர் மனதில் நிறுத்த கதாநாயகனின் தந்திரங்கள், ... காவல் துறையின் முயற்சிகள் ... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

படப்பிடிப்பு நன்றாக இருந்தது. இரவில் தன் வீட்டுத் திண்ணையிலிருந்து மோகன்லால் அமர்ந்திருக்கும் காட்சியில் காட்டிய இரவு நேர இரவுக் காட்சி அவ்வளவு அழகு. இன்னும் அந்தக் காட்சி மனதில் உறைந்து நின்று விட்டது.எப்போதுமே கேரளத்தின் மீது எனக்கு ஒரு ‘கண்’ உண்டு. மோகன்லாலின் வீட்டைக் காண்பிப்பார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே .. அதே போல் ‘அந்த ஒரு வீடு கிடைக்க என் வலது கையையும் தர மறுக்க மாட்டேன்’!  கனவு வீடு.


இறுதிக் காட்சி ஒரு கவிதையை வாசித்தது போல் எனக்கிருந்தது.  மகனை இழந்த பெற்றோர் ... அந்த மகனைக் கொன்றவர் ...  மூவரின் சங்கமம். உண்மை மூவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படையாகப் பேசாமல் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் ... வசனம் மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது. (கணினியில் பார்க்கும் போது ஒரு வசதி. நமக்குப் பிடித்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வசதியாக இருக்கிறது!) அந்தக் கடைசி சீனை மூன்று தடவை வசனத்திற்காகத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.

மோகன்லால் அளவு தமிழில் நமது கமல் நடிக்க மாட்டார் என்று நண்பர் சொன்னார். தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



**********************


Thursday, December 18, 2014

808. ”805 உளுத்துப் போன கட்டுரைகள்”






*
எனது உளுத்துப் போன கட்டுரைகள் பற்றி ....


*

ஒன்பதரை ஆண்டுகள் ... 800 பதிவுகள் ... வேலையிலிருந்து ஓய்வு பெற்றவனுக்கு மறு வாழ்வு போல் இணையம் உதவியது. சிறிது குறைந்திருந்த வாசிப்பு ஒரு கட்டாயமானது. வாசித்ததை ’நாலு பேருக்குச் சொல்லும் வழியும் கிடைத்தது.  எழுத ஆரம்பித்த பின் எழுதியாக வேண்டிய கட்டாயங்களும் உருவாகி, தொடர்ந்து எழுதி ... திருப்திகரமாகவே சென்று கொண்டிருந்தேன்.

எழுதியவைகளில் சிலவற்றிற்குக் கிடைத்த ஆதரவுகளும், எழுதியவைகளின் பேரில் வந்த விமர்சனங்களும், விவாதங்களும் செல்லும் வழி நன்றாகவே இருக்கிறது என்று எண்ண வைத்தது.

2005ல் என் பதிவில் -  - ’மனிதன்’ என்ற புனைப்பெயரில் வந்த ஒருவன் பின்னூட்டப் பகுதியில் மடத்தனமாக சில சொல்லிச் சென்றான். அது ஒன்று மட்டுமே இத்தனை ஆண்டுகளில் ஒரு பதிவனாக நான் அனுபவித்த ஒரே ஒரு கஷ்டமான விஷயம்; மனதைப் புண்படுத்திய ஒரே விஷயம்.

ஆனால் ஒன்பதைரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில பின்னூட்டங்கள் மனதை மிகவும் பாதித்தன. --- இப்படி எனது 804வது பதிவில் எழுத வேண்டியதாகி விட்டது.

என் பதிவுகளை விட அந்தப் பதிவுகளை ஒட்டியெழுந்த பின்னூட்டங்கள் பொருள் பொதிந்தவை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. ஆகவே பின்னூட்டங்களுக்கு ’மரியாதை’  கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்!

அப்பதிவில் நான் எப்படி எம்.எஸ்.வீ. பாடல்களைக் கேட்டேன். பின்பு இளையராஜா மிகவும் பிடித்தவரானார். அதன் பின் அந்த சிம்மாசனத்தில் யாரையும் வைக்கவில்லை என்று எழுதியிருந்தேன். சிவாஜிக்குத் தந்த சிம்மாசனமும், கண்ணதாசனுக்குத் தந்த சிம்மாசனமும் இன்னும் காலியாக இருப்பது போல் இதுவும். சார்லஸ் பதிவில் பதிவர்களிடையே மிகக் கடுமையான வாக்குவாதம் இருந்ததால் விவாதங்களை மென்மையாக்கவே நான் என் பதிவை இட்டேன். அதுவும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனை //சொம்ப உள்ள வைங்கப்பா என்றெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உங்களின் தரத்தை தயவு செய்து குறைத்துக்கொள்ளவேண்டாம் பேராசிரியரே.// என்று ஒரு பின்னூட்டம் காரிகனிடமிருந்து வந்தது. பரவாயில்லை... நான் கஷ்டப்பட்டு நகைச்சுவையாக எழுதுவதை அவரும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து விட்டார் போலும்!

இங்கிலிபீசு என்று நான் எழுதியது அவருக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது. கோபித்துக் கொண்டார்.

 //பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.....//  

-  இந்த வார்த்தைகள் நாகரீகம் இல்லாத எழுத்துக்கள் என்றேன்.  அதற்குப் பதிலாக --
//என் நாகரீகம் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள். //

இந்த விவாதம் மிகவும் வேடிக்கையான விவாதமாகத் தோன்றியது. மதங்களைப் பற்றி எழுதுவது நாகரீகமற்ற ஒரு செயல் என்பதும், அதை எந்த தொடர்புமில்லாமல் இப்பதிவில் கூறியிருப்பதும் அவரை நான் ஒரு ‘ஆன்மீகவாதியாக’ நினைக்க வைத்தது. ஆனால் அவரோ தன்னை ஒரு மத மறுப்பாளராகக் கூறியுள்ளார். ஆனால் மதங்களை மறுக்கும் என் நாகரீகம் பற்றி ஏனிப்படிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அவருக்குப் புரிந்திருந்தால் சரி.......

 என் பதிவுகளை வாசித்து ஒரு ’நல்ல’ சான்றிதழ் வேறு கொடுத்து விட்டார்.......... நான் என் பதிவுகளுக்கு முதலிலிருந்தே எண்ணிட்டிருந்தேன். அதற்கும் சேர்த்து இப்படி ’வாசித்திருக்கிறார்’.

 //ஏதாவது மதத் தொடர்பான உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று வெளியிடுங்கள். இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த 800 சாத்தியமாயிற்று என்று.//

ஏனய்யா என்றா நான் கேட்க முடியும். மெத்த தெரிந்த அவருக்கு என் பதிவுகள் உளுத்துப் போனவைகளாக இருந்தால் அதற்கு நானென்ன செய்ய முடியும் - அவரிடம் சென்று இதற்காகத் தனிப்பயிற்சியா மேற்கொள்ள முடியும்? அவரைப் போல் அழகாக எழுத என்னால் எப்படி முடியும் என்ற ஆதங்கம் எனக்கு!

// உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து எந்த கருத்தும் என்னை சிந்திக்க வைத்ததில்லை. ஒரு மாதிரியான மேலோட்டமான எழுத்து உங்களது. ..... இதில் நீங்கள் 800எழுதினால் என்ன 1000 எழுதினால் என்ன?//  நல்ல கேள்வி.

அவர் சொல்வதும் நியாயம் தான்.... உளுத்துப் போன கட்டுரைகள் எத்தனை எழுதினால் தான் என்ன...? யாருக்கு என்ன லாபம்?

உங்கள் நல்ல பின்னூட்டங்களுக்கு  மிக்க நன்றி காரிகன்............

 *

Wednesday, December 17, 2014

807. JIHADI COLLECTION (13)






*
17.12.2014

*





PAKISTAN TALIBAN : PESHAWAR SCHOOL ATTACK  LEAVES 141 DEAD


132 CHILDREN MASSACRED IN ATTACK IN SCHOOL  


மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தீவிரவாதிகள்  சுடுவதற்கு முன் எங்களை ஓதும்படி ஆணையிட்டார்கள்.
  என்னே ஒரு பக்தி …!!


செத்தவர்கள் இளம் பாலகர்கள். குற்றமில்லாத  குழந்தைகள். நிச்சயமாக மார்க்க நம்பிக்கைகளின் படி அவர்கள் எல்லோரும் கட்டாயம் சுவனம் செல்வார்கள்.

ஆனால் அவர்களைக் கொன்றொழித்தசுவனப்பிரியர்களானதற்கொலைப்படையாளர்கள் எங்கே போவார்கள்? அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளாக மாறுவதற்கே சுவனத்தின் ஈர்ப்பு தான் காரணம் என்கிறார்கள். அப்படியானால், அவர்களும் சுவனம் தான் செல்வார்களோ..?



As the Taliban black boots approached


அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாகு அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்.

  என்னே ஒரு பக்தி …!!

 (பல முறை கேட்ட கேள்வி தான் …. ஏன் இம்மார்க்கத்தில் கொலை செய்யும் போது இந்த கோஷம்  எழுப்பப் படுகிறது/?)


*

17.12.2014

*







*









 

Saturday, December 06, 2014

806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்




மங்கி வரும் ஒரு மாலையில் .....

***




***

பூங்காவிலுள்ள நர்சரித் தோட்டத்தில் ....



***

பொறுக்கி எடுத்த சில மலர்கள் ....




***






***


 


***





***

  



***


 



***






Friday, December 05, 2014

805. பெங்களூரு உலா - 2 -- லால் பாக்



30 ஆண்டுகளுக்கு முன் லால் பாக்  மாணவர்களோடு சுற்றிப் பார்த்தது. அன்று மறைந்த பாலுமகேந்திரா  ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார், அவரோடு படம் எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.  

அதன் பிறகு இப்போது தான் இந்த பூங்காவிற்குள் நுழைந்துள்ளேன். இதில் நுழைந்ததும் இலங்கையில் சமீபத்தில் பார்த்த கண்டி பூங்கா நினைவுக்கு வந்தது. எவ்வளவு வித்தியாசம். அந்தப் பூங்கா வெகு அழகாக வைக்கப்பட்டிருந்தது. சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். குப்பையில்லை ... எங்கும் பச்சை ... சில அழகான மனித உருவாக்கங்கள்... ஆர்க்கிட் மலர்களுக்கென்று ஒரு அழகிய தனியிடம்.... அந்தப் பூங்கா போல் இதையும் மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணமே இருந்தது.



இலங்கை கண்டிப் பூங்காவின் சுத்தம் .. அழகு ... 



கண்டிப் பூங்காவினொரு அழகிய அமைப்பு
***






***


ஏரி



***







                                        ***                                       


முன்னூறு ஆண்டு வயதான இலவம் பஞ்சு மரமாம்
***

இலங்கையில் ஆர்க்கிட் பூக்களுக்குத் தனியிடம். இங்கு போன்சாய் மரங்களுக்கென்று ஒரு தனியிடம். சில செடிகளோடு சண்டை போட்டு போன்சாய் வளர்க்க பட்ட பாடும், தோல்வியும் நினைவுக்கு வந்தது.


***




***
ஒவ்வொரு போன்சாய் மரத்தையும் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்பார்கள். இங்கே பெருந்தோட்டத்தில் அவை இருந்தன. அதைக் கவனிக்கும் காவலரிடம் இவை பற்றிய எந்த தகவலும் இல்லை.

வாழ்க்கை போல் பின்னிப் படர்ந்திருக்கிறது!!



***





***




***

கண்ணாடி மாளிகைக்கு அருகில் ...




Wednesday, November 26, 2014

804. ஒரு கட்டப் பஞ்சாயத்து







*


மொத மொதல்ல ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தோடு (confession) இதை ஆரம்பிக்கிறேன்: எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது. என்னென்னமோ சொல்லுவீங்களே… ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி (அனு பாடுற பல்லவியா இது?), சரணம் … இதெல்லாம் ”வீசை என்ன விலை”ன்னு கேட்கிற ஜென்மம் நான்.

பின் எந்த லட்சணத்தோடு பஞ்சாயத்து பண்ண வந்த அப்டில்லாம் கேக்கப்படாது. வந்தது வந்திட்டேன்.. சொல்ல நினச்சதை சொல்லிட்டு போய்றேன். அம்புட்டுதான் ………கொஞ்சம் பொறுங்க ... தோள்ல துண்டைப் போட்டுக்குறேன்... எங்கே அந்த சொம்பு...ம்.. இந்தா இருக்கு... ஆரம்பிப்போமா...

சார்லஸ் அப்டின்னு ஒரு புது பதிவர். பத்து பதிவு மட்டும் போட்டிருக்கார். அதில நாலு பதிவு இளைய ராஜா பற்றியது. தலைப்பே இசை ராட்சஷன் அப்டின்னு வச்சிட்டாரு. எப்படி சின்ன வயசில இருந்து பாட்டு கேட்டேன் … சர்ச்ல பாட்டு பாடினேன் … எப்படி என் இசை வளர்ந்தது. எப்படி ஒரு இசை அமைப்பாளரிடமிருந்து கடைசியில் ராஜாவின் ரசிகனானேன். எந்த பாட்டை எப்பெப்போ கேட்டேன். அது எப்படி என்னை ஈர்த்தது அப்டின்னு எழுதினார்.

இப்படி அவர் பத்த வச்சதும் சிலர் – குறிப்பாக இருவர் – அமுதவன், காரிகன் வந்து எதிர்க்கருத்து வைத்தார்கள். நானும் கூட அந்தப் பக்கம் போய் ஒன்று ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா. கண்ணும் மண்ணும் தெரியலைன்னு வெளியே வந்துட்டேன். ஆனால் அங்க ஒரேடியா இன்னும் புகை வந்து கிட்டே இருந்ததா … சரி .. நமக்கு தோன்றதைச் சொல்லலாமேன்னு ஒரு தைரியத்தில வந்திட்டேன் …

சாமிதான் என்னய காப்பாத்தணும்.

நான் பாட்டு கேட்பேன். ஆனாலும் என் வயசுக் காலத்தில வந்த தமிழ்ப்பாட்டுகள் ஒண்ணும் தேறலை. அனேகமா அப்போவெல்லாம் முழு கர்நாடக இசையே அதிகமா இருந்திருக்குமோ என்னவோ.. அதுனால சில தமிழ்ப் பாட்டுகள் பிடிக்கும். கைராசின்னு ஒரு படம். ஜெமினி நடிச்சதுன்னு நினைக்கிறேன். அதில் ஒரு காதல் பாட்டு. கதாநாயகன் பாடுற பாட்டு. அது தான் எனக்கு மொதல்ல முழுப் பாட்டும் மனப்பாடமா இருந்தது. என்ன பாட்டுன்னு இப்போ மறந்து போச்சு. பள்ளிப்பருவம் இப்படிப் போச்சு.

காலேஜ் வந்ததும் இந்திப் பாட்டுகள் தான் பிடிச்சிது. ‘பார்ரா..அம்பது, நூறு வயலின் வச்சி இழைக்கிறாண்டா இந்த சங்கர் ஜெய்கிஷன்’ அப்டினு சொல்லுக்குவோம். தெரிந்த இன்னொரு பெயர் லஷ்மண் – பியாரிலால் மட்டும் தான். அப்பா கூட ஒரு தடவை கேட்டார்; ஏண்டா! இந்தி வேண்டாம்னு போராட்டம்; ஆனால் கேக்குறது இந்திப் பாட்டா?’ நாங்க பதில் வச்சிருந்தோம்ல … இந்தி படிக்கிறது திணிப்பு; இந்தி கேக்கிறது இனிப்பு! 


கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.


எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது. 


ராஜாவிற்குப் பிறகு மற்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் பிடித்தன. ’அன்னக்கிளி என்னைத் தேடுதே’ கேட்ட போது எழுந்த நினைப்புகளும் நினைவில் இருக்கு. ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டு முதல் முறை கேட்ட நேரம், இடம் எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனாலும் ரஹ்மான் ராஜா போல் சிம்மாசனம் போட்டு அமர முடியவில்லை, வார்த்தைகள் புரிந்து பாடல் கேட்ட காலம் முடிந்து, இசைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டதாலோ என்னவோ பழைய பாடல்கள் போல் புதுப் பாடல்களில் மனம் ஒன்று படவில்லை. இது நான் ரசித்த விதம்.

சார்லஸ் ரசித்ததும் இதுபோல் தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரது பதிவு எனக்கு உடந்தையாக இருந்தது. ஆனால் அமுதவனும் காரிகனும் முற்றிலும் வேற்றுச் சுவையோடு இருக்கிறார்கள். இதுவும் இயற்கையே…. Tastes differ.

ஆனால் அவர்கள் எனக்கு இந்த இந்த இசையமைப்பாளர்கள் பிடிக்கிறது; ராஜாவைப் பிடிக்கவில்லை  என்று சொன்னால் சரி தான். ஆனால் ராஜாவின் மேல் ஏதோ வன்மம் கொண்டது போல் எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

பஞ்சாயத்தில் இதைப் பற்றிப் பேசுவோமே …. 

காரிகனுக்கு … 

உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் இசையில் நிறைய அறிவுள்ளவர் என்று தெரிகிறது. நல்லது.  மகிழ்ச்சி.

இருப்பினும் உங்கள் சில கருத்துகளுக்கான என் எதிர் கருத்துகள்: காரிகன் என்னிடம் -- //இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.// என்று கேட்டிருக்கிறார். என் பதில் -- ஒரு வேளை நான் அதிகம் வாசித்திருக்க மாட்டேனாக இருக்கலாம். ஆனால் சில வாசித்திருக்கிறேன். அதிலும் மதுரைக்காரர் ஒருவர் - குமரன் - இளையராஜாவின் இயற்பியல் என்று எழுதுகிறார்.  அந்த தலைப்பில் அவர் எழுதிய அழகான பதிவுகளும் நினைவுக்கு வருகிறது. //இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது எப்படி? வாழ்க்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும்.// இது போல் அழகாக எழுதிச் செல்வார். வாசிக்கவே இன்பம் வாசித்துப் பாருங்கள் காரிகன். (இப்போது எனக்குப் பின்னால் ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடல் கேட்கின்றது…. நல்ல பாட்டு …இல்லீங்களா?)இது போல் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் என் கண்பார்வையில் ராஜாவைப் ‘போற்றிப் பாடடி கண்ணே…’ பதிவுகள் தான் அதிகம் பட்டன. அதனாலேயே உங்கள் கருத்துகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

உங்களின் இன்னும் சில கருத்துகள் என் பதில்களோடு;

//உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்?// காரிகன் நாம் யாருக்கும் conduct certificate கொடுக்க வேண்டியதில்லை. யார் இசை யார் யாருக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே ‘பஞ்சாயத்தின் முன் உள்ள கேள்வி’. ?/

ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.// ஓ! இசை அறிஞர் நீங்களே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல? என் ஒரே பதில்: அப்படியா? //

ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.// ஓ! நானும் ஒரு மர மண்டை தான். //

இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன்.// 
காரிகன் , This shows just how biased you are. 

காரிகன், உங்கள் இசையறிவைப் பார்த்து வியக்கிறேன்.இருப்பினும் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளை வாசித்த போது உங்களைப் போல், அல்லது - என் பார்வையில் உங்கள் அளவோ அல்லது அதற்கு சிறிது மேலோ உள்ள - சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தேன். படித்தவை எனக்கு மகிழ்ச்சியளித்தன. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 செளந்தர் 
ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன் இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு ....

பால ஹனுமான்
ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, (ஹே ராம்) படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.

காரிகன், எனக்கும் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

 செழியன்
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது. (அமுதவன், இதே கருத்தை நாம் சிவாஜிக்கும் வைத்தோம்...)

இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.

 ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின், அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும், அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது, அவன் திசைகள் கடந்து... தனது படைப்பின் எல்லைகளை, மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை, அவனுக்குத்தரும். 

அடித்துச்சொல்கிறேன்.. உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ், ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா. (ஹே ராமில்) இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க, கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு. ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள், தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.

அமுதவனுக்கு ….
நீங்கள் சிவாஜி பற்றி எழுதி, அதற்கு வவ்வால் பதில் சொன்னது போல் இங்கு நீங்கள் எதிர்க் குரலில் பேசுவது போல் தெரிகிறது. சிவாஜி ஒரு பெரும் நடிகர்; அவரது ரசிகர் நீங்கள். வவ்வால் குறை சொன்னது உங்களுக்கு எந்த அளவு கோபம் தந்தது. இப்போது வவ்வாலின் ரோலை நீங்கள் இதில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா; மொசார்டுக்கு இசை சொல்லிக் கொடுத்தவர்; பாக்கிற்கு ட்யூஷன் எடுத்தவர் – இப்படியெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பது உங்கள் குற்றச்சாட்டு. சிவாஜியைப் பற்றி நீங்கள் சொன்ன சில வாசகங்களைத் தருகிறேன். நம்மைப்போல் சிவாஜி மேல் பற்றில்லாத ஒருவருக்கு நீங்கள் சொன்னவை எப்படி பொருள் படும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல,

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய் இருந்தார்.

உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத மனிதர்கள் மிக மிக அதிகம்.

வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. 

அத்தனையையும் குரலிலேயே கொண்டு வந்த மகா கலைஞன் உலகத்திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை.

அமுதவன்,  எனக்கும் மிக மிகப் பிடிக்கும் சிவாஜியைப் பற்றி நமது ஆர்வத்தில் சொல்லும் வார்த்தைகளாகத்தான் இவை இருக்க முடியும். இதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எதிர்க்கும் ஆட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரியாதா உங்களுக்கு?

உங்களைப் போல் இங்கே ராஜாவை விரும்புவோர் சிறிது உயர்வுபடுத்திப் பேசினால் என்ன தவறு? அவர்கள் ரசிகர்கள் - நாம் சிவாஜிக்கு இருப்பது போல்.- உயர்த்திதான் பேசுவார்கள்.

தீர்ப்பு.........

நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!

ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனையோ, ரசினி ரசிகனையோ என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்களையெல்லாம் எப்படிடா ரசிக்கிறாங்கன்னு தான் வருஷக் கணக்கா நினச்சிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இந்த ஆளுகளுக்கு அதீத ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் பட்டியலில் ராஜைவைச் சேர்க்க அமுதவனும், காரிகனும் கூட சம்மதிக்க மாட்டார்கள். ராஜாவை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் ... அதுவும் அவர்களில் பல விஷய ஞானத்தோடு இருக்கிறார்களும் என்பதும் உண்மையே.

சமீபத்தில் நண்பன் ஒருவனோடு காரில் செல்லும் போது அவன் சேமித்து வைத்திருந்ததில் Stanford Universityல் It's Different என்ற FM நிகழ்ச்சியைக் கேட்டேன். கேட்டுப் பாருங்கள். ராஜாவின் இசையை முழுக்க முழுக்க analysis செய்து, மற்ற பெரும் இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு.... மிக அருமையான நிகழ்ச்சி. இசையறிவு உள்ளவர்களுக்கு அது ஒரு உயர்ந்த விருந்து.

எனது வருத்தம் இரண்டு;
1. How to name it?, Nothing but wind போன்ற தனி இசைத்தட்டுகளை வெளியிடாமல் போய் விட்டாரே ...
2. இன்று போடும் பாடல்கள் அவரின் பழைய பாடல்கள் போல் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் ...

ராஜா 142 ராகங்களிலோ, 846 ராகங்களிலோ பாடல்கள் அமைத்திருக்கலாம். அவர் ரசிகர்கள் அவரை ரசிக்கட்டும். முடியாதவர்கள் ஒதுங்கிக் கொண்டு, அவர்கள் ரசனையைத் தேடி செல்லட்டும்.. It is all so simple!

My reqyest:
//The perfect porn music director of the Tamil film music industry//..

—  My very sincere request: better all of you stop talking about this porno music. Who is to be condemned for this – the directors, lyricists, music directors or above all, WE, the audience? இதைப் பற்றி அப்பதிவில் பேசியது நமது தரத்திற்கு மிகவும் கீழான ஒன்று.


சொம்பை எடுத்து உள்ளே வைங்க’ப்பா ... !!

*












 *

Saturday, November 22, 2014

803. JIHADI COLLECTION (12)



DANGEROUS LESSONS: If the Islamic State is detonating shrines
,
 it is following the precedent set in the 1920s by the House of Saud. 

Picture shows the Prophet Younis Mosque 

after it was destroyed in a bomb attack by 

Islamic State militants in Mosul.





S. IRFAN HABIB
(S. Irfan Habib holds the Maulana Abul Kalam Azad Chair,
National University of Educational Planning and Administration, New Delhi.)
-----------------------------------------------------
செளதிய வஹாபியத்தின் கொடூர முகம்


ஹபிப் எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் ….
(என்னுடைய வார்த்தைகள் ஏதுமில்லை இங்கே.)   



வஹாபியிசத்தை உலகம் முழுமைக்கும் பரப்ப வேண்டுமென்ற குறிக்கோளோடிருக்கும் ஐ.எஸ். அமைப்பினை இன்று துருக்கி அரசு தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது வரலாற்றில் ஒரு விபரீதமான விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல முடியும். செளதி அரசால் இன்று நியாயப்படுத்தப்படும், வலிமைப்படுத்தப்படும் ஐ.எஸ். 19ம் நூற்றாண்டில் ஒரு அராஜக, தீவிரவாத அமைப்பாக உருவெடுத்தது. ஐ.எஸ்.அமைப்புக்கு தங்கள் கொள்கையை நிலை நிறுத்த எந்த வித கொடூரமான மனித குலத்திற்கே எதிரான முறைகேடுகளையும் அது கைக்கொள்ளும் என்பது அதன் ஆரம்பகால வரலாற்றிலிருந்தே தெரிய வரும் உண்மை.

வஹாபிய இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அதன் வெறியாட்டத்தை நேரடியாக அனுபவித்தது ஓட்டோமான் அரசு தான்.1988ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிஞராக இருந்த அப்துல் வஹாப் அப்போதிருந்த செளதி அரேபியாவின் முதல் மன்னனான இபுன் சாவுத் இருவரும் இணைந்து ஓட்டோமான் அரசிற்கு பெரும் தலைவலியாக உருவானார்கள். வழக்கத்திலிருந்த பல இஸ்லாமிய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்கினார்கள்.  …  ஓட்டோமான் அரசு இவர்களைத் தோற்கடித்து அவர்களை பாலைவனத்திற்குள் விரட்டியடித்தார்கள். ….  வஹாபிய கொள்கைகள் மூடத்தனமானவை; இஸ்லாமியத்திற்கு எதிரானது என்பது துருக்கியரின் கருத்து. ஆனால் இன்று துருக்கியர்கள் ஐ.எஸ். அமைப்புடன் இருப்பது என்பது ஒரு பெரிய நகைமுரண்.

வெறுப்பின் எல்லைகள்
வஹாபின் தீவிரவாத, புனிதவாதக் கொள்கைகள் இபுன் சாவுத்தின் ஈவு இரக்கமற்ற மதத் தீவிரவாதத்தோடு இணைந்தது. …  பயங்கரங்கள் நடந்தேறின. … இந்த நிகழ்வுகள் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னெடுத்தன; பயங்கரவாதம் தலையெடுத்தது. இஸ்லாமியர் மட்டுமல்ல; உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் அது வன்மத்தோடு தீண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு தீவிரவாத இஸ்லாமியக் குழுவும் இவர்களையே முன்னோடியாகக் கொண்டுள்ளது. செளதியின் பண பலமும், அதிகார வெறியும் இக்குழுவின் தத்துவங்களே உண்மையான இஸ்லாம் என்றும், மற்றவையெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகியவை என்றும் பறை சாற்றுகின்றன.
வஹாபியம் பலப் புது மோசமான மாற்றங்களோடு வளர்ந்து விட்டது. இன்று அதன் வளர்ச்சி வளர்த்து விட்ட செளதியையே பயமுறுத்துகிறது. இதனால் தங்களை ஐ.எஸ். குழுவிடமிருந்து விலக்கிக் கொண்டு அதன் கொடூரம் ஷாரியத் சட்டங்களுக்குப் புறம்பானது என்று மெக்காவின் தலைமைக்குரு பொது அறிக்கை விட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற இரட்டை வேடம் போடுவது செளதிக்கு பழகிப் போன விஷயம் தான்!
பழைய புனித இடங்களை அழித்தொழிப்பது ஐ.எஸ்., செளதிக்கும் 1920லிருந்தே உள்ள வழக்கம் தான்.  இதோடு, ஷியா இஸ்லாமியரை வெறுத்தொதுக்குவது இருவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை. 19ம் நூற்றாண்டில் கர்பாலாவில் நடத்திய கொள்ளையும்,கொலையும், பின்னால் நபியின் பேரனான ஹுசைனின் நினைவிடத்தை அழித்ததும் மிகப் பழைய கதைகள். அன்று ஆரம்பித்த ஷியாக்களின் மீதுள்ள எதிர்ப்பு இன்றும் ஐ.எஸ்., அல் கொய்தா குழுவினரிடம் தொடர்ந்து இருப்பதும் உண்மை.
வஹாபியத்தின் புதிய தோற்றம்
ஏனிந்த வஹாபியம் இப்படி தலையெடுத்து ஆடுகிறது? 1970ல் நடந்த இரானியப் புரட்சி வஹாபியத்திற்கு எதிரான ஒன்றாக இருந்தது. இவைகளுக்கு எதிராக வஹாபியத்தை புதிதாக வளர்த்தெடுக்க செளதி முனைகிறது. இதன் பிரதிபலிப்புதான் போகோ ஹரம், அல் ஷாகேப். அல் கொய்தா, தாலிபன், இப்போதைய ஐ.எஸ்.  போன்றவைகளின் வளர்ச்சி. ஷியாக்களும் முன்பு போலில்லாமல் தீவிரவாதத்திற்குள் அயோத்தல்லா கொமேனி காலத்திற்குப் பின் மாற ஆரம்பித்து விட்டார்கள்.
செளதி, கத்தாரி அரசுகள் இப்போது ஐ.எஸ். மூலம் ஒரு அரக்க சக்தியை வளர்த்து விட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; தங்கள் அரசின் அமைதிக்கு இது எதிரானது என்றும் உணர்ந்திருக்கிறார்கள். வஹாபியிலிருந்து ஐ.எஸ்.பிறந்திருந்தாலும் இன்று அது மிக அதிக்க் கொடூரத்துடன் வளர்ந்து விட்டது. இன்று ஐ.எஸ். குழுவை அடக்க ராணுவத்தால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டது.


ஆனால் இஸ்லாமிய உலகத்தில் நிரந்தர அமைதி வேண்டுமாயின், இஸ்லாமியத்திற்குள் ஒரு புதிய போராட்டம் ஆரம்பிக்க வேண்டும். அங்கு ஒரு பெரும் மனமாற்றம் தேவை. இஸ்லாமிய ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு என்பதைத் தாண்டியும் நம் பார்வைகள் இன்னும் விசாலமாக வேண்டும்.










Friday, November 21, 2014

802. பெங்களூரு உலா






*



 போன முறை பெங்களூரு சென்ற போது ஆங்கிலத்தில் எழுதிய தன் கதையை உறவினர் என்னிடம் கொடுத்தார். வாசித்தேன். இருவருமாக உட்கார்ந்து கதை பற்றிய எங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

சில நாளில் மறுபடியும் பெங்களூரு. இப்போது அவரது அடுத்த கதை ரெடி. நானோ இந்தக் காலக்கெடுவிற்குள் ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் தமிழ்ப்படுத்தியிருந்தேன். அதற்கே அவ்வளவு சிரமம்.

யாரோ எழுதியதைத் தமிழ்ப்படுத்தவே எனக்கு அவ்வளவு பாடு. ஆனால் மக்கள் சொந்த கதை ஒன்றை உருவாக்கி அதற்கு எழுத்துருவும் கொடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு கதையை உருவாக்குகிறார்கள் என்றே தெரியவில்லையே. எல்லாம் மேஜிக் மாதிரி தான் எனக்குத் தோன்றுகிறது.

 அடுத்த ஜென்மத்திலாவது கதை எழுதும் ஆற்றல் கைவரப் பண்ணணும்!!

 ************

எங்கள் ஊரில் நான்கு சீசன்களையும் ஒரே நாளில் பார்க்க முடியும் என்றார் உறவினர். சொன்னது மாதிரி இருந்த நாலு நாட்களும் வித விதமான நாட்களாகவே நகர்ந்தன. திடீரென்று வெயில். அடுத்த சில நேரம் கழித்து மழை. மாலையில் பனி..குளிர்.

ஆனாலும் நல்ல குளிரை எதிர்பார்த்து ஆசையோடு சென்றேன். குளிரவில்லை.

 ************

போகிற வழியில் விதான் செளதாவைப் பார்த்ததும் நம்மூரில் கட்டிய கட்டிடம் நினைவுக்கு வந்தது. பல எரிச்சல்கள். அழகில்லாத ஒரு கட்டிடம். கட்டிய பிறகு இடிக்கவா முடியும்? ஆனாலும் அதற்காக ‘அந்த ஆள் கட்டிய கட்டிடத்தில் நான் உட்காரவா?’ என்று வீண்பிடிவாதம் பிடிக்கும் அடுத்த அமைச்சர். ஒரு வீட்டைக் கட்டி விட்டு அததற்கு என்று சில இடங்களை வைத்து விடுகிறோம். ஒரு சின்ன வீட்டில் அதன் பிறகு கூட அதைக் கூட மாற்ற முடிவதில்லை. ஆனால் எதற்கோ கட்டிய ஒரு கட்டிடத்தை மருத்துவ மனையாக்குவேன் என்ற வீண்பிடிவாதம் ஒரு அரசியல்வாதியின் ஆணவமாகத் தான் தெரிகிறதேயொழிய அதில் எந்த அர்த்தமும் இல்லை.

 ம்ம் ... எல்லாம் நம் தலையெழுத்து!

 *************

விதான்செளதாவிற்கு எதிர்த்த நீதிமன்றங்களைப் பார்த்ததும் சென்னை நீதி மன்றமும், எங்கள் கல்லூரியும் நினைவிற்கு வந்தன. எல்லாம் Indo-Saracenic architecture. ஒரே ஆள் ... நிறைய கட்டிடங்களுக்கு டிசைன் போட்டிருக்கிறார். அதே சிகப்பு கலர்; வளைவுகள்; ஆர்ச்சுகள் .......

 ************* 

பெங்களூரு ஆட்களிடம் punctuality இருக்குமா? இருக்க முடியுமா?ன்னு கேள்வி எழுந்தது. இருக்க முடியாதுன்னு தான் தோன்றியது. எப்படி முடியும்? ஊர் முழுவதும் திரும்பும் இடத்திலெல்லாம் jam தான் ... traffic jam தான்! இந்த லட்சணத்தில் எப்படி அவர்களிடம் punctuality இருக்க முடியும் என்பது என் கேள்வி.

 ****************

சென்னையை விட விளக்கு அலங்காரங்கள் பெங்களூரில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. கடைகள், தெருக்கள் எல்லாம் வெளிச்ச மயமாக இருந்ததாகத் தோன்றியது.  அதுவும் Elevated Express way-ல் இரவில் போகும் போது சாலை மேலும் கீழுமாய் சென்றது. ஒரு பக்கம் நம் முன்னால் சிகப்பு விளக்குக்ள் அலங்காரமாகச் செல்ல, எதிரிப்பக்கம் வெள்ளை விளக்குகள் கண்ணைக் கூச வைக்கின்றன. படம் எடுக்க ஆசை. கொஞ்சம் க்ளிக்கினேன்.







நல்ல படம் தான் கிடைக்கவில்லை!

 ******************

 Meet Up என்று ஒன்றை புதிதாக கணினியில் காண்பித்தார் உறவினர்; அப்படி ஒன்று இருப்பதை அப்போது தான் அறிந்தேன்.

அட... மதுரையை ஒரு பெரிய கிராமம் என்பார்கள். உண்மைதான் போலும்! சென்னை, பெங்களூரு ஊர்களோடு மதுரையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதுரை ரொம்பவே பாவமாக இருக்கிறது. சான்றாக ஒரே ஒரு குழுவை எடுத்து பார்த்தேன். புகைப்படக்காரர்கள் குழு. மொத்தம் நான்கு பேர். அதில் ஒருவர் மட்டுமே மதுரைக்காரர்.

 மதுரையில் நிலமை ரொம்பவே மோசமாக உள்ளது. கஷ்டப்பட்டு மதுரை Meet Up-யின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

*****************

பெங்களூரில்  நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன்.

ஒரு  கூட்டு வீடு - apartments - கட்டினால், அதன் கழிவு நீர் எல்லாம் ஒரு தொட்டியில் தேக்கப்பட்டு, recycle செய்யப்பட்டு அந்தக் கூட்டு வீடுகளின் கழிவறையில் மீண்டும் பயன் படுத்தப் படுகிறதாம். இந்த அமைப்போடு தான் வீடு கட்ட முடியும். கட்ட அரசின் உத்தரவும் கிடைக்குமாம்.

ஏனிந்த ஏற்பாட்டை நமது மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதில்லை. அட...நீதி தெய்வத்தை சிறையில் அடைத்த அநீதிக்காரர்கள் தான் அவர்கள்; இதய தெய்வத்தை இருட்டறையில் பூட்டியவர்கள் தான் அவர்கள். இருந்தாலும் அவர்கள் செய்வதில் உள்ள நல்லவைகளை நாமும் கடைப்பிடிக்கலாமே... இல்ல...

******************

பல இடங்களில் மம்மி படங்கள் ஒட்டியிருந்தார்கள். மறுபடியும் அதே மாதிரி நிறைய படம் ஒட்ட வேண்டிய நிலை வரட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


*****************
22.11.14

இன்னொன்று சொல்ல மறந்து போனேனே,,,, பெங்களூருக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கும் ட்ராபிக்... வண்டிக்குள் சிறை ... பொறுமை காக்க திறமை தேவை ... அங்கே வண்டியோட்டவும் பெருந்திறமை தேவை....

அசந்து போய் உட்கார்ந்திருந்த போது அந்தத் தெரு முக்கில் ஒரு பெரிய போர்டு வைத்திருந்தது.

SMALL FAMILY 

HAPPY FAMILY

என்று எழுதியிருந்ததைச் சத்தமாக வாசித்தேன். சில நொடி கழித்து ...

SMALL CITY

HAPPY CITY

என்று சொன்னேன். காருக்குள் இருந்த ‘மக்கள் கூட்டம்’ அனைத்தும் ஒரு சேர கை தட்டி சந்தோஷம் என்றார்கள் -- இருந்தவர்கள் அனைவரும் ‘மதுரைக் கூட்டம்’ !

வாழ்க மதுரை !!!



*




Saturday, November 15, 2014

801. பழைய மொந்தையில் பழைய கள்ளும் புதிய கள்ளும் ...




*










*


 2008ம் ஆண்டு மேலே உள்ள தலைப்பில் ஒரு இணையப் பூ ஒன்றை நாங்கள் ஆறு பேர் இணைந்து ஆரம்பித்தோம்.

 SurveySan 
O.R.B Raja 
தருமி 
Santhosh Kumar 
Anandha Loganathan 
நக்கீரன்

சமுக நல சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்கவும், மத்திய அரசாங்கத்திடம் நம் கருத்துகளை, வேண்டுகோள்களைப் பதிய ஒரு இணைய தளம் இருந்ததைக் கண்டதும் அதை முறையாக தமிழ்ப் பதிவர்கள் பயன்படுத்த ஒரு இணையப் பூஒன்றை நாங்கள் ஆறு பேரும் ஆரம்பித்தோம். சில பதிவுகளை அந்த ஆண்டில் தொடர்ந்து இட்டோம். அதன்பின் அப்பதிவை நாங்கள் தொடர்ந்து பயபடுத்தாமல் விட்டு விட்டோம். இந்த இணையத்திற்கான logo ஒன்றினை SurveySan அவர்கள் படைத்தார். ( I MISS YOU, SURVEY SAN). இப்போது அந்த ஐவரும் இணையத்தில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை!  :(

இந்த இணைய இதழில் எங்களின் பல கருத்துகளைப் பதிவிட்டோம்.

ரயில்களில் கழிப்பறைகள் தொடர்பாக... என்ற தலைப்பில் நான் இப்பதிவுகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசுக்கு ஒரு விண்ணப்பம் ஒன்றை எழுதியிருந்தேன்(30.12.2007 - ( Registration No. DARPG/E/2007/08851) இந்தவிவரங்களை என் பதிவுகளிலும் பதிவிட்டிருந்தேன். - http://dharumi.blogspot.in/2007/12/246.html

இதற்குப் பதில் அரசிடமிருந்து வந்திருந்தது.http://fixmyindia.blogspot.in/2008/02/blog-post_1634.html- முயற்சி எடுப்பதாக அதில் தகவல் வந்திருந்தது.


ஆனால் அப்படி ஏதும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆனால் சென்னைக்கு சென்ற சில தினங்களுக்கு முன் செல்லும் போது பாண்டியன் துரித வண்டியில் கழிவறைக் கதவில் BIO-BATHROOM என்பதைப் போன்ற ஒரு அறிக்கை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பெய்த சிறு நீர் வழக்கம் போல் கீழே விழுந்து மதுரை மண்ணை அசிங்கம் செய்யாம்ல் அமைக்கப்பட்டிருந்தது.


என்றோ எழுதிய ஒரு விண்ணப்பத்திற்கு இன்று பதில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி வந்தது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. இருந்தாலும் நாம் என்றோ எடுத்த ஒரு முயற்சி இன்று பலனடைந்திருப்பது பார்த்து ம்கிழ்ச்சி.


நம் கடன் பணி செய்து (சும்மாகிடப்பது  கூட ஒரு மகிழ்ச்சி தான் போலும்.

விட்டதை விட்ட இடத்தில் தானே தேட வேண்டும். ஆகவே மீண்டும் அந்த பழைய்ய்ய்ய்ய இணையப் பூவில் இன்றைய தேவையான, பார்களை ஒழிப்பதற்கான தமிழக அரசிற்கான விண்ணப்பத்தையும் இதில் பதிவிட்டுள்ளேன்.  -   http://fixmyindia.blogspot.in/2014/11/blog-post.html

இளைஞர்கள் யாரேனும் (அல்லது மனதில் இளையோரான முதியவர்களும்) இப்படி பதிவெழுத விரும்பினால் இப்பதிவில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.

ஏதாவது எழுதுவோமே .... நடப்பது நடக்கட்டுமே .....!


 *
பழைய பதிவர்கள் அந்த ஐந்து பேரும் இங்கே இப்பதிவிற்கு வருகை தந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் ........!

*

இதே போன்ற கருத்தை வைத்தபோது எத்தனைத் தமிழ்ப் பதிவர்கள் ஆவலோடு இதில் கலந்து கொண்டார்கள் என்பதை இப்பதிவையும் பின்னூட்டங்களையும்  பார்த்துப் புரிந்து கொள்ளுங்களேன்...........






Monday, November 10, 2014

800. எண்ணூறாம் பதிவில் ஒரு சின்ன விசேஷம்






*

ஒன்பதரை ஆண்டு ... எண்ணூறு பதிவுகள்.

போன பதிவு போடும் போதே சொல்ல வேண்டிய செய்தி. ஹிட்சுகளுக்காக எழுதிய காலம் முந்தியே முடிந்து போனது. அதுவும் மதங்களைப் பற்றி அதிகம் எழுதியதால் ஓரளவு தொடக்கூடாத ஒரு பதிவனாகவும் ஆனேன். reality புரியாதா என்ன? ஆனாலும் எழுத வேண்டும் என்ற ஆவல் இதுவரை குறைய வில்லை. பழைய நல்ல பதிவர்கள் நின்று போனது கொஞ்சம் கவலை தான். அதில் பலரும் சமுக வலைத்தளங்களுக்குச் சென்று விட்டார்கள். அதற்கும் நண்பர்களுடனான chatக்கும் அதிக வித்தியாசமில்லை. நண்பர் ஒருவர் கூறுவது போல் அதெல்லாம் வெறும் டீக்கடை பேச்சு என்பது போல் தோன்றி விட்டது. டீ குடிக்கும் போது ரெண்டு ஜோக் .. குடிச்சி முடிச்சதும் ’பை’ போய்ட்டு வர்ரேன்னு காலேஜ் கான்டீன்ல சொல்லிட்டு போவோமே அது மாதிரி ....

பதிவுகள் எல்லாம் quite solid ! எழுதும் போதும் சீரியஸ் ... எழுதுவதும் சீரியஸ் .. .. முடித்ததும் ஒரு திருப்தி. இது போதும்! யாருமே வாசிக்காமல் போவதில்லை. எனக்கு எழுதியதில் திருப்தி ... நாலைந்து பேர் படித்ததில் திருப்தி. இது போதும். அதுவும் வழக்கமான பின்னூட்டக்காரர்கள். என் பதிவுகளை விட அதை  வாசித்து அவர்கள் எழுதும் பின்னூட்டங்கள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருப்பதிலும் ஒரு பெருமை; மகிழ்ச்சி.

உண்மையைச் சொல்லியாக வேண்டுமல்லவா? சில சமயங்களில் பொதுக் காரியங்களைப் பற்றி எழுதும் போது பதிவர்களிடமிருந்து கட்டாயம் வரவேண்டிய firm support வராமல் போகும் போது ‘என்னடா ..இது?’ என்ற எண்ணம் வந்து விடுகிறது. தமிழ்மணத்திற்கு இன்னொமொரு கோரிக்கை  என்று ஒரு பதிவு எழுதினேன். நிச்சயமாக எல்லோருக்கும் உகந்த கோரிக்கைகள் தான் அதில் வைத்திருந்தேன். அதில் எதுவும் எல்லோருக்கும் உகந்தவைகளாகத்தான் இருக்க வேண்டும். 467 பேர் பார்த்திருக்கிறார்கள். பொது விசயத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை பலர் ஆதரித்திருக்க வேண்டுமென நினைத்தேன். “எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டேன்” என்ற தத்துவத்தில் பலரும் இருப்பதைப் பார்த்தால் எரிச்சல் வருமா வராதா....? நன்றாகவே வந்தது.

******

800 பதிவுகள் போட்டதை நான் கொண்டாட வேண்டாமா...? எப்படிக் கொண்டாடுவது என்று நினைத்தேன். ஏதாவது ஒரு பொதுக்காரியத்தை எடுத்துச் செய்ய வேண்டுமென நினைத்தேன்.

சாராயக் கடைகளின் கேடு பற்றி இப்போது அடிக்கடி போராட்டங்கள், விண்ணப்பங்கள் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பக்கத்து வீடு கேரளாவில் முழுவதுமாக குடிக்கடைகளை நிறுத்துவது பற்றி ஆவன செய்து கொண்டிருக்கின்றது. ( யார் கண்டது ... அந்தக் கூட்டமெல்லாம் இனி டாஸ்மாக் பக்கம் வந்து வரிசையில் நிற்கப் போகிறதோ என்னவோ...!) நான் டாஸ்மாக்கை விட அதிகம் அஞ்சுவது பக்கத்திலிருக்கும் பார்களை. அதுவும் அவர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு அருகில் இரு முறை நின்ற அனுபவமும் உண்டு - பக்கத்திலிருந்த ப்ரோட்டா கடையில் நின்ற அனுபவம் தான். அதில் இரு குடிமகன்கள் வண்டி எடுத்த ‘கண் கொள்ளா காட்சியைக் காணும் அனுபவம்’ ..... வண்டி எடுக்கும் போதே இன்று எத்தனை பேரை இவன் சாய்ப்பானோ என்றே தோன்றியது.

இரண்டாவதாக, பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.

நானும் குடிப்பேன் என்பதால் குடியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருக்க மாட்டேன். ஆனால் இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக  பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.

மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!

ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.




*

Please join this campaign:

https://www.change.org/p/tamil-nadu-ministerial-cabinet-close-down-the-bars-in-all-tasmac-shops?recruiter=5035702&utm_campaign=mailto_link&utm_medium=email&utm_source=share_petition




*