Monday, July 07, 2014

772. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 5







*


 எதிர்க் கருத்தைத் தாங்காத மக்கள், சிலை வணக்கத்திற்கு எதிரான மக்கள், இயற்கையின் அழிவு சக்திகள் - பல திக்குகளிலிருந்து வரும் இத்தகைய எதிர்ப்புகளையும் தாண்டி அசோகரது பெயர் பல மாற்றங்களுக்கும் மத்தியில் 2270 ஆண்டுகளையும் தாண்டி நிலைத்து நின்று விட்டது. ஆனாலும், அசோகரைப் பற்றிய பல புத்த சமயக் கதைகள் இருந்தாலும், "சக்கரம் சுழற்றும் பேரரசன்" என்ற தன் தர்ம சக்கரத்தினால் பெயர் பெற்ற அசோகன் என்ற தனி மனிதரைப் பற்றிய விவரங்கள் ஏதும் நம்மிடமில்லை. இருப்பதில், பல கற்பனைகள் தவிர முழு நிஜமுமல்ல. தன் முகத்தைச் சிறிதே வெளிக் காண்பிக்கிறார். முழு உருவம் எதுவும் தெரியாது. அசோகரின் இந்த மாயச் சிற்பம் ஆய்வாளர்களுக்குரிய கேள்விக் குறியாகி விட்டது.

ஒரு பெரும் வரலாற்று மனிதனைச் சுற்றி இத்தனைக் கேள்விக் கணைகள் … இப்படி ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே இருக்கக் கூடிய ஒன்று. இந்திய நாடு முழுவதும் ராமாயணத்தின் நாயகன் ராமரைத் தொழுதேத்துகிறது. ராமர் ஒரு புராணக் கதை வீரன். ராவணன் என்ற ராட்சசனை வென்று, அயோத்தியாவில் பெரும் மன்னனாக முடி சூட்டப்படுகிறான். அதன் பின் பதினோராயிரம் ஆண்டுகள் பெரும் பேரரசனாக நல்லாட்சி செய்கிறான். இது ராமரின் புராணக் கதை! இதை நம்பிச் செல்லும் மக்கள் கூட்டம் உண்மையான மனிதன் ஒருவனைப் பற்றி அதிகம் தெரியாதிருக்கிறார்கள். முதன் முறையாக இந்தியாவை தனது ஒரே குடையின் கீழே கொண்டுவந்த மன்னன் - அவ்வகையில் அவன் தான் உண்மையான ‘இந்தியாவின் தந்தை’; இந்தியாவில் எல்லோருக்கும் ஏற்கும்படியான கொள்கைகளைக் கொண்டு வந்த பெருமனிதன்; காந்தியின் அஹிம்சை கொள்கைகளுக்கு முன்னோடியாக, மூத்து முதலில் நின்றவன்; அறமே எவரையும் வெல்லும் ஆயுதம் என்ற பெரும் கருத்தினைக் கண்டவன்; ஆட்சியாளர்களின் மத்தியில் யாரும், எவரும் ஒத்துக் கொள்ளும் தனிப்பெரும் ஆட்சியாளன்; ஆட்சிப் பண்புகளால் உயர்ந்த இடத்தில் அமர்ந்தவன்; -- ஆனால் இவனைப்பற்றி ஏதும் தெரியாத மக்கள் கூட்டம் …! ஆச்சரியமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது.

அசோகன் எழுப்பிய குரல் ஆசியக் கண்டத்தின் மூலை முடுக்குகளையும் கவரத் தவறவில்லை. ஆனால் அவன் குரலுக்கு இந்தியாவில் ஏதும் பெரிய மரியாதை இல்லாமல் போயிற்று. அவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய பல நினைவுச் சின்னங்கள் மீது நாட்டுக்கோ, அதன் மக்களுக்கோ, எல்லாவற்றையும் விட இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்திற்கும் கூட அதிக மரியாதை இல்லை. அந்த நினைவுச் சின்னங்களுக்கு ASI கூட எந்தப் பாதுகாப்பும் இன்றும் கொடுக்காது இருப்பது வருத்தத்திற்குரியது.


ஏனிப்படி ஒரு நாடே முழு இருளுக்குள் அமர்ந்திருக்கிறது? அறியாமையா? 




*

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வருத்தம் மேலிடுகிறது ஐயா
தம 1

G.M Balasubramaniam said...

அசோகன் ஒரு சரித்திர புருஷன். அகிம்சைவாதியாவதற்கு முன் ஒரு சராசரி அரசன் , தன் குடையின் கீழ் அனைவரையும் ஆதிக்கம் செலுத்த முயன்றவன் மனம் மாறி புத்த தர்மத்தை நிலை நாட்ட விரும்பினான் அவனது தர்மச் சக்கரமே நம் அரசின் குறிக்கோள் என்றாகி இருக்கிறது. . அவன் புத்தமதத்தைப் பரப்ப முயன்றான். இதற்கு மேல் அவனைப் பற்றிச் சொன்னால் அவனுக்குக் கடவுள் அந்தஸ்து வந்து விடுமே. அவன் காற்று வெளியிலிருந்து லிங்கம் வரவழைத்தானா மந்திர தந்திரங்கள் மூலம் யாரையேனும் ஆட்கொண்டானா. / நிறையவே கேள்விகள் எழுகின்றன சார்.

Post a Comment