Thursday, April 27, 2017

935. ஒரு பிரலாபத் தொடர்






*



 வயதாகி விட்டதில் ஒரு லாபம்.

உலகத்தில் பல கஷ்டங்கள்; அடுத்த யுத்தமே தண்ணீருக்காக என்கிறார்கள்; நாட்டில் பல பிரச்சனைகள்; ஒரு ஆறு, கண்மாய் என்றும் ஒன்றையும் காணோம்; அவை எல்லாவற்றையும் காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதாமே; தாய்மொழிக்குக் கடும் சோதனை; எங்கும் இந்தி தான் தலையெடுத்து நிற்கிறது; நீட் தேர்வுகள் வேறு தலை நீட்டுகிறது; ……. நீண்ட பட்டியல்.

 இத்தனைக்கும் கவலைப்படணுமோன்னு நினைக்கிறப்போ… அட போப்பா .. உனக்குத்தான் வயசாயிருச்சில்ல … எத்தனை நாளைக்கு? பேசாம இருப்பியான்னு ஒரு வயசான வாய்ஸில் ஒரு சத்தம் உள்ளேயிருந்து வருது. 


முந்தியெல்லாம் ஆங்கில இந்துப் பத்திரிகை எடுத்தால் ஒண்ணு ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்போவெல்லாம் ஒரே ஸ்கேன் தான். என்னத்தப் படிச்சி என்ன பண்ண? வட கொரியா பாத்து, ட்ரம்ப் பார்த்து பயந்தாலும் எல்லாமே ’டேக்கிட் ஈசி’ பாலிசி தான். பொழுது போகுது.

 ஆனாலும் வயசான ஆளுகன்னா எப்போதும் ஏதாவது ஒண்ணைப் பத்தி பிரலாபம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாமே … எனக்கும் பிரலாபம் பண்ண ஒரு பெரிய பட்டியல் இருக்கு. அத ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் …… 


ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல்.

ஒரு காலத்தில் ப்ளாக் ஒழுங்காக எழுதும் காலத்தில் நம்ம ஊர் தமிழ் சினிமா பற்றி நிறைய கவலைப்பட்டதுண்டு. காதலைத் தவிர வேறு எதுவும் ஏன் நம் சினிமாவில் வருவதே இல்லை. வேறு வேறு genres-ல் ஏன் படம் வருவதில்லை. ஏன் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடணும். கட்டாயம் பாட்டுகள் வேணுமா? ……. இப்படியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபமாக வரும் படங்கள் நிறைய வித்தியாச வித்தியாசமாக வருகின்றன. ’செட்’ போட்டு எடுத்த படங்களை வித்தியாசமாக இயற்கைச் சூழலோடு ’16 வயதினிலே’ படம் எடுத்து ஒரு மாற்றத்தைப் பாரதிராஜா கொண்டு வந்தது போல் இப்போது நான் இந்தக் காலத்திற்கு “பீட்சாவிற்குப் பிறகு” என்ற ஒரு எல்லைக்கோட்டைக் கொண்டு வந்துள்ளேன். அப்படத்தை ஒட்டியும், பின்னும் வந்த பல நல்ல படங்கள் தமிழ் சினிமா மீது ஒரு நல்ல நம்பிக்கையைக் கொண்டு வந்தன.


இதே போல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல மாறுதல்கள் நான்கு வந்து விடாதா என்ற ஒரு நம்பிக்கையும் மனதின் ஓரத்தில் சின்ன ஒரு மொட்டாக இருக்கிறது.

மலருமா ….?
 கடவுளுக்கே வெளிச்சம் !

 பிரலாபம் 1 … இனி வரும்





 *

Monday, April 03, 2017

934. A CUP AFTER MANY A SLIP





*
முன்கதை ...

27 ஆண்டுகளுக்கு முன்பே 7.8.92 அன்றே அரசினால் கையெழுத்திடப்பட்ட லே அவுட் உள்ள பகுதியில், approved plots என்பதால் அதிக விலைக்கு வீட்டடி மனைகள் வாங்கினோம். மனைகளை விலை பேசி முடித்த பின், அரசின் ஆணைப்படி பூங்காக்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட இடங்களை விலை பேசி விற்க முனைந்தனர். குடியிருப்போர் கடந்த 20 ஆண்டுகளாக இதனை எதிர்த்துப் போராடி வந்தோம். 

அந்தக் கதையின் தொடர் இது .....

*
இன்று - 3.4.17 - நடந்தது .....


நாடெல்லாம் சுற்றினோம்.
மாநகராட்சியைச் சுற்றிச் சுற்றி வந்தோம்.
அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராகச் சந்தித்தோம்.

ஆண்டுகள் பல கடந்தன.

விடியும் என்று காத்திருந்தோம்.

செடிகள் நட்டோம் ... மரங்களாக வளர்ந்தன.
திட்டங்கள் போட்டோம் .. ஆனால் ஒன்றும் நகரவில்லை.

  


நீதி மன்றங்கள் ஏறினோம்.
சட்டங்கள் எங்கள் பக்கம் நின்றது.
சட்டங்கள் அளித்த நீதி எங்களோடு நின்றது.
ஆயினும் நீதிக்குள் நடப்புகள் அடங்கவில்லை.




புதிய தீர்ப்புகளோடு அதிகார மையத்தை இணைக்க முயன்றோம்.
தடைகள் ... தடுப்புகள் ... சோகங்கள் தான் மிஞ்சின.





எங்கள் ராசி.
எங்கள் நியாயத்தைக் கேட்க மூவர்
துணைப் பொறியாளர்.. மூத்த பொறியாளர் ... ஆணையர்


எங்கள் குரல் அவர்கள் காதில் விழுந்தன.
மூவருக்கும் எங்கள் நியாயம் புரிந்தது.
வாழி நீவீர்.



காவல் துறை காவலுடன் சட்டம் நிறைவேறுகிறது.






இதில் எங்களுக்கு ஒரு பெரும் ஆச்சரியம்.
இந்த மூவரின் தார்மீக ஆவேசம்
எங்களையே கதி கலங்க வைத்தது.

மகிழ்ச்சியில் மக்கள்



சட்டம் கை கொடுக்க,
அதிகாரம் இடம் கொடுக்க,
காவல் படையின் உதவியோடு
இன்று
எங்கள் பூங்கா எங்கள் கண்முன் மலர்கிறது.
வேலையில் தீவிரம்

      துணைப் பொறியாளர்  திரு. மணியன்





முழு உதவியைத் தந்த துணைப் பொறியாளர்












இனியும் தடங்கல் ஏதும் வாராது என்ற துணிவில் நிற்கிறோம்.
எங்கள் எல்லோர் கனவுகளிலும் வளர்ந்த பூங்கா
இனி
நிஜமாகவே எங்கள் கண்முன் உருப்பெருகிறது.







பூங்காவை மீட்ட இரு சிங்கங்கள்




பி.கு. 

இறுதியாக எங்களுக்காக வாதாடிய எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரியவரான வக்கீலய்யா அவர்களுக்கு எங்கள் நன்றி.  (அவர் உத்தரவு கிடைத்தால் அவர் பெயரையும் பகிர்கிறேன்.) 

எங்கள் பூங்காவைப் பார்க்க மூத்த பொறியாளரும், ஆணையரும் வருவார்கள் என்ற செய்தி  வந்தது. அவர்கள் இருவரையும் ’பொட்டிக்குள்’ அடைத்துவிட ஆவலுடன் இருந்தேன். வரவில்லை இன்று. வரும்போது அடைத்து விடுவேன்!!!



*